சிங்களமயமாக்கல் புதிய செயற்பாடல்லாதபோதும் 30 வருடகால யுத்தத்தின் பின் இது மிகத் தீவிரமாக உள்ளது.

734

 

பழையனவற்றை ஊறுபடுத்தல் திட்டமிட்ட சிங்களமயமாக்கல் இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகத்தில் ஏற்படுத்தப்படுகின்றமையை சமூகச்சிறப்புகள் அமைப்பு வெளியிட்டது.

திட்டமிட்ட, அதிகரித்த பரவலான சிங்களமயமாக்கல் வரலாற்று முக்கியமான தமிழிடங்களில் குறிப்பாக வடக்கு, கிழக்கு, மலையகத்தில யுத்தத்திற்கு பின்பான சூழலில் ஏற்படுத்தப்படுகின்றது. பல தசாப்தங்களாக இலங்கையின் அரசுக்கள் சிங்களமயமாக்கலை ஏற்படுத்தி வருகின்றது.

சிங்களமயமாக்கல் புதிய செயற்பாடல்லாதபோதும் 30 வருடகால யுத்தத்தின் பின் இது மிகத் தீவிரமாக உள்ளது. இது யுத்தத்தின் வடுக்களை ஆற்ற உதவாது.

அரசாங்கம் அபிவிருத்தி, பாலம் கட்டல், தெரு அமைத்தல் என்பனவற்றை செய்கின்றபோதிலும் தமிழ்மக்களது உரிமைகளை மதிக்கவில்லை.

சிங்களமயமாக்கல், அரசு திட்டமிட்ட குடியேற்றங்கள், காணி ஆக்கிரமிப்பு, இராணுவ ஆக்கிரமிப்பு, எல்லைகளை மாற்றல், கிராமங்களின் தமிழ் பெயர்களை சிங்களப் பெயர்களாக மாற்றல் என்பனவாகும்.

சிங்களமயமாதல் தமிழரின் கலாச்சார நிகழ்ச்சிகளிலும், சமய நிகழ்ச்சிகளிலும், பொருளாதார செயற்பாடுகளிலும், பொதுசேவை ஆட்சேர்ப்பிலும் உள்ளடக்கப்பட்டு உள்ளது. இலங்கையின் கல்வித்திட்டத்திலும் சிங்களமயமாதல் காணப்படுகின்றது. ஆனால் தமிழ்ச்சமூகம் பாரிய யுத்த அழிவில் இருந்து இன்னமும் மீளவில்லை. அழிக்கப்பட்ட ஆலயங்கள், இறந்தவர்களுக்கான உணர்வுபூர்வமான அஞ்சலிகள் என்பவற்றிற்கு இன்னமும் இடம் இல்லை.

சிங்களமயமாதலில் மிகவும் முக்கியமான அம்சம் இராணுவ மயமாக்கல். தமிழ்பிரதேசத்தின் சாதாரண பொதுநிர்வாகம் இராணுவக் கட்டமைப்பினாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றது. வடக்கு கிழக்கு மட்டுமல்லாது மலையகத்திலும் தமிழ் மக்கள் மீது இராணுவக்கட்டுப்பாடு உள்ளது. இவை சிங்களவர்கள் தமிழர்கள் மீது ஆட்சிபுரிதலை இலகுபடுத்தி உள்ளதுடன், தமிழ் மக்களிடையே ஒருவகை அச்ச உணர்வையும் நிலைநிறுத்தி வைத்துள்ளது. யுத்தம் முடிந்து 6 வருடங்களான போதிலும் பயம், சந்தேகம், நம்பகத்தன்மையின்மை என்பன தமிழ் சிங்கள இனங்களுக்கு இடையே பாரிய அளவில் உருவெடுத்து உள்ளது. உண்மையினை ஏற்றுக் கொள்ளாது 2015 தை மாதத்திற்கு பின் தமிழ் தேசியத்தை முடக்கும் நடவடிக்கைகள் நடைபெறுகிறது.

நல்லிணக்கம் ஏற்படாது, இனமுறுகல் நிலையே இன்றும் காணப்படுகின்றது. இதனால் நாடு மேலும் முனைவாக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. மகிந்த அரசு யுத்தத்தில் வென்றது. மிகவும் பலவீன எதிர்க்கட்சியை உடையது. ⅔ பெரும்பான்மை பலத்தினை பாராளுமன்றில் அரசமைப்புக்கு கட்டுப்பட்டு இருக்கவில்லை. இது பகுதிச் சர்வாதிகார ஆட்சியினை நடத்தியது. 2015 தேர்தல்கள் குடும்ப ஆட்சியினை முடிவுக்கு கொண்டுவந்து சிங்கள இன ஆட்சியினை ஏற்படுத்தி உள்ளது.

சிங்களத் தேசியம், தமிழ்ச் சமூகத்தின் உரிமைகள் பற்றி அக்கறைப்படுவதாக இல்லை. தமிழர்கள் தமது உரிமைக்காக குரல் கொடுக்க முடியவில்லை. தம்மீதான ஒடுக்குமுறைகளிற்கு எதிர்ப்பினை காட்ட மட்டுமே முடிகின்றது. இங்கு கடும் சிங்கள பௌத்த வாதத்தினை சிங்களமயமாதலின் ஆழத்தினையோ ஆராயவில்லை. ஆனால் மகிந்தா அரசின் யுத்தத்திற்கு பின்பான சிங்களமயமாதலின் சாட்சியத்தினை எடுத்துக்காட்ட உள்ளது.

2009 யுத்தத்தின் பின்னர் யாழ்ப்பாணத்தின் இராணுவமயமாக்கலின் சின்னமாக காணப்படும் ஒரு வீதி ஒழுங்கு சமிக்ஞை

1. முன்னுரையும் பின்னணியும்

வரலாற்றில் இலங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் தனித்தனியே வாழ்ந்து வந்தனர். ஆனால் சுதந்திரத்திற்குப் பின்பு 1948ல் இவ்வுறவுகள் கடினமடைந்தன.

சுதந்திரத்திற்குப் பின் பிரித்தானியரால் தமிழர்களுக்கு கூடிய சலுகைகள் அளிக்கப்பட்டன என்ற நிலையை சிங்களவர் கூறினர். அதற்குப் பின் தமிழருக்கு எதிரான பல சட்டமூலங்கள் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டன.

1948ஆம் ஆண்டு குடியுரிமைச்சட்டம் 1 மில்லியன் தமிழர்களை தோட்டத் தொழிலாளர்களாக இந்தியாவில் இருந்து வந்தவர்களை நாடற்றவர்களாக்கியது. 1949ஆம் ஆண்டு குடியுரிமைச்சட்டம் அவர்களுக்கான வாக்குரிமையினை இல்லாது செய்தது. இந்தச் சூழ்நிலையில் தமிழ் சிங்கள இனங்களுக்கிடையிலான விரிசல் அதிகரித்தது. தமிழர்களுக்கு எதிராக பல கலகங்கள் ஏற்பட்டன. சுதந்திரத்திற்கு பின் முதலாவது இலங்கை முழுவதுமான தமிழர் அழிப்பு 1956ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் கல்லோயாத்திட்டத்தில் ஏற்பட்டது.

இனப்படுகொலைகள் 1958, 1977, 1981, 1983 இலும் நடைபெற்றன. பின் 1990 தொடக்கம் 2009 வரை ஆங்காங்கே நிகழ்ந்து உள்ளன. 2007இல் அரசு, வீடுகளற்ற தமிழர்களை கொழும்பில் இருந்து அகற்றி, பேரூந்துகளில் பொலிஸ் காவலுடன் வவுனியா தடுப்பு முகாம்களிற்கு அனுப்பியது. ஆரம்பத்தில் 500 மக்களை வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பிற்கு அனுப்பி வைத்தது.

சிங்களம் மட்டும் நிகழ்ச்சித்திட்டத்தை இலங்கை அரசு மேற்கொண்டு வருகின்றது. ஒரே நாடு, ஒரே மக்கள் என்பது இதனையே குறிக்கும். 1956ம் ஆண்டு தனிச்சிங்களச்சட்டம் அரசினால் முதலில் எடுக்கப்பட்ட சட்டமூலம். அடுத்து 1979ம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம், இலங்கையில் அவசரகால நிலையினை அமுல்படுத்தியது. இது கடந்த 40 ஆண்டு காலமாக நாட்டில் அமுலில் இருந்தது. இச்சட்டம் சிங்களமயமாக்கலுக்கு உறுதுணையாக அமைந்தது. அரசு ஆதரவு தமிழ் எதிர்ப்புக் கொள்கைகளுடன் பொலிஸ், இராணுவம் முற்றுமுழுதாக சிங்கள நிறுவனங்களாகத் திகழ்ந்தன. சட்டத்தை அமுல்படுத்தும் பகுதியும் தமிழர்களுக்கு எதிரான அடிப்படை உரிமைகளை அடக்குவதில் உதவின.

சிங்கள பௌத்த பேரினவாதம் இலங்கையினைச் சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதில் தீவிரம் கொண்டு உள்ளது. உலகின் பார்வைக்கு இலங்கை பௌத்த நாடாகத்தான் தெரிகின்றது. இங்கு உள்ள அரசமைப்புச்சட்டம் பின்னர் பௌத்தமதத்தினையே பாதுகாக்கின்றது.

இதனை ஏற்கமறுப்பவர்கள் நாட்டின் எதிரிகளாகவே பார்க்கப்படுகின்றனர். இத்தகைய பின்னணியில் சிறுபான்மைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு என்பது எச்சந்தர்ப்பத்திலும் சாத்தியப்படாத ஒன்றே. அதேபோல் 2009இல் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கான விசாரணை, ஐநா மனித உரிமை அவையின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி, அத்தீர்மானம் இலங்கை அமைச்சரவைத் தீர்மானம்போல் அமைந்து உள்ளது.

கோட்பாட்டு அடிப்படையில் மட்டுமல்லாது, அரசு பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை உருவாக்கி உள்ளது. சிங்கள பௌத்தமயப்படுத்துவதற்காக பொதுவாக சர்வதேச தொண்டு நிறுவனங்களில் வேலை செய்யும் வடபகுதி புனர்வாழ்வு, அபிவிருத்தித் திட்டங்களும் பௌத்த தீவிரவாதத்தினை மேம்படுத்த உதவுகின்றது.

இதற்கு எளிய உதாரணமாக நயினாதீவு நாகவிகாரையின் பாலத்தின் அலங்காரத்தையும் எழுவை தீவு பாலத்தின் அடிப்படை வசதிகள் இல்லாத தன்மையை சுட்டிக் காட்டலாம்.

2. தமிழர்களின் வரலாற்றுப் பாரம்பரிய இடங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள்

இலங்கை அரசு வரலாற்று ரீதியாக அபிவிருத்தி திட்டங்கள் என்ற போர்வையில் தமிழ் பகுதியில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவி வருகின்றது.

காணி அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் இலங்கை அரசால் தமிழ் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்க முடிந்தது. தமிழர்களின் வரலாற்று முக்கிய இடங்களினை இக்காணித்திட்டங்கள் அபகரித்துக் கொண்டது. இது கிராம விஸ்தரிப்பு, நீர்ப்பாசனம், மீன்பிடி, இளைஞர் அபிவிருத்தி என்ற பலகோணங்களில் நிகழ்ந்துள்ளது. இவை உண்மையில் அபிவிருத்தியில் கைகொடுக்கவில்லை. மாறாக சிங்களமயப்படுத்தலுக்கு உதவியது. இதற்கு உரியகுழு நிதியும் சர்வதேங்களில் இருந்து பெறப்பட்டதே.

1931-47இல் விவசாய அமைச்சராக இருந்த D.S சேனநாயக்காவினால் நில அபகரிப்புத்திட்டம் உருவாக்கப்பட்டது. இலங்கை சுதந்திரம் அடைந்தபின் 1950இல் இவர் இதில் மிகவும் தீவிரம் காட்டினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிப்பளை, களவாஞ்சிக்குடி அண்டிய பிரதேசங்களை அண்டிய பகுதியினை கல்லோயா எனப் பெயரிட்டு, கிழக்கு மாகாணத்தின் அரச ஆதரவுடனான நில அபகரிப்பு தொடங்கியது. கல்லோயாத் திட்டமானது இலங்கையின் மிகப்பெரிய சிங்களக் குடியேற்றத்திட்டமாகும். தமிழ்பகுதியில் 80,000ற்கும் மேற்பட்ட சிங்களவர்கள் ஒரேயடியாகக் குடியேற்றப்பட்டனர். இவை 1949 தொடக்கம் 1952 வரை நிகழ்ந்தது. பின் 1960 வரை தொடர்ந்தது.

இத்திட்டத்தில் ஒவ்வொரு குடியிருப்புக்கும் கல்வி வசதி, பொதுநோக்கு மண்டபம், பொழுதுபோக்கு இடம், கூட்டுறவுச் சந்தை மற்றும் ஏனைய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. இவை தமிழர்களை வேறுவிதமாக ஒரே நாட்டில் பாகுபடுத்தியது.

இத்திட்டம் தமிழர்களுக்கு எதிரானது. பயனாளிகளாக ஈற்றில் தமிழர்கள் உள்வாங்கப்படவில்லை. இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்கள், தமிழர்களின் உரிமைகளை அழிப்பதாகவே அமைந்திருந்தன. இதைவிட மேலும் மோசமானது மகாவலி அபிவிருத்தி திட்டமாகும்.

மகாவலி அபிவிருத்தி திட்டம் என்பது 30 வருட குடியேற்றத் திட்டமிடலை ஜனாதிபதி ஜே. ஆர். உருவாக்கி அதனைத் துரிதமாகச் செய்ய 5 ஆண்டுத் திட்டத்தினை அமுல்படுத்தினார். இதன்மூலம் 700,000 சிங்களவர்கள் 6 வருடத்தில் குடியேற்றப்பட்டனர். மகாவலி அபிவிருத்தி திட்டம் வடக்கு கிழக்கு பிரதேசத்தின் தமிழர்களின் செறிவை ஐதாக்கியது. தமிழ் ஈழத்தின் அடையாளங்களை பௌத்தரீதியில் உடைத்தது. ⅔ பங்கு மகாவலித் திட்ட நிலங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்தது. இவை அனைத்தும் சிங்களவர்களுக்கு காணி அபிவிருத்திக் கொள்கையில் வழங்கப்பட்டுவிட்டது. இது தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கையினை நிர்மூலமாக்கும் திட்டமாகும்.

இத் திட்டங்களை அமுல் செய்ததனால் உதவி வழங்கும் நாடுகள் இலாபம் ஈட்டின. (திட்டலாபம் – செலவு விகிதம் 1 : 57) மற்றும் கடனை மீளப்பெற்றனர். அடுத்து இதனால் வடக்கு கிழக்கில் இனப்பரம்பலில் பாரிய மாற்றம் ஏற்பட்டது. இதனை இலங்கை அரசு பயன்படுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களின் எல்லைகளை மீள எதேச்சையாகத் தீர்மானித்தது. குணரட்ண என்பவரது கூற்றுப்படி, மனிதனது வரலாறு நிலத்துடனும், நீர்ப்பாசனத்துடனும் இணைந்தது. இலங்கை அரசும் மகாவலி அபிவிருத்தி அமைச்சு மூலம் தமிழர் விடுதலைப் போராட்டத்தை அடக்க முனைந்தது.

இதனால் 2000ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, மன்னார், திருகோணமலை பிரதேசங்களில் தமிழ்ப் பெரும்பான்மை சிதைவடைந்தது. தமிழ்பேசும் மக்களின் பிரதிநிதித்துவம் வடகிழக்கில் குறைக்கப்பட்டது. இவ்வாறு இலங்கை அரசு மறைமுகமாகவே தமிழர்களின் நிலங்களை சிங்களமயமாக்கிவிட்டது.

1987ஆம் ஆண்டு 13வது திருத்தச்சட்டம் மாகாணங்களுக்கு முழு அதிகாரத்தைக் கொடுக்குமாறு கூறுகின்றது. இதனை கொழும்பு முழுமையாக அமுல்படுத்தவில்லை. ஏனெனில் காணி அதிகாரத்தை இன்னமும் கொழும்பே கைக்கொள்ள எண்ணி உள்ளது. ஆளுநருக்கு முழு அதிகாரமும் இருந்தது. ஆளுநரை ஜனாதிபதியே 5 வருடத்திற்கு ஒரு தடவை நியமிப்பதாக இருந்தும், அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க அரசு தயக்கம் காட்டுகின்றது. அடுத்து நீர்வழங்கலையும் தேசிய மட்டத்திலேயே கட்டுப்படுத்த அரசு முனைகின்றது. அடுத்து பெரும் அபிவிருத்தித்திட்டம் என்ற பெயர்களில காணி அபகரிப்பினை மத்திய அரசு மேற்கொள்ளும். நகர அபிவிருத்தி என்ற பெயரிலும் தமிழ் பிரதேசங்களில் சிங்களமயமாக்கல் நிகழ்கின்றது.

மகாவலி அபிவிருத்திக்கு வெளிநாட்டு ஆலோசனை பெறப்பட்டது

USAID, UNDP, FAO போன்ற நிறுவனங்களின் ஆலோசனையும், மேற்கத்தைய யப்பானிய அரசுகளின் நிதி உதவிகளுடன் இவை மேற்கொள்ளப்பட்டன. தமிழ்ப்பிரதேசங்களில் சிங்கள மக்களை இணைத்தல், இன ஒற்றுமைக்கு உதவுதல் என்ற தொனியில் இலங்கை அரசு நிகழ்ச்சிநிரலை முன்வைத்து வெளிநாடுகளைக் கவர்ந்தது. ஆனால் இத்திட்டம் இன முரண்பாட்டினை மேலும் அதிகரித்து இன அழிப்பில் முடிவடைந்தது.

யுத்தம் முடிந்தபின் மகாவலித்திட்டத்தினை வடமாகாணத்திலும் ஊடறுக்கின்றனர். இது வவுனியாவில் 1700 ஹெக்டேயர் நிலத்தில் சிங்களவர்களைக் குடியேற்றுவதற்கான திட்டமாகும். நெடுங்கேணி, வவுனியா வடக்கில் கிவுலு ஓயா நீர்ப்பாசனத்திட்டம் என்ற பெயரில் இது தொடங்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் தொடங்கப்பட்டமை பற்றி வவுனியா வடக்கு பிரதேச செயலருக்கோ அதிகாரிகளுக்கோ ஆரம்பத்தில் தெரிந்து இருக்கவில்லை.

பங்குனி 2010இல் 4.8 மில்லியன் இலங்கைப்பணம் வவுனியா வடக்கில் கொச்சான்குளம் திட்டத்திற்கு மகாவலி அபிவிருத்தி திட்டங்களில் நிதி ஒதுக்கப்பட்டது. இது இப்பகுதியில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்காகவே. கொச்சான்குளத்திற்கு கல்லோயா என சிங்களப்பெயரிட்டு 165 சிங்களக் குடும்பங்கள் 200 ஏக்கர் நெற்காணிகளில் குடியமர்த்தப்பட்டனர். இவர்களுக்கு உரிய உட்கட்டமைப்பு வசதிகளை இலங்கை இராணுவம் ஏற்படுத்திக் கொடுத்தது.

வவுனியா மாவட்ட செயலக 2010 – 2011 கையேட்டில் கொச்சான்குளம் என்ற பெயர் அகற்றப்பட்டது. அக்குளத்தினை 1983இல் கைவிடப்பட்ட குளம் எனப்பெயரிட்டு உள்ளனர்.

அரச நீர்ப்பாசனத்தைக் கையில் வைத்து இருப்பதன் முக்கியத்துவத்தை நீர்வழங்கல் அமைச்சர் சந்திரசேனா 2010இல் இலங்கை சனாதிபதிக்கு நன்றிகூறி, 30 வருட மகாவலி அபிவிருத்தித் திட்டத்திற்கு மீளவும் நிதிவழங்கியமையைப் பாராட்டினார்.

இரணைமடு நீரினை யாழ்ப்பாணம் கொண்டு வருவதற்காக 2012 தை மாத அரச தீர்மானமும், ஏனைய குளங்களையும் மகாவலித் திட்டத்துடன் இணைத்து புனரமைத்து, கொழும்பில் இருந்தபடியே நேரடியாக சிங்களமயமாக்கலை மேற்கொள்வதற்கே. தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் அடர்காடுகள் சிங்கள, முஸ்லீம் குடியேற்றங்களிற்காக அழிக்கப்பட்டு வருகின்றது.

2.1 உத்திமிக்க சிங்களக் குடியேற்றங்கள்

யுத்தத்தின்பின் பெருமெடுப்பில் சிங்களக் குடியேற்றங்கள் தமிழ் பிரதேசங்களில் நிகழ்கின்றது. யுத்தத்தில் தமிழ் மக்களின் அழிவும், பாரிய இடப்பெயர்வும் இதனைச் சாதகமாக்கி உள்ளது. இலங்கை அரசும், இராணுவமும் இக்குடியேற்றத் திட்டங்களிற்கு வசதி செய்து கொடுக்கின்றது. எல்லைப் பிரதேசங்களில் வசிக்கும் தமிழ் மக்களிடையே இது உளவியல்ரீதியான தாக்கத்தினை ஏற்படுத்தி உள்ளது.
கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் கரையோரக் கிராமங்கள் முல்லைத்தீவு, திருகோணமலை மாவட்ட எல்லைகளில் உள்ளது. 1960இல் 21 குடும்பங்கள் மீன்பிடியில் ஈடுபட்டன. 84 – 85ஆம் ஆண்டுகளில் இப்பிரதேசம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. 2009இல் 77 சிங்களக் குடும்பங்கள் அனுராதபுரத்தில் இருந்து குடியேற்றப்பட்டனர். 2011இல் 45 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. பிரதேச மக்களின் எதிர்ப்பினையும் மீறி கொக்குளாய் கிழக்கு கிராம சேவகரிடம் பதிவுகள் நிகழ்த்தப்படுகின்றன. இதன்மூலம் அவர்கள் விரைவில் காணி உறுதிகளைப் பெற்றுவிடுவர்.

1983இல் கொக்கிளாய் மேற்கு, முள்ளியவளை, கறுத்தங்கேணி, முகத்துவாரம், தென்னைமாமரவடி, முந்திரிகைக்குளம், அக்கறைவெளி, கல்யாணபுரம், மறியமுனை ஆகிய பிரதேசங்களில் இருந்து தமிழ் மக்கள் பாதுகாப்புப் படையினரால் துரத்தப்பட்டனர். 2016 வரை மீள்குடியேற்றம் பூரணப்படுத்தப்படவில்லை. தமிழ்மக்களின் மீள்குடியேற்றம் அரசினால் மனப்பூர்வமாக மேற்கொள்ளப்படவில்லை.

3. வடமாகாண மீள்கட்டமைப்பும், அபிவிருத்தியும்

மகாவலித்திட்டம் கல்லோயாத் திட்டம்போல் இன்று வடக்கில் சனாதிபதி செயலணியின் நேரடிச் செயற்பாடுகளாலும், சிங்களமயமாக்கல் எவ்வித தடையும் இன்றி வடக்கில் நிறைவேறுகின்றது.

2009இல் 19 பேர் கொண்ட வடமாகாண அபிவிருத்திக்குழு உருவாக்கப்பட்டது. ஜனாதிபதி செயலணியினால் இதில் ஒரு தமிழரோ பெண்ணோ இல்லை. அரசு விசேட வர்த்தமானி அறிவுறத்தல் விடுத்திருந்தாலும், இது தொடர்பாக, ஆனால் சாதாரண சட்டங்கள் இங்கு அமுல்படுத்தப்படவில்லை.

விசேட செயலணி, பாதுகாப்புப் படையுடன் இணைந்து, அரசின் மீள்குடியேற்றம், அபிவிருத்தி என்பவற்றை பொறு, தனி, சமூக நிறுவனங்களூடாக இணைந்து செய்கின்றது.

PTF (ஜனாதிபதி செயலணி), சமூக உள தேவைகள், மனித உரிமைகள் விடயத்தில் வெளிப்படைத் தன்மையினைக் கொண்டு இருக்கவில்லை. இது வெளியில் தெரியும் அபிவிருத்தியில் மட்டும் கரிசனை கொண்டது. இது யுத்தத்திற்கு பின்பான அபிவிருத்தித் திட்டங்களை கேள்விக்குறியாக்கி உள்ளது.

இராணுவ மேலாதிக்க மனப்பான்மை செயலணி சனாதிபதியின் சகோதரர் பசில் இராஜபக்ச தலைமையில் இயங்கியது. உள்ளூர் மக்களது அபிலாசைகள் புறக்கணிக்கப்பட்டு உள்ளது. சனாதிபதி செயலணி இறுதிக்கட்ட யுத்தத்தில் உருவாக்கப்பட்ட கட்டமைப்பு. இது சர்வதேச தலையீடுகளைத் தவிர்ப்பதற்கான ஒரு இராஜதந்திரப் பொறிமுறையாகும்.

3.1 LLRC
இது பொதுமக்கள் மீதான தாக்குதல், சட்டத்திற்கு முரணான கொடுமைகள், சரணடைந்த விடுதலைப் புலிகளின் கொலைகள் என பாதுகாப்புப் படைகள் புரிந்த குற்றங்களை மறைப்பதற்கு அல்லது சர்வதேசம் தவிர்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்டது. 2015 ஆட்சிமாற்றத்துடன் 2009இல் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் சர்வதேசத்தினால் இருட்டடிப்புச் செய்யப்பட்டு விட்டது.

2010 ஆடியில் ஐ நா செயலர் பான்கிமூன் 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து இறுதிக்கட்ட யுத்தத்தில் சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டதா என ஆராய்ந்தார். இலங்கை அரசு நிபுணர் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கவில்லை. ஆனால் அவர்கள் தகவல்களை மின்னஞ்சல்கள் மூலம் திரட்டினர். இலங்கை அரசு சர்வதேச தொண்டு நிறுவனங்களை சந்தேகம் கொண்டு பார்த்து அவற்றின் செயற்பாடுகளுக்கும் இடையூறுகளை ஏற்படுத்தியது. ஐ நா செயலரின் நிபுணர்குழு தருஸ்மன் தலைமையில் இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலை எனவே குறிப்பிட்டது. மேலும் முன்னாள் ஐ நா மனித உரிமைச் செயலர் நவநீதம்பிள்ளை அம்மையாரும் இறுதியுத்ததில் இந்தியா சுமார் 40,000 பொதுமக்களின் உயிர்களைக் காப்பாற்றத்தவறிவிட்டது என்று குற்றஞ்சாட்டி உள்ளார்.

ஜனாதிபதி செயலணியைவிட அரச சார்பற்ற நிறுவனங்களை இணைக்கும் செயலகத்தை நிறுவி, அவற்றின் செயற்பாடுகளுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறப்படல் வேண்டும் என்ற நிலையினை ஏற்படுத்தியது.

ஈற்றில் செயற்படுத்தப்பட்ட திட்டங்கள் தமிழ்மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக அமையவில்லை. பல தொண்டு நிறுவனங்கள் தமது வேலையை இழக்காது இருப்பதற்காக அரசின் செயற்பாடுகளுக்கு ஏற்ப தமது திட்டங்களை மாற்றின. இவற்றில் மிகவும் முக்கியமானது சிங்களக் குடியேற்றத் திட்டங்களாகும்.

மிகவும் அண்மையிலும், அரசு தான் விரும்பும் செயல்களையே செய்கின்றது. திரு. S.B . நவரட்ணா, சனாதிபதி செயலணிச் செயலாளரின் மார்கழி 22, 2011ம் திகதிய கடிதத்தில் சிங்கள மக்களை முல்லைத்தீவு மாவட்டத்தில் குடியேற்றுவதற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் உதவ வேண்டும் எனக் குறிப்பிட்டார். தமிழ் பிரதேசங்களில் மீளக்குடியேற வேண்டும் என குறிப்பிடப்பட்டோர் மகாவலித்திட்டத்தில் வெலிஓயாவில் குடியேற இருந்தவர்கள். இதேபோல் 1990ல் இடம்பெயர்ந்த முஸ்லீம்களையும் குடியேற்ற வேண்டும் என்பதில் முனைப்புக்காட்டி, 2009ல் தமிழ் அழிவுகளை மறைக்க முற்படுகின்றனர்.

அரசினால் இவ்வாறு மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்புப் பற்றிய விழிப்பு, தமிழ் மக்களிடையோ, சர்வதேசத்திடமோ இல்லை. குறிப்பாக USAID, UNDP, FAO என்பன இதனைக் கண்டுகொள்ளாது, இத்திட்டங்களை ஊக்குவித்தன. பொருளாதாரரீதியிலும், தொழில்நுட்பரீதியிலும் யுத்தத்துக்குப் பின்பான சூழலிலும் வரலாறு மீளவும் சுழலுகின்றது. தமிழர்கள் அபிவிருத்தித் திட்டங்களில் இருந்து புறக்கணிக்கப்படுகின்றது. அதுவும் இன்று வடமாகாணத்தில், இதில் வேதனை மிக்கது யாதெனில் இத்திட்டங்கள் யாவற்றிற்கும் சர்வதேச நிறுவனங்கள் உதவியினை வழங்குகின்றன. சிங்கள, பௌத்த இலக்குகள் மிகவும் தீவிரமாகவும், சட்டரீதியாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.

3.2 இணைந்த உதவிகள் – வடமாகாணம் 2012

இணைந்த உதவித்திட்டம் வடமாகாணத்தில் ஐக்கியநாடுகள், சர்வதேச தொண்டு நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் என்ற செயற்றிட்டத்தில் மீளக்குடியமர வேண்டிய தமிழர்களது முக்கிய பிரச்சினைகள் தவறவிடப்பட்டுள்ளது.

இதுவும் ஜனாதிபதி செயலகத்தால் மேற்பார்வை செய்யப்படுவது. இதன் கண்காணிப்பு இணைய வழியில் 3W (Who, What, Where) யார், என்ன, எங்கே சனாதிபதி செயலணியால் கட்டுப்படுத்தப்படுகின்றது. இதன் பிரயோகம் சந்தேகத்தை உருவாக்கி உள்ளது. 2004இல் சுனாமிக்குப்பின் ஐ நா அலுவலகத்தால் மனிதாபிமான அலுவல்களுக்கு என அமைக்கப்பட்ட அலுவலகம்மூலம் சுனாமிக்குப்பின் 11 வருடங்களிலும், யுத்தத்தின் பின் 6 வருடங்களிலும் அதே செயன்முறையை மேற்கொள்வது ஐயத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜனாதிபதி செயலணி உருவாக்கிய கட்டமைப்பு தேசியமட்டத்தில் எல்லாவற்றையும் அபிவிருத்தித் திட்டங்களைக் கட்டுப்படுத்தலாம். எனவே இலங்கை அரசு இதனூடாக வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் சிங்களமயமாக்கலை மேற்கொள்கின்றது. எனவே UN, NGO இதனை ஊக்குவிப்பது தமிழ்மக்களுக்கு தீங்கானதாகவே அமைகின்றது.

4. வடகிழக்கு மலையகத்தில் பெயர் மாற்றங்கள்

1958இல் இருந்து தமிழ்கிராமங்கள், வீதிகளுக்கு சிங்களப் பெயர்கள் மாற்றப்பட்டன. அரசு, உள்ளூராட்சிகளுக்கு அறிவிக்காமலேயே இவற்றைச் செய்தது. யுத்தமுடிவுக்குப்பின் இவை மிகவும் துரிதமாக வடக்கு, கிழக்கு, மலையக்கத்தில் மேற்கொள்ளப்பட்டன. தமிழ்மக்களின் எதிர்ப்பையும் மீறி இவை நடைபெறுகின்றது. எதிர்ப்பவர்கள் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்படு-கின்றார்கள்.

2006இல் இருந்து 100 தமிழ் கிராமங்களின் தமிழ்ப்பெயர்கள் சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டன.

ஆகஸ்ட் 2015 இல் மன்னார் குருவில கிராமம் யோதவாவி சரணாலயம் என்று பெயர் மாற்றப்பட்டு மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு அச்சுறுத்தப்பட்டனர்

5. சிங்கள மயமாக்கலுக்கும் இராணுவக்குடியேற்றங்களிற்கும் இடையிலான தொடர்பு

வடக்கு கிழக்கு மலையகத்தில் இராணுவமே பிரதான செயற்பாட்டு காரணியாக அமைகின்றது. காணி உரிமை விடயத்திலும் இராணுவ சிவில் நிர்வாக அமைப்பு, சிங்களவர்களுக்கு சார்பாக இயங்கி வருகின்றது. தமிழ் பிரதேசங்களில் இராணுவ வியாபகம், தமிழ் மக்களின் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேசிய பாதுகாப்பு பாதீட்டு ஒதுக்கீடு 2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் கடந்த வருடங்களைவிட 7 வீத அதிகரிப்பு. அரசு இதனை தேசிய பாதுகாப்பு கரிசனை என காரணப்படுத்தினாலும் இது சிங்கள மயமாக்கலின் நீட்சியே.

இராணுவ வீரர்களின் 3வது குழந்தைக்கு 100, 000/= வெகுமதி அளித்து அவர்களின் பிறப்பு வீதத்தினை அதிகரிக்கின்றது. இது அடுத்த சந்ததிக்கும் இன முரண்பாட்டை நடத்தும் செயல்திட்டமாகும். ஏனெனில் இலங்கை இராணுவம் என்பது முழுமையாக சிங்களவரை கொண்டது. மேலும் பல பண உதவிகள் அவர்கள் குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்றது. ஆனால் மலையகம், வடகிழக்கில் கருத்தடையை ஊக்குவித்து 500/= பணமும் கட்டாய கருத்தடையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மிக அண்மையில் இராணுவம் உல்லாச பயணத் தொழில், நகர உட்கட்டமைப்பு என்பவற்றிலும், ஹொட்டல்கள் நடத்துவதிலும் இறங்கி உள்ளது. இதனை யு9 வீதியில் நேரடியாகக் காணலாம்.

இராணுவத்தினர் தமிழர் நிலங்களில் பயிர்ச்செய்கையிலும், மரக்கறி வியாபாரத்திலும் ஈடுபடுகின்றது. இவை வடகிழக்கு பொதுமக்களாகிய தமிழருக்கு நேரடிப்பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. இங்கு சாதாரணமாக வேலையற்றோர் வீதம் 20மூ அதிகமாக உள்ளது. வடகிழக்கு மலையகத்தில் இராணுவ நிறுவனப்படுத்தப்படலானது, தமிழ் மக்களுக்கு ஒரு பாரிய பிரச்சனையாக உள்ளது.

65619 சதுர நிலப்பரப்பில் தமிழர்கள் 18,850 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் வாழ்ந்து வந்தனர். ஆனால் 2009 பிறகு பாதுகாப்புபடைகள் 7000 சதுர கிலோமீற்றர் தமிழர் நிலத்தை தனது ஆக்கிரமிப்பில் வைத்து உள்ளது. தசாப்தங்களுக்கு முன் இலங்கை இராணுவம் நிரந்தரமான இராணுவ முகாம்களை, தமிழருக்கு சொந்தமான நிலத்தில் அமைந்தது. இவை தற்போது உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் ஆலயங்கள், பொது இடங்கள் என்பனவும் அழிக்கப்பட்டு, பாரிய இன நகர்வுக்கு தமிழர்கள் உள்ளாகினர்.

யுத்தம் முடிந்தபோதிலும் இராணுவ பிரசன்னமும் ஆக்கிரமிப்பும் மிகவும் அதிகமாகவே உள்ளது. தேசிய பாதுகாப்பு என்ற காரணம் இதற்கு ஏற்றுக் கொள்ளமுடியாது எனத் தமிழ் மக்கள் நம்புகின்றனர். 2011 இல் 12,000 வீடுகளை ஆனைவிழுந்தான்(கிளிநொச்சி), முறிகண்டி (முல்லைத்தீவு), கொக்காவில், பலாலி (யாழ்ப்பாணம்) மீள அரசின் உதவியுடன் கட்டியது. இது சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றுவதற்காக ஆகும். 2010இல் பாராளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம் (நுவரெலியா). ஜனாதிபதி மகிந்த உடன் வட்டகொட தோட்டத்தில் இராணுவ ஆக்கிரமிப்பு குறித்து கூறியபோது சனாதிபதி இராணுவமுகாம் அங்கு உருவாக்கப்படும் என்று கூறினார். கிறீஸ்பூத நடவடிக்கையில் நுவரெலியா மாவட்டத்தில் இராணுவ பிரசன்னத்தில் அதிகமாக இருந்தது.

நுவரெலியாவில் நிக்கடன கொலனி, நல்லதண்ணி என்ற இடத்தில் 20 ஏக்கர் நிலம் இராணுவ முகாம் அமைப்பதற்காக வேலியிடப்பட்டது. இதில் இராணுவம், சிவனொளிபாத மலைக்கு வரும் யாத்திரிகர்களுக்கு வாகன தரிப்பிடங்களை அமைக்கவும், நிலத்தில் பயிர் செய்யவும் உத்தேசித்து உள்ளது. இவை தை 2012இல் நிகழ்ந்தவை.

வடமத்திய மாகாணத்தில் பொலனறுவையில் மதவானை என்ற இடத்தில் (தம்பரக்கடுவ) இராணுவப்பயிற்சி முகாமினை 2005இல் உருவாக்கியது. இந்த இடத்தின் பெயர் மலமண்டி என மாற்றப்பட்டது. இங்கு வாழ்ந்த தமிழர்களின் செயற்பாடுகள் குறைக்கப்பட்டது.

யுத்தத்திற்கு பின்பும் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் நில ஆக்கிரமிப்பு நிகழ்ந்த வண்ணம் உள்ளது. சம்பூர் கிழக்கு, சம்பூர் மேற்கு, நவரட்ணபுரம், கட்டகரைச்சேனை, கோணித்தீவு ஆகிய கிராமங்கள் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்து உள்ளன. 2006 ஆண்டுக்கு முன் இங்கு 1300 தமிழ் குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர். யுத்தம் முடிந்தும் இந்த நிலத்தில் சுமார் 10,000ஏக்கர் மக்களை மீளக்குடியமரவிடாது அனல் மின்நிலையம் அமைக்கும் திட்டத்தை உருவாக்க விழைகின்றனர். அனல் மின்நிலையம் அமைப்பதற்காக சம்பூர் வைத்தியசாலை, தபால் அலுவலகம், கடற்றொழில் சங்கம், கூட்டுறவுச்சங்கங்கள், விவசாய சேவை நிறுவனம் என்பவற்றிற்கு சொந்தமான நிலங்கள் அபகரிக்கப்பட்டு உள்ளன.

இதைவிட வழிபாட்டு இடங்களான சம்பூர் பத்திரகாளி அம்பாள் ஆலயம், விநாயகர் ஆலயம், நாகதம்பிரான் கோயில், கோணித்தீவு பத்திரகாளி கோயில், பிள்ளையார் கோயில், சூடைக்குடா மாரியம்மன் கோயில் என்பனவும் அபகரிககப்பட்டு உள்ளன. 2011இல் அரச அதிபர், உதவி பிரதேச செயலர், கடற்படை அதிகாரிகள் மக்களை கட்டாயப்படுத்தி இவர்களின் சொந்த இடங்களில் இருந்து அகற்றி, கொறவன், வெட்டுவான்மூலை, வேம்படிதோட்டம், கணேசபுரம், மீதனவெளி ஆகிய இடங்களில் குடியமர வைக்கின்றனர். இவை ஒன்றும் அசாதரண நிகழ்வுகள் அல்ல. தமிழ் மக்களை வடக்கு, கிழக்கு மலையகத்தில் இருந்து திட்டமிட்ட முறையில் அகற்றும் செயற்றிட்டங்களே ஆகும்.

உயர் பாதுகாப்புவலயம், யாழ் மாவட்டத்தில் 16 வீதமான நிலத்தினை அபகரித்து வைத்து உள்ளது. தற்போது, பொதுக்காணிகள், கோயில் காணிகளிலும் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இலங்கை இராணுவம் தெல்லிப்பளை, கொல்லன்கலட்டி, பலாலி விமானநிலையத்தை சூழ உள்ள கிராமங்கள், காங்கேசன்துறை, பொன்னாலைச் சந்தியில் இருந்து தொண்டமனாறு வரையான கடற்கரை பிரதேசங்கள் (மாதகல், கீரிமலை, மைலிட்டி, வசாவிளான்), மாதகல், சண்டிலிப்பாய் பிரதேசத்தில் சந்ததி சந்ததியாக மீன்பிடித்தலிலேயே தங்கி இருக்கும் மக்களின், கடற்றொழில் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளன. பௌத்த ஆலயம், மாதகலின் தனிப்பட்ட மக்களின் காணியில் கட்டப்பட்டு, 2011 மாசி 9ம் திகதி சிராந்தியினால், மகிந்தவின் மனைவியால் திறந்து வைக்கப்பட்டது.

வலிகாமதில் உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்ட பொதுமக்கள் குடியிருப்பு

ஆனால் இப்பிரதேசத்தில் வலிகாமம் வடக்கு பிரதேசசபையும் பொது சுகாதார உத்தியோகத்தர்களும் பொதுமக்களுக்கு மலசலகூடம் அமைக்க முயன்றபோது கடற்படை உத்தியோகத்தர்கள் தடுத்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தெற்கு, எலுவில்பற்று, கோரளைப்பற்று தெற்கு, கோரளைப்பற்று வடக்கு போன்ற பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து 1985 தமிழ் முஸ்லீம் கலவரத்தில் மக்கள் இடம்பெயர்ந்தனர். இவை இன்னமும் விடுவிக்கப்படாது இராணுவ கடற்படை முகாம்களாக மாற்றி, உயர் பாதுகாப்பு வலயங்களாக உள்ளது.

இப்பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் இன்னமும் மீளக்குடியமர்த்தப்படவில்லை. மேலும் அரச உதவிகளும் கிடைக்கப்பெறவில்லை. 1990 முதல் – 2014 வரை கண்ணகிபுரத்தில் இராணுவமுகாம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு இருந்து 25 தமிழ் குடும்பங்கள் இடம்பெயர நேர்ந்தது. இம்மக்கள் மனித உரிமை ஆணைக்குழு, இலங்கை பாராளுமன்ற உறுப்பினர், பிரதேச செயலகர் வெல்லாவெளி என்பவர்களிற்கு முறையிட்டும் பிரயோசனமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

1990- 2014 விசேட அதிரடிப்படையின் முகாம் கட்டுரைபுச்சி என்ற இடத்தில் அமைக்கபட்டமையாதல் சமூக மக்களுக்கு இங்கு மீளக் குடியேற முடியாது உள்னர். இப்பிரதேசத்திலே மணல் அகழ்வு நிகழ்கின்றது. தும்பான்கேணி, திக்கோடை பிரதேசங்களில் இராணுவமுகாம் அமைக்கப்பட்டமையினால் 10 குடும்பங்கள் மீளக்குடியமரமுடியாது உள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட எல்லைக் கிராமமான வலைகல் இல் இராணுவ முகாம் அமைக்கப்பட்டமையினால் அப்பிரதேச மக்களும் மீளக் குடியமரமுடியாத நிலை உள்ளது.

1985ம் ஆண்டில் இருந்து ஏறாவூரின் 4ம் குறிச்சி, 5ம் குறிச்சி என்பனவற்றை உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி தமிழ் மக்களை மீளக் குடியமர விடாது இன்னமும் தடுத்து உள்ளனர். தமிழ் மக்கள் மீளக் குடியமர அனுமதிக்காத இடத்தில் ஈராக் அரசின் உதவியுடன் அரபுக்கல்லூரி கட்டப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல நிலங்கள் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டு “இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டன” என பெயரிடப்பட்டு உள்ளது. நிலச் சொந்தக்காரரை உள்ளே நுழைய இராணுவம் விடுவதில்லை. இவ்வாறான பல இடங்களில் இராணுவம் பௌத்த விகாரைகளைக் கட்டி வருகின்றது. உதாரணமாக முல்லைத்தீவு பரந்தன் வீதியில் கண்டாவளைச் சந்தியில் காணி உரிமையாளரின் அனுமதி இன்றி பௌத்த விகாரையை இராணுவம் கட்டி உள்ளது.

A 39 வீதிக்கும் A 9 வீதிக்கும் இடையே 148 சிறிய இராணுவ முகாம்களும், 14 பெரிய இராணுவமுகாம்களும் அமைந்து உள்ளன. இப்பிரதேசம் 132km நீளமுடையது.

மாசி 2012இல் தரவன்கோட்டை, மன்னார் நகரில். 564 பெண்கள் 9 கிராமங்களில் இருந்து கையெழுத்திட்டு தமிழ் பாராளுமன்ற உறுப்பினருக்கு வேண்டுகோள் விடுத்து நீதி அமைச்சர், காணி ஆணையாளர், மன்னார் அரசஅதிபருக்கும் அதில் தரவன் கொட்டியில் இராணுவமுகாம் அமைக்கப்படுவதால் பெண்களின் தனிப்பட்ட பாதுகாப்பு, அந்தரங்கங்கள் பாதிக்கப்படும் எனக் குறிப்பிடப்’பட்டு இருந்தது.

2009 யுத்தத்தின் பின்னர் முல்லைத்தீவில் அமைக்கப்பட்ட பாரிய இராணுவ முகாம்

6. தமிழ் அடையாளத்தை அழித்தலும், வரலாற்று சின்னங்களை அழித்தலும், எல்லைகளை மாற்றலும்

அரசு திட்டமிட்டு தமிழ் எல்லைக்கிராமங்களின் எல்லைகளை மாற்றுகின்றது. இவை சிங்கள மாவட்டங்களுடன் இணைக்கப்படுகின்றன. விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல்களில் தமிழ் பிரதேசங்களில் எல்லைகளை மாற்றுவதால் தமிழர்களின் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டு வரும்.

உதாரணமாக புல்மோட்டையில் தென்னை, மாமரவடி பிரதேசம் பகுதியாக 2010இல் பதவிசிறிபுர பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்டது. இப்பகுதி மக்களுக்கு ஏன் இவ்வாறு மாற்றப்பட்டது என்பது விநயமாக உள்ளது. எல்லைக்கிராமங்ளின் பெயர் மாற்றங்கள் பொலனறுவையில் மன்னம்பிட்டி என்ற இடம் வெலிக்கந்த எனவும், பிள்ளையாரடி, மண்முனை வடக்கு, தற்போது இலுக்குளம்) எனவும், மன்னம்பிட்டி – மன்னம்பிட்டியா எனவும் சேறுவில் சேருவில எனவும், முத்துகல், முத்துக்கல எனவும், தம்பரகணுவ எனவும் தமிழ் கிராமங்கள் சிங்களப் பெயர் இடப்பட்டு, பொலனறுவ மாவட்டத்துடன் இணைக்கபட்டது. இதேபோல் தற்போதும் வவுனியா, முல்லைத்தீவு, அனுராதபுர மாவட்டங்களில் பெயர் மாற்றம் நிகழ்கின்றது. இறுதியாக வடபகுதியில் நயினாதீவினை நாகதீப என பெயர் மாற்றி, பௌத்தவிகாரை விஸ்தரிக்கப்படுகின்றது.

6.1 மேய்ச்சல் நிலங்களில் சிங்களக்குடியேற்றங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள், மந்தை வளர்ப்புக்காக மேய்ச்சல் நிலங்களை வைத்து உள்ளனர். இவை பெரிய மதவானை எனக் கூறப்படுகின்றவை. முத்துக்கல் பிரதேசத்தில் இவை காணப்படுகின்றன. பொலனறுவ மாவட்டத்தில் இணைக்கப்பட்ட பெரிய மதவானை, மொனராகல மாவட்டத்திற்கும், மட்டக்களப்பு மாவட்டத்தில எல்லையில் உள்ளது. இம் மேய்ச்சல் நிலங்களில் தெகியத்ததகண்டிய பிரதேசத்தில் இருந்து சிங்கள மக்கள் வந்து குடியேறி உள்ளனர். பெரிய மதவானையில் 1800 சதுர ஏக்கர் நிலத்தில் 30 சிங்களக் குடும்பங்கள் வந்து குடியேறி 500 ஏக்கர் நிலத்தை தம்வசப்படுத்தி உள்ளனர்.

குடியேறியவர்கள் அவரை, மிளகாய், மரக்கறி என்பனவற்றைப் பயிரிட்டு வருகின்றனர். மேலும் தமிழ் மக்களது கால்நடைகளையும் கொன்று வருகின்றனர். ஒரு வருடத்தில் சுமார் 80,000 கால்நடைகள் இவர்களது செயற்பாட்டால் இறந்து உள்ளன. தமிழ் மந்தை வளர்ப்போர், சட்டவிரோத சிங்களக் குடியேற்றங்களால் தமது ஜீவனோபாயம் பாதிக்கப்பட்டமையை, விலங்கு விவசாய திணைக்களம், பிரதேச செயலர், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முறையிட்டும் பயனேதும் இல்லை.

6.2 இந்து ஆலயங்களின் அழிப்பு

350க்கு மேற்பட்ட இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டதற்கு ஆவணங்கள் உள்ளன. ஆனால் இதைவிட அதிகமான அளவு ஆலயங்கள் சேதமடைந்துள்ளன. பல ஆலயங்கள், உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்து உள்ளன.
இவ்வாறான உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்த திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு அருகில், தமிழ் மனித என்புக் கூடுகளின் புதைகுழி கண்டறியப்பட்டது.

இதில் 1982ம் ஆண்டு 25 சதமும் காணப்படுவதால், அண்மைய மனித புதைகுழியே. இலங்கை நீதித்துறையின் மலினத்தன்மையினை ஐ நா மனித உரிமைச் செயலர் ஹுசைன் அவர்கள் 2015 புரட்டாதி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார் என்பதனை இங்கு குறிப்பிட வேண்டும்.

இந்துக்களின் புனிதமான பிரதேசத்தில் பௌத்த விகாரையும் கட்டி உள்ளனர். 2009 பிறகு வடக்கு கிழக்கில் பௌத்த விகாரை கட்டுவது மும்மரமாக நடைபெறுகின்றது. அரச மரங்களும் நடப்படுகின்றது. தமிழ் மக்களது வரலாற்று முக்கியமான சிவனொளிபாதமலையையும் 1970க்கு பிறகு சிறிபாத என மாற்றி பௌத்த துறவிகளிடம் கொடுக்கப்பட்டது. சைவ கிரியைகள் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. இது 1900 ஆண்டில் இருந்து தமிழ் மக்களால் தரிசிக்கப்பட்டு வருகின்றது.

நுவரெலியா, இரத்தினபுரி மாவட்டங்களில் சைவக்கோயில்களில் பௌத்த சின்னங்களை வைக்கும் செயல்கள் நடைபெறுகின்றது. கதிர்காம முருகன் கோயிலையும் பௌத்த ஆலயமாக மாற்றி விட்டனர். இவ்வாறே இராவணன் வெட்டினையும் பௌத்த அடையாளமாக மாற்றி விட்டனர். யாழில் தொல்லியல் முக்கியமான கந்தரோடை பிரதேசத்தில் இராணுவம் 1995 பௌத்த விகாரை கட்டியது. போலி வரலாற்றை திணிக்க முயல்கிறது.

கந்தனின் மாணிக்கபிள்ளையார் கோயில் அமைந்துள்ள வீதியினை, மாணிக்கப்பிள்ளையார் வீதி என அழைப்பர். ஆனால் இதனை 2011 இல் சிங்கள பௌத்த இளைஞர் சங்க வீதி என பெயர் மாற்றம் செய்தனர். ஆனால் அப்பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள் இதனை விரும்பவில்லை. ஆனால் பெயர் மாற்றப்பட்டு விட்டது.

இந்துக்களின் புண்ணிய தீர்த்தமான கிண்ணியா வெந்நீர் ஊற்றினை, இலங்கை தொல்லியல் திணைக்களமே பதிவு செய்து உள்ளது. ஆனால் திருமலை அரச அதிபர் மேஜர் ஜெனரல் TRD சில்வா பௌத்த வழிபாட்டு இடமாக மாற்றி உள்ளனர். 2010இல் (ஐப்பசி 5இல்) அரச அதிபர் இதன் வரலாற்று ஆவணங்களை அகற்றி, அரச மரத்தை நட்டு பௌத்த ஆலயம் அமைக்க அத்திவாரம் இட்டார்.

கற்சிலைமடுவில் சித்திரை 2010இல் பண்டாரவன்னிய அரசனின் நினைவிடத்தை இராணுவம் அழித்தது. வைகாசி 2011 இல் கொக்கிளாய் வைத்தியசாலை பிரதேசத்தில் பௌத்த சிலையை அரசு அமைத்தது.

6.3 முள்ளிவாய்க்கால் நிலைமை

முள்ளிவாய்க்கால் பகுதிக்கு ஓகஸ்ட் 22 2011 இல் இரு தமிழ் பெண்கள் சிங்களவருடன் சென்றபோது, எங்கிருந்து வந்தீர்கள், என்ன செய்கிறீர்கள்? எங்கே போகப் போகின்றீர்கள்? இங்கு தமிழர்கள் உள்ளனரா? என கேட்டனர். தமிழர்கள் சில பகுதிகளுக்கு செல்வதை இராணுவம் விரும்பவில்லை. இதனையே பல இடத்தில் கேட்டனர். அவர்களின் காட்சி பொருட்கள் சிங்களவருக்கு யுத்த வெற்றியை கொண்டாடும் வகையில் அமைந்திருந்தது. புதிய வரலாற்றினையும் அப்பகுதி சிங்களவர்களின் பிரதேசம் எனவும் இராணுவத்தினர் கூறுகின்றனர். எல்லா அடையாளங்களும் சிங்களத்தில் அமைக்கப்பட்டு இருந்தன.

வெள்ளாம் முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம், புதுமாத்தாளன், நந்திக்கடல் என்பவற்றில் மக்களால் கைவிடப்பட்ட துவிச்சக்கரவண்டிகள், மோட்டார் வாகனங்கள், பேரூந்துகள், லொறிகள் என்பன ஏராளமானவை முற்றாக சேதமடைந்து காணப்பட்டன. இராணுவம் மண், மரம், வாகன இரும்புகள் என்பனவற்றை விற்று வருகின்றது.

7. அரசஆதரவிலான சிங்களமயமாக்கம் – தமிழ் மக்களின் கூட்டு அடையாளத்தினை திட்டமிட்டுத் தாக்குகின்றது.

யுத்தம் முடிந்த பின்பும் கலாச்சார யுத்தம் தீவிரமடைந்து உள்ளது. பெரும்பான்மையினரது கலாச்சாரத்தினை தமிழர் மீது திணிக்கும் தன்மை கடந்த 6 ஆண்டுகளாக அதிகரித்து உள்ளது.

தமிழர்களது சமூக கலாச்சார பெறுமதிகளை இவ்வாறு செய்ய சிங்கள கலாச்சாரம் புகுத்தப்படுகின்றது.
உதாரணமாக புது வருடத்தில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான கிட்டிப்பொல்லும் கிளித்தட்டும் அகற்றப்பட்டு அழகு இராணி போட்;டியும், கிறீஸ் மரமேறுதலும் இராணுவத்தால் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. சமூக ஒன்றுகூடல்களுக்கு இராணுவத்தினை கட்டாயம் அழைக்கவேண்டிய நிலை உள்ளது.

இவற்றினை மக்கள் விலத்தினால் கடுமையான இராணுவ கெடுபிடிகளுக்கு உள்ளாக நேரிடும். இவ்வாறு இராணுவம் சிங்கள கலாச்சாரத்தை தமிழரிடையே புகுத்துகின்றது.

பாதுகாப்பான சூழலில் பல பெண்கள் சிங்கள இராணுவத்தின் பாலியல் தேவைக்கு பயன்படவேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர். இது ஒரு இராணுவ ஆதிக்க பாலியல் வல்லுறவாக கொள்ளப்படல் வேண்டும். உண்மையான நல்லிணக்கத்தினை இவை ஏற்படுத்தாது.

பன்னமா என்ற கிராமம் 1958இல் தமிழர்கள் மட்டும் வசித்தனர். கல்லோயா திட்டத்தின் பின் சிங்களவாகள் அங்கு குடியேறி, கலப்புத் திருமணம் செய்து, தற்போது இது முற்றிலும் சிங்களக் கிரமமாக மாறிவிட்டது.

வன்னியில் ஆலய திருவிழாக்கள், குடும்ப நிகழ்வுகளிலும் அழையா விருந்தாளிகளாகவே இராணுவமும் நுழைகின்றது.

8. வடக்கு கிழக்கு மலைநாடுகளில் பொருளாதாரத்தை சிங்களவர்கள் கையகப்படுத்தல்

யுத்தத்திற்குப் பின் தமிழர்கள் அபிவிருத்தி திட்டங்களில் பெருமளவு புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். சிங்கள கம்பனிகளே, இராணுவத்தின் துணையுடன் பெரும்பாலான வேலைகளில் ஈடுபடுகின்றது. இராணுவம், பௌத்த நிலையங்களைக் கட்டுவதிலும், இரும்பு வியாபாரத்திலும், மர வியாபாரத்திலும், மண் அகழ்விலும் ஈடுபடுகின்றது. பல தமிழர்களது வியாபார நிலையங்களும் உள்ளன. ஆனால் அவை இராணுவத்திற்கு கப்பம் செலுத்த வேண்டும்.

சைவ ஆலய விக்கிர திருட்டுகளும் நடைபெறுகின்றது. கட்டடவேலை, வீதிவேலை, நீர்ப்பாசனவேலைகள், தென்பகுதி அரசியல்வாதிகளின் செல்வாக்கில் சிங்களவர்களால் மேற்கொள்ளப்படுகின்றது. வடபகுதியில் தமிழர்களது வேலையற்றோர் வீதம் 20-30 வீதமான உள்ளது. ஆனால் தேசிய அளவில் 5 வீதத்தை விட குறைவு.

சிங்களவர்கள், தமிழ் பிரதேசங்களில் மண் அகழ்வு, மரம் வெட்டல் என்பவற்றை முல்லதை;தீவு, கிளிநொச்சியில் செய்து தமிழ் மக்களுக்கே விற்கின்றனர்.

8.1 முல்லைத்தீவு மாவட்டத்தில் மீன்பிடித்தொழில்

2005க்கு முன் இலங்கை அரசிடம் ⅓ கடல்பகுதி மட்டும் கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது முழுவதும் அவர்களது கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 1956இல் இருந்து 2010 வரை ‘பாடுகள்’ என்ற கடற்கரையில் மீன் பிடிப்பதற்கான எல்லைகள், பிரதேச வழமையின்கீழ் சந்ததி சந்ததியாக உரிமம் பெற்றனர். இங்கு இரண்டு வகையான பாடுகள் உண்டு.

முதலாவது கட்டு வலைக்கான பாடு. அடுத்தது கரை வலைக்கான பாடு. 1984 முதல் 56 பாடுகள் கொக்கிளாய் முதல் சாலை வரை முல்லைத்தீவில் இருந்தன. அக்காலத்தில் 10 பாடுகளுக்கு உரிய உரிமமே சிங்களவரிடம் இருந்தது. 2012இல் நூற்றுக்கு மேற்பட்ட சிங்களவாகள் குடியேற்றப்பட்டு அவர்கள் அனைவருக்கும் பாடுகள் வழங்கப்பட்டன. தமிழர்களுக்கு பாடுகளை புதுப்பிப்பதில் கூட அநீதி இழைக்கப்படுகின்றது.

இராணுவத்தின் உதவியுடன் பிரதேச செயலகத்தில் பாடுகளுக்கான அனுமதியை சிங்களவர்கள் இலகுவாகப் பெறுகின்றனர். தமிழர்களுக்கு தற்காலி அனுமதிப்பத்திரங்களே பாடுகளுக்கு வழங்கப்படுகின்றது. ஆனால் சிங்களவர்களுக்கு எவ்வித தயக்கமும் இன்றி நிரந்தர அனுமதிப்பத்திரம் பாடுகளுக்கு வழங்கப்படுகின்றது. அரசால் நிரந்தர பாடுகளுக்கு விண்ணப்பித்த தமிழ் குடும்பங்களுக்கு அவை கிடைப்பதில்லை. மேலும் நந்திக்கடலில் மீன்பிடிப்பதற்கு தமிழர்கள் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் பெறல் வேண்டும். சிங்களவர்களுக்கு எந்தவித தடையுமில்லை. இதனால் நீர்கொழும்பு, புத்தளம், சிலாபம் பகுதிகளில் இருந்து சிங்களவர்கள் இங்கு மீன்பிடியினை மேற்கொள்கின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர் பிரதேசம் 2007 இல் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டு மீன்பிடி தடை செய்யப்பட்டது. ஆனால் தற்போது கட்டுவலைபாடுகள் செயற்பட அனுமதி வழங்கப்பட்டது. இங்கு முன்னர் 7 சிங்கள குடும்பங்கள் தான் இருந்தன. ஆனால் தற்போது 35 சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன. முன்னர் மூதூரில் மீனவச்சம்மேளனம் என ஒன்றே இருந்தது. ஆனால் 2010 மீன்பிடி அமைச்சில் தமிழ் மீனவச்சம்மேளனம், சிங்கள மீனவச்சம்மேளனம், முஸ்லீம் மீனவச்சம்மேளனம் என மூன்றாக பிரித்து இயங்க வைத்து உள்ளது.

சம்பூரில் இலங்கை கடற்படை கட்டுவலைபாடினை முஸ்லீம் மீனவருக்கு கொடுத்தது. மேலும் தமிழ் மக்களது பாடுகளை சிங்களவர்களுக்கு கொடுக்க, கடற்படை வலியுறுத்துகின்றது. கடலில் பல நாள் தங்கியிருந்து தொழில்புரியும் அனுமதி முல்லைத்தீவில் தமிழருக்கு கிடைப்பதில் சுணக்கம் காணப்பட்டது.

sampoor

sampoor 2 இராணுவ ஆக்கிரமிப்புக்கு முன்னர் சம்பூரில் குடியிருப்புக்கள் காணப்படுவதும் ஆக்கிரமிப்புக்குப் பின்னர் அவை காணாமல் போயிருப்பதும்

8.2 இலங்கைக்கடற்படையின் பாடுபடு, காட்டுப்புலம், திருவடிநிலையில்

காட்டுப்புலம் திருவடிநிலையில் 115 மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு உள்ளனர். இது யாழ்ப்பாணம், சங்கானை பிரதேச செயலர் பிரிவில், சுழிபுரம் கிழக்கில் அமைந்து உள்ளது. இவர்களது சங்கத்திற்கு கங்காதேவி மீனவசங்கம் என பெயர் வைத்து இவர்கள் கரையோரத்தில் 3 கிமீ நீளம் வரை மீன்பிடிக்க முடியும். இப்பிரதேசம் 1995இல் இருந்து உயர் பாதுகாப்பு வலயமாக உள்ளது. இங்கு கடற்படை, பாரிய பௌத்த விகாரை, மற்றும் கட்டடங்களை கட்டி, மீனவர்கள் கடற்கரையில் கலங்கண்ணி மீன்பிடித்தொழில் செய்வதை தடுத்து உள்ளனர்.

தென்கிழக்கு கடற்கரையூடாக தமிழ் அகதிகளை இலங்கைக் கடற்படை, பாரிய மீன்பிடிப்படகுகளில் அவுஸ்ரேலியாவுக்கு சட்டபூர்வமற்ற முறையில் அனுப்புகின்றது. இதனால் பெருமளவு பணம், தமிழர்களிடம் இருந்து பெறப்படுவது. அவுஸ்ரேலிய அரசிடம் இருந்து அகதிகளை தடுப்பதற்கான இராஜதந்திர அரசியல் உறவையும் ஏற்படுத்தி உள்ளது. இன்றும் இதற்கான விளம்பரப்பணம் அவுஸ்திரேலிய அரசினால் இலங்கைக்கு வழங்கப்படுகின்றது.

9. கல்வியில் திட்டமிட்ட நிர்வாக மாற்றங்கள்

வரலாற்றில் உயர்கல்வியில் தமிழருக்கு பாகுபாடு காட்டியமை 1972, பல்கலைக்கழக அனுமதியில் பின்தங்கிய பிரதேசம் என வகுத்து, தமிழரின் அனுமதியினை குறைத்தது.

2011இல் சிங்களவரை, கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக நியமிக்க எடுத்த முயற்சி மக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது. யாழ் பல்கலைக்கழகத்திலும் சிங்கள மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. கிழக்கு பல்கலைக்கழகத்துடன் திருகோணமலை கடற்படையின் (Logistic studies) இணைக்கபட்டு உள்ளது.

10. பொதுநிர்வாக வேலைகளில் சிங்களவர்களை வடக்கு, கிழக்கு மலையகத்தில் நியமித்தல்

மாகாண ஆளுனர், அரச அதிபர் என்பவர்கள் சிங்களவர்களாக காணப்படுகின்றனர். மேலும் இவர்கள் சிரேஸ்ட, ஓய்வு பெற்ற கிழக்கு மாகாண, காணி ஆணையாளரும் சிங்கள இராணுவ அதிகாரியே.

இவையாவும் வடக்கு கிழக்கு மலையகத்தில் சிங்கள மயமாதலை, அரச இயந்திரம் தீவிரமாக்குவதற்கான உத்திகளாகும்.

11. ஆய்வு

இலங்கை சுதந்திரமடைந்ததில் இருந்தே இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிரான கொள்கைகளைக் கடைப்பிடிக்கின்றது. மிகவும் அண்மையில் அபிவிருத்தி என்ற போர்வையில் சிங்களமயமாக்கல் நிகழ்கின்றது. இதற்காக ஜனாதிபதிச் செயலணி தலைமையில் பாதுகாப்பு அமைச்சினால், சிங்கள பௌத்த தீவிரவாதிகளாலும் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

சிங்களவர், இராணுவம் தமிழ் மக்களை விடுதலையாக்கியவர்கள் எனக் கூறினாலும், தமிழ் மக்கள் இலங்கை இராணுவத்தை வேண்டாதவர்களாகவே பாதிக்கின்றனர். இவர்களால் மக்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள், துன்புறுத்தல்கள் தொடர்கின்றன.

அண்மையில் இராணுவ புலனாய்வு பிரிவு யாழ் மாவட்டத்தில் பல தமிழ் இளைஞர்களுக்கு சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுத்தலுக்கான பயிற்சியினை வழங்கி இருந்தது. இவை பொலிசாரிடம் பிடிபட்டபோது ஆவாகுறூப், டிலுகுறூப் உண்மைகள் மக்களுக்குத் தெரியவந்தது.

இலங்கைக்கு உதவி வழங்கும் சர்வதேச நாடுகள், நிறுவனங்கள் அரச அபிவிருத்தி மாதிரியூடாகவே வழங்க வேண்டும். ஆனால் இது தமிழர்களின் தேவைகளை புறக்கணிக்கின்றது. சிங்கள நிகழ்ச்சித்திட்டத்தையே அமுல்படுத்து-கின்றது. மேலும் ஐ நா மனித உரிமை அவைத் தீர்மானமும் எஞ்சிய தமிழர்களையும் அழிப்பதற்காக சர்வதேச அங்கீகாரத்தினை இலங்கை அரசிற்கு வழங்கி உள்ளது.

உதாரணமாக LLRC பரிந்துரையின் மீள்குடியேற்றத்தில் முல்லைத்-தீவில் முனைப்பாக சிங்களவர்கள் குடியேற்றப்படுகின்றனர். இந்திய வீட்டுத்திட்டங்கள், டிரக்டர் வசதிகள் என்பவற்றில் 25மூ வடபகுதியில் குடியேறும் சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டன.

தமிழ் பிரதேசங்களில் அரச நிர்வாகம் மூலம் நில அபகரிப்பும், எல்லைகளின் மாற்றமும் தொடர்ந்து கொண்டே உள்ளது. பல கிராமங்களிற்கு சிங்களப் பெயர்கள் சூட்டுவது தொடர்கின்றது. இவை இலங்கையில் தமிழர்களின் வரலாற்றினை இல்லாதொழிக்கும் செயற்பாடுகளாகும்.

மேலும் அரசு, போலியான சிங்கள வரலாற்றுச் சின்னங்களை வழகிழக்கில் நிறுவுகின்றது. இவை சிங்கள பௌத்தர்களை இங்கு குடியேற்றுவதற்கான முன்னோடி நடவடிக்கைகள் ஆகும்.

ஒட்டுமொத்தத்தில் சிங்கள பௌத்தக் கருத்தியலானது சகிப்புத்தன்மை அற்ற, குறுகிய நோக்கு உடைய, தமிழர்களின் உரிமைகளைப் புறந்தள்ளும் தன்மை உடையதாகக் காணப்படுகின்றது.

மகிந்த இராஜபக்ச ஒரு இலட்சிய அரசியல் வாதி அல்ல. சிங்கள இனவாதத்தவர்களில் இனவாதப் பெரும்பான்மையினைப் பெற்று சட்டரீதியற்ற முறையில் செயற்படுவர். மைத்திரி, ரணில் நயவஞ்சகமான சிங்கள பௌத்த தீவிரவாதிகள்.
12. முடிவுரை

சிங்கள அரசு நிர்வாகம் இலங்கையின் தேசிய பிரச்சினையில் தமிழருக்கு அரசியல் தீர்வு வழங்குவதில் பின்னிற்கின்றது. தமிழருக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டினை அவர்கள் கைக்கொள்கின்றனர்.

ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற தொனிப்பொருளில் வெளிப்படையாகவே சிங்களமயமாக்கலை மேற்கொள்கின்றனர். இதில் தமிழின அழிப்பு, தமிழின நகர்ப்பு, ஆக்கிரமிப்பு, குடியேற்றம், அடக்குமுறை என்பன முக்கியமானவை. இவர்கள் தமிழினப் படுகொலைகள் பற்றி எள்ளளவும் கவலைப்படவில்லை. சர்வதேசத்தின் கேள்விகளையும் அலட்சியப்படுத்தி, தங்கள் நிகழ்ச்சி நிரலினை நகர்த்துகின்றனர்.

இவை யாவையும் சாதாரண தமிழ் மக்களும், தமிழ் அரசியல் வாதிகளும் முற்றாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

இதனை உலக அரங்கில் விளக்கி, தொடரும் தமிழின அழிப்பை நிறுத்துவதற்கான சர்வதேசப் பொறிமுறையை உருவாக்குவதே எமது தற்போதைய அரசியல் இராஜதந்திர நகர்வாக அமையும். தற்போதைய உலக ஒழுங்கு ரஸ்சியா சீனா தலைமையிலான உலகத் தலைமைத்துவத்தினை நோக்கி மாறிக்கொண்டு உள்ளது. தற்போது சிரியாவில் உள்ள கலப்பு (Hybrid) ஆட்சி போல் இலங்கையில் இரண்டு அரசியல் தலைமைத்துவங்கள் இயங்கும் நிலை ஏற்படலாம். அதில் தமிழர்களின் தாயக இருப்பினைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

SHARE