ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரால் குறுகியகால ஏற்பாட்டில் செய்யப்பட்ட எழுக தமிழ் கூட்டு எழுச்சிப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று பேரணியை வெற்றியடையச் செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமைச் செயலகத்திலிருந்து கட்சிக்கொடிகளையும் தமிழர்களது அரசியல் உரிமைகள் உள்ளிட்ட அபிலாசைகளையும் எடுத்தியம்பும் எழுச்சிக்கோசங்களுடன் பிரதான வீதியூடாக நகர்ந்த மக்கள் பேரணி காங்கேசன்துறை வீதி, ஆஸ்பத்திரி வீதியூடாக யாழ். மத்திய பேருந்து நிலையத்தை சென்றடைந்து பின்னர் அங்கிருந்து முனியப்பர் கோயில் வீதியூடாக யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டப முன்றலை சென்றடைந்தது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடியிருந்த நிலையில் கட்சியால் ஒழுங்கு செய்யப்பட்ட எழுக தமிழ் கூட்டு எழுச்சிக் கூட்டம் இடம்பெற்றது.
இதில் உரைகளை கட்சியின் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளரும் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான வை.தவநாதன், யாழ். மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்), யாழ். மாநகர முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, செஞ்சொற் செல்வர் இரா.செல்வடிவேல் ஆகியோர் உரையாற்றியிருந்த அதேவேளை அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எழுச்சி உரையாற்றியிருந்தார்.
இதில் கலந்துகொண்ட பெருந்திரளான மக்கள் அரசியல் உரிமை, மீள்குடியேற்றம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, வாழ்வாதாரம் உள்ளிட்ட விடயங்களில் அரசை நோக்கி கோரிக்கை முன்வைத்ததுடன் தமிழரசுக் கட்சி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, வடக்கு மாகாணசபை ஆகியவற்றுக்கு எதிராகவும் கோசங்களை எழுப்பியதுடன் தமது வாழ்வுரிமைக்காகவும் குரல் கொடுத்திருந்தனர்.
இப்பேரணியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.