படலந்த அறிக்கையின் பிரகாரம் இதற்கு யார் பொறுப்பு?

33

 

படலந்த அறிக்கையின் பிரகாரம் இதற்கு யார் பொறுப்பு?

இலங்கை

கடந்த 1988ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் தேதி முதல் 1990ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரையான காலப் பகுதியில் படலந்த வீடமைப்புத் திட்டத்தில் எவரேனும் ஒருவர் அல்லது நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு, அவர்கள் அமானுஷியமான முறையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டிருந்தால் அதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பொறுப்பு கூற வேண்டியவர்கள் தொடர்பான தரவுகள் ஆணைக்குழுவின் ஆங்கில பிரதியின் 119 முதல் 122 வரையான பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

கடந்த 1986ஆம் ஆண்டு முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் அப்போதைய கைத்தொழில் அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவினால் படலந்த வீடமைப்புத் திட்டத்தில் போலீஸ் அதிகாரிகளை நிறுத்துவதற்கு, அரச உர கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், அதனூடாக 13 வீடுகள் உதவி போலீஸ் அதிகாரி டக்ளஸ் பீரிஸிற்கு பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வீடுகளை வழங்க ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்தமையானது, தனது அமைச்சுப் பதவியின் அதிகாரங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை எனக் கூறப்படுகின்றது.

இந்த வீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கு போலீஸ் திணைக்கள சரத்துகளுக்கு அமைய அது முறையற்றது என்பதுடன், அது குறித்து நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் சிரேஷ்ட போலீஸ் அதிகாரி நலீன் தெல்கொட பொறுப்பு கூறவேண்டும் என்பதுடன், அங்கு சட்டவிரோதமாக எதேனும் நடந்திருக்குமானால் அதை நிறுத்துவதற்காக அவர் நடவடிக்கை எடுக்காமை குறித்துப் பொறுப்பேற்க வேண்டும்.

ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் படலந்த வீடமைப்புத் திட்டத்தில் வரவழைக்கப்பட்டிருந்த போலீஸ் அதிகாரிகளுக்குக் கூட்டம் நடத்தியமையும், அவரால் அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

ரணில் விக்ரமசிங்க போலீஸாரின் செயற்பாடுகளுக்கும், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகளுக்கும் தலையீடு செய்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய வழங்கப்பட்ட வீடுகளில் சட்டவிரோத தடுப்பு முகாம்களை ஸ்தாபிக்க வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்படுகின்றது.

B2, B8, B34, A1/8 ஆகிய படலந்த வீடுகளில் சட்டவிரோத தடுப்பு முகாம்கள் மற்றும் சித்திரவதை முகாம்களை நடத்த ரணில் விக்ரமசிங்க மற்றும் சிரேஷ்ட போலீஸ் அதிகாரி நலீன் தெல்கொட பொறுப்பு கூற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் அறிந்திருந்த போதிலும், அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காமை குறித்து அப்போதைய பிரதி போலீஸ் மாஅதிபர் எம்.எம்.ஆர் (மெரில்) குணரத்ன, அப்போதைய போலீஸ் மாஅதிபர் அர்னஸ்ட் பெரேரா ஆகியோர் பொறுப்பு கூற வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் பரிந்துரைகள் என்ன?

இலங்கை

பட மூலாதாரம்,BATALANDA COMMISSION REPORT

படக்குறிப்பு,படலந்த சித்திரவதை முகாம் வரைபடம்

நாட்டுப் பிரஜைகளின் அடிப்படை உரிமை தொடர்ச்சியாக மீறப்படும் நபர்கள் யார் என்பது அடையாளம் காணப்படும் பட்சத்தில், அவர்களின் பிரஜாவுரிமை ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே சரியான தண்டனை என்பதுடன், அதை வழங்குவதற்கான சட்ட அதிகாரத்தை உயர்நீதிமன்றத்திற்கு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் ஆங்கில அறிக்கையின் 124, 125 ஆகிய பக்கங்களில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத விடயங்கள் இடம்பெறும் பகுதிகளுக்குச் சென்று அதுகுறித்து விசாரணைகளை நடத்தும் அதிகாரம் வழங்கும் வகையில், குற்றவியல் கோவை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என அந்தப் பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அனைத்து முறைப்பாடுகள் தொடர்பிலும் விசாரணைகளை நடத்துமாறு போலீஸ் மாஅதிபருக்கு உத்தரவிடுதல் உள்ளிட்ட மேலும் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ரணில் விக்ரமசிங்க தற்போது கூறுவது என்ன?

படலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை தான் முழுமையாகவே நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

படலந்த ஆணைக்குழுவின் அறிக்கை விவகாரம் தொடர்பில் தன்மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதைக் குறிப்பிட்டுள்ளார்.

”கடந்த 1987ஆம் ஆண்டு இந்திய – இலங்கை உடன்படிக்கை கைச்சாத்து இடப்பட்டதைத் தொடர்ந்து, மக்கள் விடுதலை முன்னணி நாடு முழுவதும் வன்முறைகளைத் தோற்றுவிப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்திருந்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் நாட்டின் முக்கியமான இடங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு, அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டது” என அவர் கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “பியகம பகுதியில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம், டீசல் மின் உற்பத்தி நிலையம், மாவெலியில் இருந்து கொழும்பிற்கு மின்சாரத்தைக் கடத்தும் மத்திய நிலையம் உள்ளிட்ட வர்த்தக மையங்களில் முக்கியமான பொருளாதார நிலையங்கள் காணப்பட்டன. அந்தப் பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ராணுவம் வரவழைக்கப்பட்டது.

பாதுகாப்புப் பிரிவினர் தங்குவதற்காக இலங்கை உர கூட்டுத் தாபனத்திற்குச் சொந்தமான, அந்தச் சந்தர்ப்பத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட கட்டடங்கள் மற்றும் வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்திலும் இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் சில வீடுகளில் தங்கியிருந்தனர். இந்த வன்முறை காலப் பகுதியில் சப்புகஸ்கந்த போலீஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி போலீஸ் பொறுப்பதிகாரி கொலை செய்யப்பட்டார்,” என்று தெரிவித்துள்ளார்.

அதோடு, “அப்போதைய பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ரஞ்ஜன் விஜேரத்ன என்னுடன் தொடர்பு கொண்டு பேசினார். ராணுவம் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்பிற்காக வீடமைப்புத் திட்டத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த வீடுகளை அவர்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி, களனி போலீஸ் அதிகாரியான நலின் தெல்கொடவிடம் கையளிக்கப்பட்டது” என்றும் கூறியுள்ளார்.

மேலும், இந்த காலப் பகுதியில் உள்ளுராட்சி சபை உறுப்பினர் ஒருவர், கூட்டுறவு சங்கத் தலைவர், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கொலை செய்யப்பட்டதாகவும், சில வீடுகளின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ள ரணில் விக்ரமசிங்க, “சரிவை எதிர்நோக்கியிருந்த பொருளாதாரத்தையும், மக்களின் இயல்வு வாழ்க்கையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காக அதிகாரத்தில் இருந்த அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

”கடந்த 1994ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, படலந்த பகுதியில் சித்திரவதை முகாமொன்று இருந்ததா என்பதைக் கண்டறிவதற்காக ஆணைக்குழுவொன்றை நியமித்திருந்தார். அதற்காகப் பலரை வரவழைத்திருந்தார். என்னை சாட்சியாளராக மாத்திரமே வரச் சொன்னார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் நான் எதிர்கட்சித் தலைவராகச் செயற்பட்டேன்.”

“படலந்த ஆணைக்குழு முழுமையாக அரசியல் சேறுபூசும் நடவடிக்கையை நோக்கமாகக் கொண்டது. எனினும், அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. அறிக்கையில் அமைச்சர் என்றே என்னைக் குறிப்பிட்டுள்ளனர். போலீஸ் அத்தியட்சகரினால் போலீஸ் அதிகாரிகளுக்கு வீடுகள் வழங்குவது சரியானது இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. போலீஸ் மாஅதிபருக்கு வீடுகளை வழங்கி, அதை போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்குவதே சரியான நடைமுறை எனக் கூறப்பட்டுள்ளது.”

“இதில் நானும், தெல்கொடவும் பொறுப்பு கூற வேண்டும் என ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய விடயங்கள் என்னுடன் தொடர்புப்படவில்லை” என அவர் பதிலளித்துள்ளார்.

இந்த அறிக்கையை பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்ளாத காரணத்தாலேயே நாடாளுமன்றத்தில் இந்த அறிக்கை குறித்து விவாதம் இடம்பெறவில்லை எனத் தான் நம்புவதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிடுகின்றார்.

அத்துடன், நாடாளுமன்ற சபை அறிக்கையொன்றை 25 வருடங்களுக்குப் பின்னர் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் சம்பிரதாயம் இலங்கை நாடாளுமன்றத்தில் மாத்திரமன்றி, உலகிலுள்ள எந்தவொரு நாடாளுமன்றத்திலும் கிடையாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதில் வழங்கியுள்ளார்.

SHARE