தந்தையை அடித்துக்கொலைசெய்த மகன், தானும் புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலைசெய்துகொண்ட சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருப்பெருந்துறை,மயான வீதியில் உள்ள ஞானமுத்து விஜயன் என்ற 60 வயதுடைய முதியவர் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக தனது மகனினால் கடுமையான முறையில் தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறிச்சென்ற குறித்த மகன் மது அருந்திய நிலையில் நேற்று இரவு மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிச்சென்ற புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலைசெய்துகொண்டுள்ளார்.விஜயன் இருதயநாதன் என்ற 24 வயது மகனே இவ்வாறு உயிரிழந்ததாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
தந்தைக்கும் மகனுக்கும் இடையில் இடம்பெற்ற பணப்பிரச்சினை தொடர்பான வாக்குவாதத்தினை தொடர்ந்து பொல்லினால் தந்தை கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
இதன் பின்னர் குறித்த நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டபோதும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதனைத்தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறிய மகன் மதுபோதையில் திராய்மடு,குமார வீதியில் ரயிலில் முன் பாய்ந்து தற்கொலைசெய்துகொண்டுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணையை, மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
இதேவேளை அண்மைக்காலமாக இலங்கையின் பல பாகங்களிலும் பெற்றோர் பிள்ளைகளினால் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது