நடிகை அமலா பால் – இயக்குநர் விஜய், விவாகரத்து கோரி மனுத்தாக்கல்!

279

இயக்குநர் விஜய் – நடிகை அமலா பால் ஆகிய இருவரும் 2014-ம் ஆண்டு சென்னையில் திருமணம் செய்துகொண்டார்கள். இது காதல் திருமணம் ஆகும். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதால் விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. அமலா பால் திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து சினிமாவில் நடித்துவருவதால் இதுதொடர்பாக இருவருக்கும் இடையே பூசல்கள் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்பட்டது.

இயக்குநர் விஜய்யின் தந்தையும் தயாரிப்பாளருமான ஏ.எல். அழகப்பன் இதுபற்றி கூறும்போது: விஜய் – அமலா பால் தொடர்பாகப் பலவிதமாகப் பேசிவருவது தெரியும். இந்த நேரத்தில் நான் சொல்லவருவது ஒன்றுதான் – வெளிவந்துள்ள செய்திகள் உண்மையே. அமலா பால் படங்களில் நடிப்பது குறித்து எங்கள் அதிருப்தியைத் தெரிவித்தபிறகும் அவர் தொடர்ந்து புதுப்படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். எங்களிடமோ ஏன் விஜய்யிடமோ கூட கலந்தாலோசிக்கவில்லை. இதனால் அவர்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது.

சில சண்டைகளுக்குப் பிறகு இனிமேல் நடிக்கமாட்டேன் என்று கூறினார். ஆனால் அவரால் அந்த வார்த்தையைக் காப்பாற்றமுடியவில்லை. அவருடைய குடும்பத்தினருடன் பேசினோம். ஆனால் அவர் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. எங்களுக்கு மகனின் வாழ்க்கைதான் முக்கியம். அதனால் சட்டரீதியாக இதை எதிர்கொள்கிறோம் என்றார்.

இது குறித்து இயக்குநர் விஜய் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: சில நாள்களாகவே நானும், அமலாபாலும் பிரிவது பற்றி வெளிவரும் எண்ணற்ற செய்திகளைப் படித்து வருகிறேன். அவற்றுள் வதந்திகளும், கற்பனைக் கதைகளும்தான் மிக அதிகம். நானும் அமலாவும் பிரிகிறோம் என்ற செய்தி உண்மைதான், ஆனால் மற்ற எல்லா தகவல்களும் முற்றிலும் பொய்யானது.எங்களின் பிரிவுக்கு என்ன காரணம் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். என்னுடைய நெருங்கிய நண்பர்களும், ஒரு சில ஊடக நண்பர்களும் இதைப் பற்றி வெளிப்படையாக பேசுமாறு கேட்டுக்கொண்டாலும், என் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை நான் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. ஒரு சராசரி தந்தையாக மகனின் வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த பிரச்னைகளால் நொந்து போன என் தந்தை, தன் மனதில் சரி என்று பட்டதை ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டியில் சொன்னது, இந்த பிரச்னையைத் திசை திருப்பியது.

இயல்பாகவே சமுதாயத்தின் மீதும், பெண்கள் மீதும் அதிக அக்கறையும், மரியாதையும் கொண்டவன் நான். எனது இயக்கத்தில் வெளியான ஒன்பது படங்களும், பெண்களின் சுயமரியாதையை பிரதிபலிக்கும் வண்ணமாகதான் இருந்திருக்கிறது. அமலா தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால், திருமணத்துக்குப் பிறகும் அவரின் விருப்பத்துக்கு என்னால் முடிந்த ஆதரவை கொடுத்து வந்தேன். அப்படி இருக்கும்போது, திருமணத்துக்குப் பிறகு அமலா நடிப்பதால்தான் நாங்கள் விவாகரத்து பெறுகிறோம் என்று பரவும் செய்திகள் அனைத்தும் பொய்யே. நம்பிக்கை, நேர்மை ஆகிய இரண்டு குணங்களும்தான் ஒரு வலுவான திருமண வாழ்வுக்கு சிறந்த பாலமாக செயல்படுகிறது. அந்த இரண்டும் உடைந்த பிறகு திருமண வாழ்வை தொடர்ந்தால், அதில் எந்தவித அர்த்தமும் இருக்காது. நாங்கள் இருவரும் பிரிந்துவிடுவோம் என கனவில்கூட நான் நினைத்ததில்லை, ஆனால் இன்றைக்கு அது நடந்து விட்டது. மிகுந்த வலியை என் இதயத்தினுள் பூட்டிக்கொண்டு, எனது வாழ்க்கையை கண்ணியமான முறையில் தொடர நான் முடிவு செய்துவிட்டேன். எங்களின் தனிப்பட்ட உணர்வுகளை மதித்து, வீண் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று தாழ்மையுடன் வேண்டுகிறேன் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், விஜய், அமலா பால் ஆகிய இருவரும் சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்கள்.

SHARE