எனது 19 மற்றும் 29 வயதுடைய மகன்மார் சயனைட் கத்திகளால் வெட்டிக் கொல்லப்பட்டனர். யுத்தச் சூழலில் பாதிப்புக்குள்ளாகி கட்டிலில் படுத்த படுக்கையில் இருந்து கணவரும் இறந்து பிள்ளைகளையும் பறிகொடுத்த எம்மை கவனிப்பார் யாருமில்லை என்று அட்டாளைச்சேனை திராய்க்கேணி கிராமத்தில் வசித்துவரும் சின்னத்தம்பி நேசம்மா தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு அமைவான செயலணி பொதுமக்களிடமும், பாதிக்கப்பட்ட தரப்பினரிடமும் கருத்துக்களை கேட்டறியும் அமர்வு நேற்றுமுன்தினம் சனிக்கிழமை செயலணியின் வலயத் தவிசாளர் எஸ்.மனார்தீன் தலைமையில் அட்டாளைச்சேனை லொயிட்ஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை, இறக்கமாம், திராய்க்கேணி, ஆலையடிவேம்பு உள்ளிட்ட பிரதேசங்களில் வசித்துவரும் மக்கள் தத்தமது பிரச்சினைகள், கோரிக்கைகள் என்பனவற்றை ஆவண ரீதியிலான எழுத்து மூலமாகவும் வாய்மொழி மூலமாகவும் செயலணி முன் சமர்ப்பித்தனர்.
யுத்தச் சூழலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், சொத்துக்களை இழந்தவர்கள், பிற மாவட்டங்களிலிருந்து அகதிகளாக்கப்பட்டு மீள்குடியேறியவர்கள், தொழில்துறையினை இழந்தவர்கள், காணிகளை இழந்தவர்கள், உடைமைகளை இழந்தவர்கள், மத ஸ்தலங்கள் பாதிக்கப்பட்ட தரப்பினர், கல்வி வாய்ப்பினை இழந்தவர்கள், சமூக பொருளாதார பின்னடைவை சந்தித்தவர்கள், அங்கவீனர்களாக ஆக்கப்பட்டவர்கள் என சுமார் 120 க்கு மேற்பட்ட தமிழ், முஸ்லிம் இனங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு தமது முறைப்பாடுகளைப் பதிவு செய்தனர்.
அவர் மேலும் கூறுகையில்,
69 வயதுடைய நான் தற்போது அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட திராய்க்கேணி கிராமத்தில் வசித்து வருகின்றேன். கல்முனைப் பிரதேசத்தினை சொந்த இடமாகக் கொண்ட நான் கடந்த 1990 காலப்பகுதியில் திராய்க்கேணியில் வசித்து வந்தேன்.
அக்காலப் பகுதியில் கோயிலுக்கு அருகில் வந்துகொண்டிருந்த எனது 19 மற்றும் 29 வயதுடைய மகன்மார் சயனைட் கத்திகளால் வெட்டிக் கொல்லப்பட்டனர். யுத்த சூழலில் பாதிப்புக்குள்ளாகி கட்டிலில் படுத்த படுக்கையில் இருந்து கணவரும் இறந்து பிள்ளைகளையும் பறிகொடுத்த எம்மை கவனிப்பார் யாருமில்லை. எமது துன்பம் தினமும் தொடர்ந்து கொண்டே செல்கின்றது என்றார்.
வெள்ளைத் தம்பி அப்துல் கரீம்,
58 வயதுடைய நான் செங்கலடி பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள உறுகாமம் கித்துள் பிரதேசத்தில் வாழ்ந்து வந்தேன். எனக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர். 1990.08.16ஆம் திகதி எமது கிராமத்திலிருந்து நாம் வெளியேற்றப்பட்டோம். யுத்த சூழலில் நாம் மிகுந்த அச்சத்துடனேயே வாழ்ந்து வந்தோம். இரவு நேரமானால் நாங்கள் வீடுகளில் இருப்பதில்லை. வயல் நிலங்களிலும் சேனைப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் பிரதேசங்களுக்கும் சென்று விடுவோம்.
கைக்குழந்தையினை எடுத்துக்கொண்டு சோளப் பயிர்ச்செய்கை இடத்திற்குச் செல்லும் நாம் இருவர் அப்பயிர்களுக்கிடையில் மறைந்துகொண்டு கொட்டும் பனி யிலும் பூச்சிக்கடிகளுக்குள்ளும் நித்திரை செய்வோம். இவ்வாறாக நாம் இருவர் நித்திரை செய்யும் தருணத்தில் மற்றைய இருவர் எங்களை காவல் காப்பர். இவ்வாறாக பல வருடங்கள் நாம் சொல்லொணா துயரங்களுடன் வாழ்ந்து வந்தோம். இவ்வாறாக தினமும் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு வந்த நேரத்தில் இராணுவத்தினரால் நாம் பாதுகாப்பாக மகாஓய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தங்கவைக்கப்பட்டோம்.
அச்சந்தர்ப்பத்தில் 65 வயதுடைய எனது தந்தையும், 60 வயதுடைய எனது தாயும் வயோதிபம் காரணமாக எம்மோடு நடந்து வருவதற்கு முடியாததால் அங்கேயே அவர்கள் இருந்தனர். சில தினங்களுக்குப் பின்னர் எமது தாயும் தந்தையும் படுகொலை செய்யப்பட்ட செய்தி கேட்டேன். செய்வதறியாது திகைத்து நின்றேன். இவ்வாறாக சில காலம் சென்றபின் அப்பிரதேசத்திற்குச் சென்றபோது எனது தந்தையினையும் தாயினையும் கொலை செய்து அருகில் உள்ள மடுவில் போட்டு புதைத்ததாக ஒருவர் கூறினார். நாம் என்ன பாவம் செய்தோம்? இப்படியாகவா எனது தாய், தந்தையின் உடல்கள் அடக்கம் செய்யப்பட வேண்டும் என என்னிடம் நானே கேள்விகளைக் கேட்டுக்கொண்டே நாட்களைக் கடத்திவந்தேன். என்னதான் எம்மால் செய்ய முடிகின்றது? தாய் தந்தையினை இழந்து தவித்த எம்மிடம் பதிவு பதிவென்று பலர் வந்து தரவுகளைச் சேகரித்துச் செல்கின்றனர். எமக்கு எதுவும் கிடைத்ததாக இல்லை என்றார்.
அலியார் ஹவ்வாப்பிள்ளை
68 வயதுடைய 5 ஆண் பிள்ளைகளினதும் 4 பெண் பிள்ளைகளினதும் தாயான நான் செங்கலடி பிரதேச செயலப் பிரிவின் கீழுள்ள உறுகாமம் கிராமத்தினை பூர்விகமாக கொண்டு வாழ்ந்து வந்தேன்.
கடந்த 1990.08.08 ஆம் திகதி வழமை போல் ஏறாவூரில் உள்ள எனது மூத்த மகளின் வீட்டிற்கு எனது கணவர் ஏழு வயதுடைய மகனுடன் சென்று விட்டார். எட்டு நாட்களாகியும் சென்றவர் மீள வரவே இல்லை. என்ன நடந்ததென்பதை அறியும் பொருட்டு ஏறாவூரில் இருந்து வருபவர்களை விசாரித்தோம். எந்த தகவலும் எட்டவில்லை.
பின்னர்தான் கேள்விப்பட்டேன், எனது இளைய 7 வயது மகனும் கணவரும் உறவினர் ஒருவரின் வீட்டில் இருந்தபோது அவ்வீட்டில் இருந்த அனைவரையும் இனந்தெரியாதவர்கள் வீட்டு வாசலில் வைத்து வெட்டிக் கொன்றுவிட்டதான செய்தியினை. இறந்த கணவரின் முகத்தினைக்கூட இறுதியாக பார்க்கமுடியாத துர்ப்பாக்கியம் எனக்கு நேர்ந்தது. அந்த மரண சம்பவத்திலும் சிறு ஆறுதல் செய்தி என் காதில் எட்டியது. என் கணவரினை கட்டியணைத்தவாறு இருந்த எனது ஏழு வயது மகனை குத்தியபோது அவரின் தலைக்குப் பக்கத்தால் சென்ற கத்தி எனது கணவனின் வயிற்றில் குத்துப்பட்டதால் பீறிட்ட இரத்தம் மகனில் உடலில் தெறிப்பததைக் கண்ட மகன் மயக்கமுற்றதால் மகனும் இறந்து விட்டதாக எண்ணி மகனை விட்டுச் சென்றுள்ளனர்.
தற்போது அந்த அகோர சம்பவத்துடன் தொடர்புபட்ட எனது மகன் மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் பார்த்து வருகின்றார். அவர் தற்போது கல்முனைப் பிரதேசத்தில் திருமணம் முடித்துள்ளார் என்றார்.
தம்பியப்பா அழகம்மா
பாலமுனைக் கிராமத்தின் அருகில் உள்ள திராய்க்கேணிப் பிரதேசத்தில் வசித்து வரும் நாம் வறுமைப்பட்ட குடும்பத்தில் இருந்து கொண்டு வாழ்ந்து வருகின்றேன். எனக்கு ஏழு பிள்ளைகள். எனது கணவர் கடந்த 1990களில் நடைபெற்ற யுத்த காலத்தில் இனந்தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்டார்.
எனது வீட்டிற்கு அருகில் உள்ள கோயிலடியில் அவர் சென்று கொண்டிருந்தபோது வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கணவரின் இழப்பினைத் தொடர்ந்து எனது குடும்பத்தினை கரைசேர்க்க நான் படாத பாடில்லை. எனக்கு உருப்படியான நிவாரணமேதும் இதுவரை கிடைக்கவில்லை.
அல்லல்பட்டு வாழ்வதுதான் தமிழினத்தின் நிலையா? எமக்கு விடிவு கிட்டுவது எப்போது? நாமும் சமூகத்தில் மற்றவர்களைப்போல் வாழக்கூடிய நிலை வேண்டி எமக்கும் உரிய நிவாரணங்கள் தரப்பட வேண்டும் என்றார்.
சம்சுல் மக்கீன் ஜெலீல்
பாலமுனை ஹுஸைனியா நகர் பொது அமைப்புக்களின் தலைவராகிய நான் எமது மக்களின் விடியலுக்காய் பல்வேறு தரப்பினரிடமும் எமது நிலையினை தெரியப்படுத்தி வருகின்றேன். இருந்தாலும் எமது மக்களுக்கு இதுவரை உரிய நிவாரணங்கள் கிடைக்காமையால் மிகுந்த மன வேதனையடைகின்றேன்.
எமது மக்கள் உறுகாமம், ஏறாவூர் ஆகிய பிரதேசங்களிலிருந்து வந்து ஹுஸைனியா நகரில் அகதிகளாக்கப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். பல்வேறான தொழிற்றுறைகளைக் கொண்டும் நிலவளத்தினைக் கொண்டும், பொருளாதார ஈட்டல்களையும் கொண்டு செயற்பட்டவர்கள் தற்போது செய்வதறியாது குறுகிய நிலப்பரப்பில் கூலித் தொழில் மேற்கொண்டு அன்றாட ஜீவனோபாயத்தினை நடத்தி வருகின்றார்கள்.
இம்மக்களின் நலனுக்காக இழந்த விவசாயக் காணிகளுக்குப்பதிலாக மாற்றுக் காணிகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும், இழந்த சொத்துக்களுக்கும் பொருளாதாரத்திற்கும் ஏற்ப நஷ்டஈடுகள் வழங்கப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல் சகல வசதிகளையும் கொண்ட வீடமைப்புக் கிராமமொன்றை உருவாக்கித் தருவதோடு எமக்கான நிரந்தரத் தீர்வை பெற்று எமது மக்களும் சுயகௌரவத்துடன் வாழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருமாறு வேண்டுகின்றேன் என்றார்.
மகஜர் கையளிப்பு
இதேவேளை 1990 காலப்பகுதியில் விடுதலைப் புலிகளால் அகதிகளாக வெளியேற்றப்பட்ட உறுகாமம் மற்றும் மன்னார் பிரதேச மக்களால் அவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் செயலணியினரிடம் கையளிக்கப்பட்டது.
அம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையில் நிலவிய யுத்தச் சூழலின்போது பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. உடைமைகள் அழிக்கப்பட்டன, மக்கள் வேண்டுமென்றே அகதிகளாக்கப்பட்டனர். பொருளாதார இழப்புக்கள், அகதிகளாக மக்கள் வாழ வேண்டிய அவலநிலை ஏற்பட்டன. குறிப்பாக இலங்கையின் சகல இன மக்களினதும் சமூக, பொருளாதார, அரசியல், கல்வி, கலை, கலாசார, பண்பாட்டு வாழ்வியல் போன்ற அனைத்துத் துறைகளையும் பாதித்துள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செங்கலடி- – பதுளை ஏ- 5 வீதியின் 78 சதுர கிலோமீற்றர் பரப்பில் இயற்கை வனப்பும் வளமும் நிறைந்த உறுகாமம் பிரதேசத்தில் 78 தமிழ்க் குடும்பங்களும், 148 முஸ்லிம் குடும்பங்களும் இன வேறுபாடற்று கடந்த 1990களுக்கு முன்னர் சமாதானமாக வாழ்ந்து வந்தனர்.
4,150 ஹெக்டெயர் நிலப்பரப்பில் நெற்செய்கையினையும், 3,925 ஹெக்டெயர் நிலப்பரப்பில் சேனைப் பயிர்ச்செய்கையினையும் மேற்கொண்டு வந்த பூர்வீக குடிமக்களான உறுகாமம் பிரதேச மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு வேண்டுமென்றே படுகொலை செய்யப்பட விடுதலைப்புலிகளால் திட்டம் தீட்டப்பட்டது. இதன்போது பல அப்பாவி முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப்பட்ட போதிலும் எஞ்சிய மக்கள் சுமார் ஆறாயிரம் அரச படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அப்பிரதேச மக்கள் அகதி முகாம்களில் வாழ்ந்து பின்னர் மீள்குடியேற்றக் கிராமங்களில் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வந்நனர்.
அந்த வகையில் பாலமுனை ஹுஸைனியா நகர்ப்பிரதேசத்தில் குடியமர்த்தப்பட்டுள்ள உறுகாமம் பிரதேச மக்களின் ஹுஸைனியா நகர் மீள்குடியேற்றக் கிராமம் சுமார் 135 குடும்பங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இவர்களின் வீடமைப்புப் பணிக்காக 25 ஆயிரம் ரூபாய் பணமும், 13 பேர்ச் காணித் துண்டும் வழங்கப்பட்டதுடன், அரசாங்கத்தின் பணிகள் நிறைவடைந்து விட்டன. இன்று இக் கிராமத்தில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழந்து வருகின்றன. இன்று வரை அந்த மக்கள் தமது ஜீவனோபாயத்துக்கு வழியின்றி மிகவும் கஷ்டப்பட்டு தமது வாழ்வைக் கொண்டுசெல்கின்றனர். விவசாயக் காணிகள் தமிழர்களினால் பலவந்தமாக அபகரிக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் காணிகளுக்கான ஒப்பங்கள் தமிழர்களின் பேர்களுக்கு புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. விவசாயிகளான எமக்கு மாற்றுக்காணிகளை வழங்குங்கள். இழந்த சொத்து செல்வங்களுக்கான நஷ்டஈடுகளை பெற்றுத் தாருங்கள். வீடமைப்பு வசதிகளை பெற்றுத் தாருங்கள் சகல வசதி வாய்ப்புக்களும் கூடிய ஒரு கிராமம் ஒன்றை உருவாக்கித் தாருங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளன.