ஐ.பி.எல். அணியின் உரிமையாளராக பி.சி.சி.ஐ. தலைவர் இருக்கலாமா?: சீனிவாசனுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

378
ஐ.பி.எல். போட்டிகளில் நடைபெற்ற மேட்ச் பிக்சிங் முறைகேடுகள் மற்றும் பெட்டிங் குறித்து உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இது குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. அக்குழு தனது இறுதி விசாரணை அறிக்கையை கடந்த சில தினங்களுக்கு முன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் பி.சி.சி.ஐ. தலைவராக இருந்த சீனிவாசன் மேட்ச் பிக்சிங் மற்றும் பெட்டிங்கில் ஈடுபடவில்லை என்று கூறப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து தன்னை பி.சி.சி.ஐ. தலைவராக தொடர அனுமதிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் சீனிவாசன் கோரிக்கை வைத்தார். இந்த நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது சீனிவாசனின் கோரிக்கை தொடர்பாக நீதிபதிகள் சரமாரி கேள்வியெழுப்பினர்.

அதில், பி.சி.சி.ஐ. தலைவராக உள்ளவர் ஐ.பி.எல் அணியின் உரிமையாளராக இருக்கலாமா? என்று கேள்வியெழுப்பிய நீதிபதிகள், பி.சி.சி.ஐ மற்றும் ஐ.பி.எல். ஆகியவற்றை வேறுபடுத்தி பார்க்கமுடியவில்லை என்று கூறினர். உங்கள் அணியில் உள்ள உறுப்பினரே பெட்டிங்கில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன? என்றும் சரமாரி கேள்வி எழுப்பினர்.

முத்கல் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் மீது நீங்கள் நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும். அதை தவிர உங்களுக்கு வேறு வழியில்லை என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.

SHARE