மனைவியின் கண்ணீரை துடைத்த சர்பராஸ் கான்: டெஸ்ட் கனவு நிறைவேறியதால் குடும்பம் நெகிழ்ச்சி

142

 

இந்திய அணியின் டெஸ்ட் தொப்பியை பெற்ற சர்பராஸ் கான், தனது மனைவியின் கண்ணீரை துடைத்து உருக்கமான காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

சர்பராஸ் கான் வெற்றி
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடும் கனவை நனவாக்கிய சர்பராஸ் கானுக்கு 2024 பிப்ரவரி 15ம் திகதி வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக மாறியுள்ளது.

உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சர்பராஸ் கான்(26) வியாழக்கிழமையான இன்று இந்தியாவின் டெஸ்ட் அணியில் இடம்பெறும் 311 வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதன் மூலம் தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கான் இன்று களமிறங்கியுள்ளார்.

உயர்வுகளும், தடைகளும்
மும்பையில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த சர்பராஸ், சிறுவயதிலேயே கிரிக்கெட்டின் மீது தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார்.

மைதானங்களில் தனது திறமையை வளர்த்துக் கொண்ட அவர், உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்திறன் மூலம் கவனம் ஈர்த்தார்.

2013-14 ஆம் ஆண்டில் ரஞ்சிக் கோப்பையில் 928 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். அடுத்த சில ஆண்டுகளில், தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்திறன் மூலம் அனைத்து வகையான உள்நாட்டு போட்டிகளிலும் தனது திறமையை நிரூபித்தார்.

இருப்பினும், தேசிய அணியில் இடம் பெறுவதற்கு அவர் பல தடைகளை கடந்து வர வேண்டியிருந்தது. காயங்கள் மற்றும் தேர்வு குழுமத்தின் முடிவுகள் காரணமாக அவரது கனவு தாமதமாகியது.

கனவு நனவான தருணம்
இறுதியாக, 2023 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றார். கேஎல் ராகுல் காயமடைந்து வெளியேறியதால் கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார்.

அவர் டெஸ்ட் தொப்பியை பெறும் போது அவரது தந்தை நவுஷத் கான் மற்றும் மனைவி ஆகியோரின் உணர்ச்சிபூர்வமான தருணங்கள் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது.

தனது மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள, விழா முடிந்த பின்னர் அவர்கள் அருகே சென்று மனைவியின் கண்ணீரை துடைத்த காட்சி, மனைவியின் தியாகத்திற்கும் ஆதரவிற்கும் அவர் கொண்டிருந்த நன்றியை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது.

SHARE