சென்னை உயர் நீதிமன்றத்தில் மைலாப்பூரை சேர்ந்த ஜெபமணி மோகன்ராஜ் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில்,
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை புலித் தலைவர் பிரபாகரன், அவரது நெருங்கிய நண்பரும், விடுதலை புலி இயக்கத்தை சேர்ந்தவருமான கே.பி. என்று அழைக்கப்படும் கே.பத்மநாதன் என்ற குமரன் பத்மநாதன், பொட்டுஅம்மான் உட்பட பலரை சி.பி.ஐ. பல்நோக்கு புலனாய்வு பிரிவு பொலிஸார் தேடி வந்தனர்.
இந்த நிலையில், இலங்கையில் நடந்த போரில் பிரபாகரன் கொல்லப்பட்டார். கே.பி. என்ற கே.பத்மநாதனை 2009ம் ஆண்டு மலேசியாவில் வைத்து இலங்கை இராணுவம் கைது செய்தது.
ராஜீவ்காந்தி கொலையில் பத்மநாதன்தான், நிதி உதவி வழங்கும் பொருளாளராக செயல்பட்டுள்ளார்.
இந்த கொலையில் நடந்த சர்வதேச தகவல் அனைத்தும் இவருக்கு தெரியும். இவரிடம் இருந்து பெறப்பட்ட இரகசிய தகவலை வைத்துக் கொண்டுத்தான் இந்தியாவை இலங்கை மிரட்டி வருகிறது.
எனவே, தற்போது இலங்கையில் உள்ள கே. பத்மநாதனை, சி.பி.ஐ. பல்நோக்கு புலனாய்வு பிரிவு பொலிஸார் இந்தியாவுக்கு அழைத்து வந்து, ராஜீவ்காந்தி கொலையின் உண்மை நிலை குறித்து விசாரிக்க வேண்டும் என்று கடந்த 2013ம் ஆண்டு மே 13ம் திகதி பிரதமரின் தனிச் செயலாளர், மத்திய உள்துறை செயலாளர், சி.பி.ஐ. இயக்குனர் ஆகியோருக்கு மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனுதாரர் ஜெபமணி மோகன்ராஜ் வழக்கில் ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக 4 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு இந்திய மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-TPN NEWS