பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் இரகசியமாக தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக மீனபிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கும் ஞானசார தேரருக்கும் இடையிலான இரகசிய பேச்சுவார்த்தையை ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஏற்பாடு செய்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் ஞானசார தேரர் பேச்சுவார்த்தை நடத்தியதனை நிரூபிக்க புகைப்பட ஆதாரங்களும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சிங்கள வானொலி ஒன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா இயக்கம் ஓர் பயங்கரவாத இயக்கம் எனவும் பௌத்த சாசனத்தின் ஆயுத அமைப்பு எனவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.
அண்மையில் பேருவளை மற்றும் அலுத்கம பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகளின் பின்னணியில் பொதுபல சேனா இயங்கியதாகவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.
இதேவேளை, அமைச்சர் ராஜித சேனாரட்ன முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாக பொதுபல சேனா இயக்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தமிழ்ப் புலம்பெயர் அமைப்புக்களுக்கும் பொதுபல சேனா இயக்கத்திற்கும் இடையிலான எந்தவொரு சந்திப்பினையும் தாம் ஏற்பாடு செய்யவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறான கருத்தை ராஜித தெரிவித்து இருக்கும் இதேவேளை கடந்த 29 யூன் ஞாயிற்றுக் கிழமை (Sunday, 29 June 2014 17:10) லங்கா ருத் இணையத்தில் ராஜித கூறிய கருத்து இங்கு இணைக்கப்பட்டு உள்ளது. அந்த செய்தியில் இணைப்ப்பட்ட படமும் தரப்பட்டுள்ளது.