மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று சனிக்கிழமை வரும் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ இடம்பெயர்ந்த சிங்கள மக்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகள், தேவைகள் குறித்துக் கலந்துரையாடுவார். இரண்டு நாட்கள் மட்டக்களப்பில் தங்கும் ஆளுநர் சிங்களக் குடும்பங்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதுடன், சிவில் அமைப்புக்களையும் சந்திக்கவுள்ளார். இன்று சனிக்கிழமை காலை வரும் அவர் கோரளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கல்குடா பிரதேசத்திலுள்ள இடம்பெயர்ந்த சிங்கள குடும்பங்களைச் சந்தித்துக் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து மட்டக்களப்பு நகரின் மண்முனை வடக்கு பிரதேச செயலார் பிரிவின் கருவேப்பங்கேணி, ஜயந்திபுரம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இடம்பெயர்ந்த சிங்களக் குடும்பங்களுடன் கலந்துரையாடுவார். ஞாயிற்றுக்கிழமை காலை, மட்டக்களப்பு சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளை ஈஸ்.ற் லகூன் சுற்றுலா விடுதியில் சந்திக்கவுள்ளார். அத்துடன், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவின் தளவாய், ஏறாவூர் -4 மற்றும் 5, பெரியபுல்லுமலை, கோப்பாவெளி போன்ற பிரதேசங்களைச் சேர்நத இடம்பெயர்ந்த சிங்கள மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.