மு.கருணாநிதியின் மகள் கனிமொழியுடன் பேசியதன் பின்னரே தனது கணவர் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைய தீர்மானம் எடுத்தார் என புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலலின் மனைவி அனந்தி சசிதரன் கூறிய கருத்தினை கனிமொழி மறுத்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பிராந்திய தலைவர் எழிலனையோ வேறு எந்த விடுதலைப் புலி உறுப்பினர்களையோ இலங்கை இராணுவத்தினரிடம் சரணடையுமாறு நாம் உறுதிமொழி வழங்கவில்லை எனவும் கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின்போது வடக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலலின் மனைவியுமான அனந்தி சசிதரன் வாக்குமூலம் அளித்திருந்தார்.
அவர் தனது வாக்கு மூலத்தில், ‘தனது கணவர் எழிலன், இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைவதற்கு தீர்மானம் எடுக்க முன்னர், செய்மதி தொலைபேசி மூலம் கனிமொழியுடன் உரையாடினார் என்று தெரிவித்திருந்ததுடன், அது தொடர்பில் ஊடகங்களிலும் செய்தி வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், அனந்தியின் கருத்தை மறுத்துள்ள கனிமொழி, ‘எனக்கு அனந்தி சசிதரன் யார் என்றே தெரியாது. ஏனென்றால், எழிலன் விடுதலைப் புலிகளின் முன்னணி தலைவர்களில் ஒருவர். செய்மதி தொலைபேசி மூலம் அவருக்கு ஆலோசனை கூறியதாகச் சொல்வது முற்றுமுழுதிலும் தவறானது.
யுத்தம் அதி உச்சகட்டத்தில் இருக்கும் போது, விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரை இலங்கை இராணுவத்திடம் சரணடையும்படி யாராவது கூறுவார்களா?’ எனவும் பதில் கேள்வி எழுப்பியுள்ளார்