வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பொது மக்கள் தமிழ் மொழியில் அவசர பொலிஸ் அழைப்புகளை மேற்கொள்ள புதிய தொலைபேசி இலக்கங்கைள அறிமுகப்படுத்தும் நிகழ்வு பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவால் நேற்று (09.09.2016) வவுனியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இந்ந நிகழ்வில் வவுனியா மாவட்ட பொதுமக்கள் 0766224949 என்ற இலக்கத்துடனும் மன்னர்ர் மாவட்ட பொதுமக்கள் 0766226363 என்ற இலக்கத்துடனும் தொடர்பு கொண்டு 24 மணிநேரமும் தமிழ் மொழியில் உதவிகளையும் முறைப்பாடுகளையும் செய்துகொள்ளமுடியும்.
அமைதி, நல்லிணக்கம், சகவாழ்வு என்பவற்றை ஏற்படுத்தும் முகமாகவும் பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் தொடர்பை விஸ்தரிக்கும் முகமாகவும் இத்திட்டம் இலங்கையில் முதன் முதலாக வவுனியாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிவில் பாதுகாப்புகுழுக்களின் பிரதிநிதிகள் சிலருக்கும் மேற்படி இலக்கத்திற்கு இலவசமாக அழைப்புகளை ஏற்படுத்துவதற்கு ஏற்ற தொலைபேசி சிம் அட்டைகளும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
குறித்த அங்குரார்ப்பண நிகழ்வில் பொலிஸ்மா அதிபர் மற்றும் வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர், பொலிஸ் அதிகாரிகள், மத குருமார், வர்த்தக பிரதிநிதிகள், சிவில் பாதுகாப்பு குழுக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.