பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி காலமானார் இவரின் மறைவுக்கு திரைத்துறையைச் சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

38

 

பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி காலமானார்

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

சென்னையில் வசித்து வந்த மனோஜ் பாரதிக்கு வயது 48.

பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் படத்தில் நடிகராக அறிமுகமான அவர், சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, ஈரநிலம், சாதுரியன், மகா நடிகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சரத்குமார், முரளி ஆகியோருடன் இணைந்து அவர் நடித்த சமுத்திரம் திரைப்படம் மற்றும் சத்யராஜுடன் இணைந்து நடித்த மகா நடிகன், வருசமெல்லாம் வசந்தம் ஆகிய படங்களில் இவரது நடிப்பு கவனம் பெற்றது.

சமீபத்தில் இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில் மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கியதன் மூலம், இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த இவரின் மறைவுக்கு திரைத்துறையைச் சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி காலமானார்

மனோஜ் பாரதியின் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் பதிவில், “நடிகரும் இயக்குநர் பாரதிராஜாவின் மகனுமான மனோஜ் பாரதி மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

தனது தந்தையின் இயக்கத்தில் தாஜ்மகால் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் எனத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் மனோஜ். இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் முயன்று பார்த்தவர்.

இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அன்பு மகனை இழந்து வாடும் இயக்குநர் இமயம் பாரதிராஜா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

செல்வப்பெருந்தகை இரங்கல்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, மனோஜ் பாரதிராஜா மரணமடைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார்.

அதுகுறித்த தனது இரங்கல் பதிவில், “திரைத்துறையில் தனது தந்தையின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், கடின உழைப்பால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் மனோஜ் பாரதிராஜா.

அவரை இழந்து வாடும் அவரது தந்தை பாரதிராஜாவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி காலமானார்

“மனோஜ் நம்முடன் இல்லை என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது. வெறும் 48 வயதில் அவர் எதிர்பாராத விதமாகக் காலமாகியிருப்பது வேதனையளிக்கிறது. அவரது தந்தை பாரதிராஜாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இந்த இழப்பில் இருந்து மீண்டு வருவதற்கு கடவுள் உறுதுணையாக இருக்கட்டும். நீங்கள் நினைவு கொள்ளப்படுவீர்கள் மனோஜ்,” என்று நடிகை குஷ்பு சுந்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இயக்குநரும், குடும்பத்தில் ஒருவர் என நெருக்கமான உறவாக இருப்பவருமான பாரதிராஜாவின் அன்பு மகன் மனோஜ் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் மிகுந்த மன வேதனை அளிக்கிறது,” என்று நடிகர் சரத்குமார் தனது இரங்கல் பதிவில் கூறியுள்ளார்.

மேலும், “சமுத்திரம் திரைப்படத்தில் மனோஜின் மூத்த சகோதரராக நடித்த நாட்களை நினைவுகூர்கிறேன். பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து, தனக்கான முத்திரையைப் பதிக்க இறுதி வரை போராடிய இளவலின் மறைவு வாழ்வின் நிலையற்ற நிலையைக் காட்டுகிறது. பாரதிராஜா அவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற எங்களிடம் வார்த்தைகள் இல்லை,” என்றும் தெரிவித்துள்ளார் சரத்குமார்.

பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி காலமானார்

பட மூலாதாரம்,Manoj Barathi/X

இசையமைப்பாளர் இளையராஜா மனோஜின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள இரங்கல் காணொளியில், என்னுடைய நண்பன் பாரதியின் மகனான மனோஜ் மறைந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியாக இருக்கிறது. என்ன சொல்வதென்றே எனக்கு வார்த்தைகள் வரவில்லை,” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இப்படியொரு சோகம் பாரதிக்கு நிகழ்ந்திருக்க வேண்டாம் என்று தோன்றினாலும் நிகழ்வதை நம்மால் தடுக்க முடியாது, ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்று காலம் விதித்திருக்கின்ற காரணத்தால், மனோஜின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்,” என்று கூறியுள்ளார்.

மனோஜ் பாரதியின் மறைவுச் செய்தியறிந்து துயருற்றதாகத் தெரிவித்துள்ள சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “மகனை இழந்து ஆற்றொண்ணா துயரில் வாடும் பாரதிராஜாவுக்கு இத்துன்பத்தில் இருந்து மீண்டு வரும் வலிமையை அளிக்க இறைவனை வேண்டுவதுடன், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று தனது இரங்கல் பதிவில் கூறியுள்ளார்.

SHARE