ஜிம்பாப்வே, வங்காளதேச வீரர்கள் உத்செயா, காஜி பந்துவீச தடை

420

பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் சயீத் அஜ்மல் சமீபத்தில் பந்துவீச தடை செய்யப்பட்டார். அவரது பந்துவீச்சு சட்டவிரோதமாக இருப்பதாக கூறி அவரை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) சஸ்பெண்டு செய்தது.

அவரை தொடர்ந்து ஜிம்பாப்வே சுழந்பந்து வீரர் பிராஸ்பா உத்செயா, வங்காளதேச சுழற்பந்து வீரர் சோஹக் காஜி ஆகியோர் பந்துவீச தடை விதித்து ஐ.சி.சி. நடவடிக்கை எடுத்து உள்ளது.

இந்த இருவரது பந்து வீச்சும் சந்தேகம் அளிக்கும் வகையில் இருப்பதாக புகார் கூறப்பட்டது. இதை தொடர்ந்து அவர்களது பந்துவீச்சு முறை ஆய்வு செய்து பார்க்கப்பட்டது.

இருவரும் ஐ.சி.சி. நிர்ணயித்த அளவைவிட 15 டிகிரி அளவில் கூடுதலாக பந்து வீசுவது தெரியவந்தது. அதை தொடர்ந்து அவர்களது பந்துவீச்சு சட்டவிரோதமானது என்று ஐ.சி.சி. அறிவித்து சஸ்பெண்டு செய்து உள்ளது.

சர்வதேச போட்டிகளில் அவர்கள் பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆகஸ்ட் மாதம் நடந்த 3–வது ஒருநாள் போட்டியின் போது உத்செயா பந்துவீச்சு பற்றியும், அதே மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2–வது ஒருநாள் போட்டியின் போது காஜியின் பந்துவீச்சு பற்றியும் புகார் செய்யப்பட்டு இருந்தது.

இதற்கிடையே பவுலர்கள் விதிமுறைப்படி வீசுங்கள் என்று முன்னாள் சுழற்பந்து வீரர் முரளிதரன் அறிவுறுத்தி உள்ளார். இலங்கையை சேர்ந்த அவர் டெஸ்டில் 800 விக்கெட்டும், ஒருநாள் போட்டியில் 539 விக்கெட்டும் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார்.

SHARE