சன்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த கொலை வழக்கில் சிக்க போகிறார்?

272

 

மிக் போர் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டத்தில் நடந்த ஊழல் குறித்த தகவல்களை வெளியிட்டதே சன்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கு காரணமாக இருக்கலாம் என இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

rajapaksa-family-colombo-telgraph1

பெறுமதியற்ற27 ரக மிக் விமானங்கள் நான்கை கொள்வனவு செய்ய போலி நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் பெருந்தொகை பணம் தரகு பணமாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.

லசந்த விக்ரமதுங்க தனது சன்டே லீடர் பத்திரிகையில் இது சம்பந்தமான தகவல்களை வெளியிட்டு வந்ததால், ராஜபக்ஸ அரசாங்கத்திற்கு பெரும் அழுத்தங்கள் ஏற்பட்டன.

இந்த நிலையில், சில மாதங்களாக பின்தொடரப்பட்டு வந்த லசந்த இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் திகதி நான்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்யவும் 4 விமானங்களை பழுதுபார்க்கவும் அந்த விமானங்களை உற்பத்தி செய்யும் உக்ரைன் நிறுவனத்திடம் விமானங்களையும் ஆயுதங்களையும் கொள்வனவு செய்ய பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருக்கும் லங்கா லொஜ்ஜிஸ்டிக் நடவடிக்கை எடுத்தது.

எனினும் பண கொடுக்கல் வாங்கல்களை அமெரிக்காவின் வேர்ஜினியா மாநிலத்தில் உள்ள விலாசத்தில் இருக்கும் பேலிமீசா ஹொல்டிங் மேற்கொண்டது.

இந்த நிறுவனமும் விமான கொள்வனவு தொடர்பான விடயத்தில் தரப்பாக இருந்து வந்தது. எனினும் இந்த நிறுவனம் போலியான நிறுவனம் என பின்னர் தெரியவந்துள்ளது.

ஊழல் மிக்க இந்த கொடுக்கல் வாங்கலில், உக்ரைனுக்காக அப்போதைய இலங்கையின் தூதுவர் உதயங்க வீரதுங்க சம்பந்தப்பட்டிருந்தார்.

மிக் விமான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணைகளை நடத்தினால், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவின் குடியுரிமை கூட பறிக்கப்படலாம் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்த ஜூன் மாதம் கூறியிருந்தார்.

இந்த நிலையில், மிக் விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரதான ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் அண்மையில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைகள் கடந்த 7 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்ததுடன் புதிய அரசாங்கம் பதவியேற்றப்பின்னர், இந்த கொலை தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு மாற்றப்பட்டது.

இதனையடுத்து கொலை சம்பந்தமான பல தகவல்கள் வெளியாகியுள்ளன. லசந்த கொலை, ஊடவியலாளர்கள் உபாலி தென்னகோன், கீத் நொயார் ஆகியோர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் ஒரே அணியே சம்பந்தப்பட்டுள்ளது என சாட்சியங்கள் கிடைத்தன.

லசந்தவின் கொலை தொடர்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். லசந்தவை கொலை செய்ய இரண்டு அணிகள் ஈடுப்படுத்தப்பட்டிருந்தன.

இவ்வாறான நிலையில், கொலை செய்ய யார் உத்தரவிட்டது என்பதை அறிய விசாரணையாளர்கள் கூடிய கவனம் செலுத்தி வருகின்றனர்.

லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்படும் முன்னர், மிக் கொடுக்கல் வாங்கலில் பெரிய ஊழல் நடந்திருப்பதாகவும் இதில் கோத்தபாய ராஜபக்ஸவுக்கு அதில் தொடர்பு இருப்பதாகவும் சன்டே லீடர் செய்தி வெளியிட்டிருந்தன் மூலம் தனக்கு அவதூறு ஏற்படுத்தப்பட்டதாக கூறி கோத்தபாய ராஜபக்ஸ வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பான செய்திகளை சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு தடைவிதிக்கப்பட்டது.

கோத்தபாய ராஜபக்ஸவின் உத்தரவுக்கு அமைய செயற்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் ஊடகவியலாளர் ஒருவர் நீதிமன்றத்திற்கு செல்ல அனுமதிக்கவில்லை.

ஏனைய ஊடகங்கள் வரவில்லை நீங்கள் மட்டுதான் வந்துள்ளீர்கள், அறிவைப்பயன்படுத்துங்கள், இதனால் ஏற்படும் பின்விளைகள் பற்றி சிந்தியுங்கள் என பொலிஸ் அதிகாரி ஊடகவியலாளரிடம் கூறியிருந்தார்.

இப்படியான சூழ்நிலையில், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போர் வெற்றிகளில் திளைத்திருந்த நேரத்தில் 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி லசந்த விக்ரமதுங்க, அத்திட்டிய பிரதேசத்தில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி அன்றைய தினம் 12 மணியளவில் உயிரிழந்தார்.

இந்த கொலையின் பின்னர், லசந்தவின் செல்போனை வைத்திருந்த கே. பியவங்ச மற்றும் பீ. ஜேசுதாசன் என்ற வாகனங்களை பழுதுபார்க்கும் நிலையத்தின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டனர்.

ஜேசுதாசன் பொலிஸ் காவலில் இருந்த போது 2011 ஆம் ஆண்டு இறந்து போனர்.

மற்றைய நபரான இாணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியான பியவங்ச, நீதவானின் அறையில் வழங்கிய வாக்குமூலத்தின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

எனினும் தற்போது நடத்தப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், லசந்த கொலை சம்பவம் தொடர்பாக ராஜபக்ஸவினரில் ஒருவர் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

SHARE