தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்காக 1987ஆம் ஆண்டு அகிம்சை வழியில் போராடித் தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாகி திலீபனின் 29 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை (26) மாலை மன்னாரில் இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அவ் அமைப்பின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் குறித்த நினைவஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது.
இன்று திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் இடம் பெற்ற குறித்த அஞ்சலி நிகழ்வின் போது சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதோடு தியாகி திலீபனின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து,மலர் தூவீ அஞ்சலி செலுத்தப்பட்டது.
-குறித்த நிகழ்வில் அருட்தந்தை ஜெகதாஸ்,மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினார் எஸ்.ஆர்.குமரோஸ்,மன்னார் சமாதாக அமைப்பின் தலைவர் அந்தோனி மார்க், சமூக சேவையாளர் சிந்தாத்துறை,பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள்,சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதே வேளை தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்காக அகிம்சை வழியில் போராடித் தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாகி திலீபனின் 29 ஆவது ஆண்டு நினைவு தினத்தை வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் இன்று திங்கட்கிழமை மாலை 6.15 மணியளவில் தனது குடும்பத்துடன் நினைவு கூறினார்.
தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம் பெற்ற அஞ்சலி நிகழ்வின் போது தியாகி திலீபனின் உருவப்படத்திற்கு தீபம் ஏற்றி,மலர் தூவி தனது குடும்பத்தினருடன் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.