‘எழுக தமிழ்’ பேரணியின் மாபெரும் வெற்றியின் பின்னணியில் மறைந்துள்ள இரகசியங்கள்

568

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் ‘எழுக தமிழ்’ மக்கள் பேரணி கடந்த சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்தும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் முன்பாக இருந்தும் ஆரம்பிக்கப்பட்டு யாழ்.முற்றவெளியை சென்றடைந்து மாபெரும் பொதுக்கூட்டம் இடம்பெற்றது. இந்தப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு உரிமைக்கோசங்களை எழுப்பினார்கள். முற்றவெளியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எழுக தமிழ் பிரகடனம் வெளியிடப்பட்டது. அத்துடன் வடமாகாண முதலமைச்சர் தமிழ் மக்கள் பேரவையின் முக்கிஸ்தர்கள் உரையாற்றினார்கள். தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற ‘எழுக தமிழ்’ பேரணிக்கு ஆதரவு தெரிவித்து, யாழ்.மாவட்ட வர்த்தகர்கள் தங்கள் கடைகளைப்பூட்டி ஆதரவு தெரிவித்தனர். வட மாகாணம் தழுவிய ரீதியில் ‘எழுக தமிழ்’ பேரணி இடம்பெற்றது. அதன் போது பேரணி ஏற்பாட்டாளர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய யாழ்.மாவட்ட வர்த்தகர்கள் தங்கள் கடைகளைப்பூட்டி ஆதரவு தெரிவித்தனர்.
இந்தப்பேரணியில் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஆற்றிய உரை முக்கியம் பெறுகிறது. அதாவது,
எனதருமைத் தமிழ்பேசும் சகோதர சகோதரி களே,
‘எழுக தமிழ்’ பேரணியில் பெருந்திரளாக கலந்துகொண்டு தமிழ் மக்களின் ஏகோபித்த குரலாக எமது உரிமைக்கோரிக்கைகளை வெளிப்படுத்தவும் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக எமது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கும் எமது அரசியல் ரீதியான எதிர்பார்ப்புக்களை உலகறிய விளம்புவதற்கும் இங்கே கூடியிருக்கின்ற எனதருமை மக்களே!

இந்தப் பேரணி வரலாறு காணாத பேரணி. இது ஆட்சியில் அல்லது அதிகாரத்தில் உள்ள எவரையும் எதிர்த்து நடாத்தப்படும் பேரணி அல்ல. நாம் எமது மத்திய அரசை எதிர்த்து இதை நடாத்தவில்லை. சிங்கள சகோதர சகோதரி களை எதிர்த்து நடாத்தவில்லை! பௌத்த சங்கத்தினரை எதிர்த்து நடாத்தவில்லை! ஏன் இலங்கைத் தமிழரசுக்கட்சியை எதிர்த்துக்கூட நடாத்தவில்லை. கொள்கையளவில் அவர்கள் எம்மை ஆதரித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். பலர் எம்முடன் இங்கு வந்தும் இருக்கின்றார்கள். அவர்கள் இச்சந்தர்ப்பம் சரியானதா என்றுதான் கேட்கின்றார்கள். அதில் எமக்குள் கருத்து வேறுபாடு. அவ்வளவுதான். இது பற்றி நான் பின்னர் குறிப்பிடுவேன்.
ஆனால் ஒன்றை மட்டும் குறிப்பிடக் கடமைப்பட்டுள்ளேன். அதாவது இன்றைய காலகட்டத்தில் பாராளுமன்றத்திற்குத் தெரியப்படுவதாலோ மாகாணசபைகளுக்குத் தெரியப்படுவதாலோ எமது உரிமைகளை நாம் வென்றெடுத்துக்கொள்ள முடியாது. மக்கள் சக்தி எமது அரசியல் பயணத்திற்கு அவசியம். அதனால்த்தான் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் பதவியை நான் ஏற்றேன். 2009ம் ஆண்டு மே மாத காலத்தின் அனர்த்த அழிவுகளின் பின்னரான தமிழ் மக்களின் விடிவுக்கான தீர்வு சம்பந்தமாக ஏற்கனவே எமது தேர்தல் விஞ்ஞாபனங்கள் பல கூறியுள்ளன. அவற்றின் அடிப்படைக் கொள்கைகளில் பாரிய முரண்பாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆகவே சில அடிப்படைக்கொள்கைகளை கட்சிகளும் மக்கள் சமூகமும் ஏற்றுக்கொண்டால் எல்லோரும் சேர்ந்து வேலை செய்வது கடி னமாக இருக்காது. 2001ம் ஆண்டில் பல கட்சிகளை ஒன்றுபடுத்தும் 6 பேர் கொண்ட குழுவை கொழும்பில் அமைத்த போது சிவில் சமூகம் பெரும் பங்காற்றியது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நான் அரசியலில் அப்போது இல்லாதிருந்தும் அவ்வாறான ஒருங்கிணைதலை அப்போதே வரவேற்றேன். மக்களும் மக்கட் பிரதி நிதிகளும் சேர்ந்தால்த்தான் எங்களுக்கு மதிப்பு. ஆகவே உங்கள் ஊக்கமும் உற்சாகமும் உறுதுணையும் மக்கட் பிரதிநிதிகளுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குவன என்று நான் எதிர்பார்க்கின்றேன். நாம் எமது தமிழ்ப்பேசும் மக்களின் கரிசனைகளை, கவலைகளை ஆகக்கூடியது எமது கண்டனங்களை வெளிப்படுத்தி விழிப்பு ணர்ச்சியை ஏற்படுத்தவே இந்தப் பேரணியை நடாத்தியுள்ளோம்.
எம் வடக்குக் கிழக்கு மாகாணத் தமிழ்ப்பேசும் மக்கள் அனைவரும் பலத்த சந்தேகங்களிலும், ஐயப்பாடுகளிலும் மனச் சஞ்சலத்திலும் இருக்கின்றார்கள். அவர்களின் அந்த மனோநிலையை, மனக்கிலேசங்களை, ஊரறிய, நாடறிய, உலகறிய உரத்துக்கூறவே இங்கு கூடியுள்ளோம்.

14440981_1790965077853079_7710555887804100287_n

எமது கரிசனைகள் என்ன?
பௌத்தர்கள் வாழாத இடங்களில் பௌத்த விகாரைகளும் புத்த சிலைகளும் ஏன்? எம்மை மதத்தின் ஊடாக ஆக்கிரமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவா? எமது பிரதேசங்களின் குடிப்பரம்பலை மாற்றத்தான் இவை நடை பெறுகின்றனவா என்பது எமது முதலாவது கரிசனை – சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் எமது இளைஞர்களின் குரல்கள் எவருக்குங் கேட்காதது ஏன்? அவர்கள் இறந்தாலும் பரவாயில்லை என்ற ஒரு காழ்ப்புணர்ச்சி எங்கோ ஒரு அதிகார பீடத்தின் அடி மனதில் ஆழப்பதிந்துள்ளதா? போர் முடிந்து ஏழு வருடங்களின் பின்னர் கூட கொடூரமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகள் சிறைகளில் வாடுவது எம்மால் சகிக்க முடியாததொன்றாக இருக்கின்றது. புதிய நல்லாட்சி அரசாங்கத்தின் கீழும் 17க்கு அதிகமான சித்திரவதை நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றால் எமது கூட்டான மனோநிலை களில் மாற்றமேற்படவில்லையா என்று கேட்கத்தான் தோன்றுகின்றது.

காணாமல்போனோர் பற்றி இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? காணாமற்போனவர் காரியாலயம் காலத்தைக் கடத்தும் கரவுத் திட்டமா? போர் முடிந்து ஏழு வருடங்களுக்குப் பின்னரே இக் காரியாலயம் திறக்கப்பட்டுள்ளது. அதுவும் சர்வதேச நெருக்குதல்களின் காரணமாக! இன்னமும் எவ்வளவு காலஞ்சென்றால் படையினரிடம் கையளிக்கப்பட்ட, சரணடைந்த அல்லது தஞ்சமடைந்த எம் மக்கள் பற்றித் தரவுகள் கிடைக்கப்பெறலாம்? போர்க்குற்ற விசாரணை சம்பந்தமாக இதுவரை எடுக்கப்பட்ட திடமான நடவடிக்கைகள் என்ன? எம் மக்கள் குழம்பிப் போயுள்ளார்கள். இதற்கான விளக்கங்களை யார் தருவார்கள்? அவற்றைக்கோரியே இந்தப் பேரணி.

14391011_1790964414519812_6106542915778335361_n-1

நாவற்குழியில், முருங்கனில், வவுனியாவில், முல்லைத்தீவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன. இது எதற்காக? எமது தனித்துவம் பேணப்படும், எமது உரித்துக்கள் வழங்கப்படும் என்று அரசாங்கம் கூறிவரும் இவ்வேளையில் இவ்வாறான குடியேற்றங்கள் எமது மக்களுக்குக் குழப்பத்தை விளைவிக்கின்றன. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் படிப்படியாக இலங்கை பூராகவும் வாழ்ந்து வந்த தமிழ்ப்பேசும் மக்கள் அடித்து துரத்தப்பட்டு வெளிநாடுகள் சென்றவர்கள் போக பெரும்பாலானவர்கள் வடக்கு கிழக்கில் தங்கள் தாயகப் பிரதேசங்களில் அவர்கள் தஞ்சம் புக, இங்கும் வந்து எமது இன அடையாளங்களை அழிக்கவும் குடிப் பரம்பலை மாற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றால் இக்குழப்பத்தை யாராவது தீர்த்து வைப்பார்களா என்று கேட்டு வைக்கவே இந்தப் பேரணி! இது யாருக்கும் எதிரானதல்ல? ஆனால் எமது வடமாகாணத்தில் நடைபெறும் பல நடவடிக்கைகள் பற்றி நாம் அறிய விரும்புகின்றோம்.

அவற்றிற்கான காரணங்களைத் தெரிந்துகொள்ள விரும்புகின்றோம். உதாரணத்திற்கு ஏன் சிங்கள முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு மத்திய அமைச்சர்களுடனான ஒரு செயலணி வேண்டியிருக்கின்றது? மற்றைய மக்களின் மீள்குடியேற்றத்திற்கு செயலணி வேண்டாமா? இந்தியாவில் இருந்துவரும் எமது இடம் பெயர்ந்தோர் சம்பந்தமாக போதிய கவனம் செலுத்தியுள்ளோமா? கேரதீவில் உப்பளம் அமைக்க மத்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. அதுபற்றி எமக்கு எதுவுமே தெரியாது. பாதிக்கப்படும் எமது மக்கள் எதிர்ப்புத்தெரிவித்துள்ளனர். எம்மைப் புறக்கணித்து மத்திய அரசாங்கம் எமது வடமாகாணத்தில் இப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்குவதன் சூட்சுமம் என்ன?

போர் முடிந்து ஏழு வருடங்கள் ஆன பின்னரும் இராணுவம் பல ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு அவற்றில் பயிர் செய்து பயன்களை அனுபவிப்பதன் அர்த்தம் என்ன? உல்லாச விடுதிகள், விவசாயப் பண்ணைகள், தனியார் வாசஸ்தலங்கள் தொடர்ந்து படையி னரின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் நியா யம் என்ன? ஆக்கிரமிக்கப்பட்ட காணி கள் அனைத்தையும் விடுவிக்காததன் காரணம் என்ன? மேலும் பல ஏக்கர் மக்கள் காணிகளை இப்பொழுதும் புதிதாகக் கையகப்படுத்தும் இராணுவத்தினரின் நடவடிக்கை எம்மக்களின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.

போர்க்குற்றப் பொறிமுறை கலப்புப் பொறிமுறையாக இருக்கவேண்டும் என்பது 2015ம் ஆண்டின் செப்டெம்பர் மாத சர்வதேச எதிர்பார்ப்பு. வெளிநாட்டு வழக்கு நடத்துநர், வெளிநாட்டு நீதிபதிகள், சர்வதேச போர்க்குற்ற சட்டத்தை உள்ளேற்றல் போன்றவை இல்லாது கலப்பு பொறிமுறையை நிராகரித்து மீண்டும் உள்ளகப் பொறிமுறையை மட்டும் எமது நல்லாட்சி அரசாங்கம் நாடுவது எமக்குச் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு நீதி கிடைக்காமற் செய்ய எடுக்கப்படும் முன்னேற்பாடுகளா இவை என்று நாம் சிந்திக்கவேண்டியுள்ளது.

இவை மட்டுமல்ல. எமது வடக்கு கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரங்கள் இப்பொழுதும் பறிக்கப்பட்ட நிலையிலேயே அவர்கள் காலத்தை ஓட்டி வருகின்றார்கள். தென்னிலங்கை மீனவர்கள் வடக்கு கிழக்கு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைவது மாத்திரமன்றி எமது மீனவர்களின் படகு களை சட்டவிரோதமாகப் படையினர் உதவி யுடன் கைப்பற்றுகின்றார்கள், வாடிகளை அமைக்கின்றார்கள். சட்டவிரோத மீன்பிடி முறைகளைக் கையாள்கின்றார்கள்.

கடல் வளங்கள் சூறையாடப் படுகின்றன. இந்நடவடிக்கைகளால் எமது வடக்கு கிழக்கு பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றது. மயிலிட்டித் துறைமுகம் இன்னமும் மக்களிடம் கையளிக்கப்படவில்லை. இவற்றை யாரிடம் சொல்வது? சொன்னாலும் தீர்வுகள் கிடைக்குமா? இவற்றை உலகறியச் செய்யத்தான் இந்தப் பேரணி. வடக்கு கிழக்கில் 2009ம் ஆண்டு மே மாதம் வரை யில் போதைப் பொருட் பாவனை இல்லாமல் இருந்தது. இதனை மத்திய அரசாங்க உயர் அதிகாரிகள் கூட ஏற்றுக்கொண்டுள்ளனர். 2009ம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் சுமார் ஒன்றரை இலட்சம் படையினர் பாதுகாப்பு என்ற போர்வையில் வடக்கு கிழக்கில் குடியமர்ந்து இருக்கும் நிலையில், பெரும்பான்மையினப் பொலிசாரை எமது பொலிஸ் நிலையங்களில் பதவியில் நிறுத்தியுள்ள நிலையில் நாளாந்தம் நூற்றுக்கணக்கான கிலோ கஞ்சா வடபகுதியை வந்தடைகின்றது. மேலும் ஹெரோயின் போன்ற போதைப்பொருட்களும் வந்தடைகின்றன. அதிகப்படியான மதுசாரமும் விற்பனையாகின்றன. இது எப்படி? சட்டமும் ஒழுங்கும் எங்களின் கைவ சம் இல்லை. அப்படியானால் இவை எவ்வாறு சாத்தியமாகியுள்ளன அல்லது இவை ஏன் நடக்கின்றன? இவை எமது இளஞ் சந்ததியினரைத் திட்டமிட்டு அழிக்கும் ஒரு செயற்பாட்டின் அங்கமா என்ற கேள்விக்கு யார் பதில் தருவார்கள்? இதனை எமது பெரும்பான்மையின சகோதர சகோதரிகளி டமும் உலக நாட்டு மக்களிடமும் கேட்கவே இந்தப் பேரணி. தனியாகச் சொன்னால் எவரும் கேட்க மறுக்கின்றார்கள். ஆகவே நாங்கள் நடைபயின்று வந்து பலராகக் கேட்கின்றோம். எமது மனக்கிலேசத்தை வெளிப்படுத்துகின்றோம். மக்கட் பிரதிநிதி களும் மக்களும் சேர்ந்து கேட்கின்றோம்.

அடுத்து அரசியல் யாப்புக்கு வருவோம். தொடர்ந்து தமிழ் மக்கள் அரசி யல் ரீதியாக வஞ்சிக்கப்பட்டு வந்துள்ளார்கள். ஆங்கிலேயர் அதிகாரங்களை உள்ளூர் வாசிகளுக்கு வழங்கப்போகின்றார்கள் என்று தெரிந்ததும் 1919ம் ஆண்டில் இருந்தே அதிகாரத்தைத் தம் கைவசம் வைத்திருக்கப் பெரும்பான்மையின மக்கட் தலைவர்கள் கங்கணம் கட்டிவிட்டார்கள். அதிகாரம் முழுமையாக பெரும்பான்மையின மக்களிடம் சென்றுவிட்டது. எமது மக்கள் இதற்கு எதிர்ப்புத்தெரிவித்தபோது ‘இவ்வளவு தருகின்றோம்’, ‘இன்னும் கொஞ்சம் தருகின்றோம்’, ‘சரி! இவ்வளவு தான் இதற்கு மேல் எதுவும் கேட்கப்படாது’ என்றெல்லாம் பேரம் பேசி வருகின்றார்கள்.
இது இவ்வளவுக்கும் தமிழ்பேசும் மக்கள் காலாதி காலமாக 2000 வருடங்களுக்கு மேலாக வடக்கு கிழக்கில் பெரும்பான்மையின மக்களாக வசித்து வருகின்றார்கள். இங்கு சிங்கள மக்கள் எப்பொழுதும் வசிக்கவில்லை. சிங்கள மொழி நடைமுறைக்கு வந்ததே கி.பி. ஆறாம் நூற்றாண்டளவில். தமிழ் மக்கள் பௌத்தர்களாக சில நூறு வருடகாலம் மாறியிருந்தமையே பௌத்த மத எச்சங்கள் வடக்குக் கிழக்கில் காணப்படுவதற்கு காரணம்.

தொடரும்…

 

 

SHARE