வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாதியல்ல என்று கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரை தாம் ஒரு அரசியல்வாதியாவே பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
பத்தரமுல்லையின் அமைந்துள்ள ஒன்றிணைந்த எதிரணியின் காரியாலயத்தில் இன்று (திங்கட்கிழமை) தமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களுக்கான தீர்வு, வேலைவாய்ப்பு, வீதிகள் அபிவிருத்தியின்மை, விவசாயிகளுக்கான நிவாரணம் வழங்கப்படாமை உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கமும் வட மாகாண சபையும் எந்தவித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லையென தெரிவித்த மஹிந்த, இதனால் மக்கள் கொந்தளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனால், அரசாங்கமும் வட மாகாண சபையும் மக்களை திசைதிருப்புவதாகவும், அதன் ஒரு செயற்பாடாகவே ‘எழுக தமிழ்’ பேரணி போன்றவை நடத்தப்படுவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீது தென்னிலங்கையில் இருந்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப் படும் நிலையில் நேற்று வரை விமர்சனங்களை முன்வைத்த மஹிந்த ராஜபக்ச திடீர் என பாராட்டும் வகையில் கருத்து தெரிவித்துள்ளமை அரசியல் காய் நகர்த்தல் என்பதுடன் தமிழ் மக்கள் மத்தியில் நற் பெயரை வாங்குவதற்கு எத்தனிப்பதாக அமையும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.