இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனைக் கட்டுக்கடுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு வடக்கு மாகாணத்திலும் கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டிருந்து. இந்நிலையில் மக்கள் அத்தியவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக நகர் பகுதிகளில் திரண்டிருந்தனர். குறிப்பிட்ட நேரத்தில் பொருட்களைக் கொள்வனவு செய்யவேண்டிய நிலையில் மக்கள் நகரங்களில் அலைமோதினர்.
அந்தவகையில், யாழ்ப்பாணத்தில் கடந்த 84 மணித்தியாலங்கள் நடைமுறையிலிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் மக்கள் அத்தியாவசியப் பொருள்களைப் பெற்றுக் கொள்வதில் அலைமோதினர்.
மாவட்டத்திலுள்ள அனைத்துச் சந்தைகளிலும் வர்த்தக நிலையங்களிலும் மக்கள் குவிந்ததுடன் பல்பொருள் அங்காடிகள், வங்கிகள், மருந்தகங்களில் பொலிஸாரின் அறிவுறுத்தலில் ஒவ்வொருவருக்கும் இடையே ஒரு மீற்றர் இடைவெளியில் வரிசையில் மக்கள் காத்திருந்து கொருட்களை கொள்வனவு செய்தனர்.