யாழ். குடாநாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையானளவு இராணுவத்தினர் மாத்திரமே நிலைகொண்டுள்ளதாக யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த தெரிவித்துள்ளார்.
பலாலி இராணுவ படைத் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறினார்.
யாழ். குடாநாட்டில் பாதுகாப்பு மற்றும் சிவில் தேவைகளுக்காக சுவீகரிக்கப்பட்டிருந்த 19,159 ஏக்கர் காணி இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார்.
யுத்தம் நிறைவுபெற்றபோது யாழ்ப்பாணத்தில் 152 இராணுவ முகாம்கள் இருந்தபோதிலும் தற்போது அந்த எண்ணிக்கை 93 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
59 இராணுவ முகாம்கள் முற்றாக அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
51 ஆம் 52 ஆம் மற்றும் 55 ஆம் படைப்பிரிவுகளைச் சேர்ந்த இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த 12,901 ஏக்கர் காணியும் பலாலி இராணுவ முகாமின் கட்டுப்பாட்டில் இருந்த 628 ஏக்கர் காணியும் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேலும் கூறியுள்ளார்.