ஜோகோவிச், ஷரபோவா சாம்பியன்

408

சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச்சும், மகளிர் பிரிவில் ரஷ்யாவின் மரியா ஷரபோவாவும் பட்டம் வென்றனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற போட்டியில் அந்த நாட்டைச் சேர்ந்த கீ நிஷிகோரி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

பெய்ஜிங்கில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஜோகோவிச், செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சை எதிர்கொண்டார்.

முடிவில் 6-0, 6-2 என்ற நேர் செட்களில் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

மகளிர் பிரிவில், தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ள மரியா ஷரபோவா, கடும் போராட்டத்துக்குப் பின் செக் குடியரசின் பெட்ரா குவிட்டோவாவை 6-4, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இது, பிரெஞ்சு ஓபனுக்குப் பின் ஷரபோவா வெல்லும் முதல் பட்டம். இதன் மூலம், தரவரிசையில் அவர் மேலும் இரண்டு இடங்கள் முன்னேற வாய்ப்புள்ளது.

டோக்கியோவில் நடைபெற்ற, ஜப்பான் ஓபன் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில், அமெரிக்க ஓபன் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய ஜப்பானின் கீ நிஷிகோரி, கனடாவின் மிலோஸ் ரயோனிக்கை எதிர்கொண்டார்.

இதில் 7-6(5), 4-6, 6-4 என்ற செட் கணக்கில் நிஷிகோரி வெற்றி பெற்றார். இதன் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் ஜப்பான் ஓபனில் அவர் இரண்டாவது பட்டத்தை வென்றார்.

china_open_tennis_002

SHARE