ஒபாமாவை இலக்கு வைத்து பயங்கரவாத தாக்குதலா? தீவிர பாதுகாப்பில் ஐ.நா சபை

272

obama_2411893f

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 71 ஆவது கூட்டத்தொடர் இன்று நியூயோர்க்கில் ஆரம்பமாகிறது.

பலத்த பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளமை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அமெரிக்காவின் தலைநகர் நியூயோர்க்கில் நேற்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒன்றுக்கு மேற்பட்ட குண்டுகள் வெடிக்க செய்தமையால் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 29 பேர் காயமடைந்துள்ளனர். எனினும் இதுவரை உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. அதேவேளை வெடிக்காத நிலையில் சில குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த வெடிப்பிற்கு காரணம் தெரியாத நிலையில், இதுவொரு பயங்கரவாத தாக்குதல் என நியூயோர்க் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் இன்று ஆரம்பமாகும் ஐ.நா கூட்டத்தொடருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா தலைமையத்தில் நடைபெறவுள்ள பொது கூட்டத்தில் 154 நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது செயலாளர் பான் கீ மூன் ஆகியோர் ஐ.நா சபையில் உரையாற்றும் இறுதி சந்தர்ப்பம் இதுவாகும். ஜனாதிபதி ஒபாமாவின் பதவிக்காலம் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நேற்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் மிகுந்த அவதானத்தை பெற்றுள்ளது.

ஐ.நா பொது கூட்டத்தில் கலந்துக் கொள்ளும் அரச தலைவர்கள் மற்றும் பொது கூட்டம் நடைபெறும் பகுதியை சுற்றி பல்வேறு வகையில் பாதுகாப்பினை அதிகரிப்பதற்கு அமெரிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவை சென்றடைந்துள்ளார்.

எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். ஜனாதிபதியாக மைத்திரிபால பதவியேற்றதன் பின்னர் ஐ.நா சபையில் உரையாற்றும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

SHARE