முதல் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 169 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

456
முதல் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 169 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர்களாக தவான்- ரஹானே ஜோடி களம் இறங்கியது. இருவரும் ஆட்டம் ஆரம்பித்ததிலிருந்து சிறப்பாக விளையாடியது.

பவர் பிளேயான முதல் 10 ஓவரில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 43 ஓட்டங்கள் எடுத்தது. 20.4 ஓவரில் இந்திய அணி 100 ஓட்டங்கள் கடந்தது. அத்துடன் இருவரும் அரைசதம் அடித்தனர்.

23 ஓவரில் இந்தியா 124 ஓட்டங்கள் எடுத்து விக்கெட் ஏதும் இழக்காததால் இந்திய அணி அணித்தலைவர் கோஹ்லி பேட்டிங் பவர் பிளேயை தெரிவு செய்தார். சிறப்பாக விளையாடிய இருவருக்கும் இது அடித்து விளையாட வசதியாக அமைந்தது.

இலங்கை அணியின் பந்து வீச்சை சிறப்பாக கணித்து இருவரும் விளையாடினர். ரஹானே 111 ஓட்டங்களும், தவான் 113 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து இறங்கிய ரெய்னா தன் பங்கிற்கு அரைசதம் விளாசி விட்டு வெளியேறினார். இவர் 52 ஓட்டங்கள் குவித்தார்.

பின்னர் களமிறங்கிய அணித்தலைவர் கோஹ்லி 22 ஓட்டங்களும், ராயுடு 27 ஓட்டங்களும் எடுத்து நடையை கட்டினர். அடுத்து சகாவுடன் கடைசி ஓவரில் அக்ஸர் படேல் ஜோடி சேர்ந்தார். இவர் வந்த உடனே அடுத்தடுத்து 2 சிக்சர் விளாசினார்.

இதனால் 50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 363 ஓட்டங்கள் குவித்துள்ளது. சகா 10 ஓட்டங்களுடனும், படேல் 14 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இலங்கை தரப்பில், ரண்டீவ் 3 விக்கெட்டுகளும், காமக், பிரியான்ஜன் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர் 364 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில், தில்சான் 18 ஓட்டங்களில் உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து சங்ககாரா களம் இறங்கினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவர் 13 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார்.

அடுத்து ஜெயவர்த்தனே களம் இறங்கினார். இவர் பொறுப்புடன் ஆடினார். ஆனால் மறுமுனையில் விளையாடிய தரங்கா 28 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ஜெயவர்த்தனே 43 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

இதனால் இலங்கை அணி 39.1 ஓவரில் 194 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதனால் இந்தியா 169 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

SHARE