உரி தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளை கொன்றதுடன், 8-க்கும் மேற்பட்ட தீவிரவாத முகாம்களை தகர்த்தது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம் மீது இந்தியா தாக்குதல் நடத்திய பிறகு பாகிஸ்தான் ராணுவம் இதுவரை 25 முறை இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஹஜி பிர் பகுதியில், அந்நாட்டு ராணுவத் தளபதி ரஹீல் ஷரீப் நேரில் சென்று பார்வையிட்டார். அவரை
கார்ப்ஸ் தளபதி ஜெனரல் மாலிக் ஜாபர் இக்பால் வரவேற்றார். அங்கு ராணுவ அதிகாரிகளுடன் சில ஆலோசனைகளை நடத்தினார். தற்போதைய சூழல் குறித்து கேட்டறிந்தாக கூறப்படுகிறது. எல்லைப் பகுதியில் உள்ள ராணுவத்தினர், ராணுவ நடவடிக்கைகள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் நிலை உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாகிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் நடவடிக்கை திருப்திகரமாக உள்ளது. மேலும் பாகிஸ்தான் ராணுவ வீரர்களை பாராட்டி பேசினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாகிஸ்தான் எல்லையில் அந்நாட்டு ராணுவத் தளபதி ஆய்வு மேற்கொண்ட சம்பவம் இந்திய எல்லையில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.