இலங்கைக்கு வருகை தந்து தாம் இரண்டு தினங்களாக மேற்கொண்ட விஜயங்களில் யாழில் மக்களிடம் வீட்டுத்திட்டத்தினை கையளிக்கும் நிகழ்வு தம்மை நெகிழவைத்ததாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இந்திய அரசாங்கத்தின் உதவித்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் கீரிமலையில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் கலாசார முறைபடி, பால்பொங்கி வீடுகளை கையளித்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
நான் இலங்கைக்கு வருகை தந்து இரண்டு தினங்களாக பல பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டேன்.
எனினும், தற்போது இந்திய மத்திய அரசாங்கத்தின் நிதியுதவின் கீழ் இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளை அதன் பயனாளிகளிடம் கைளிக்கும் நிகழ்வு என்னை நெகிழவைத்தது.
இந்திய மத்திய அரசாங்கத்தினால் இலங்கையில் 50 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவுள்ளன. இதன் முதல் கட்டமாக இங்கு தற்போது 27 ஆயிரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், எஞ்சிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும். இதில் 5 ஆயிரம் வீடுகள் மலையகத்தில் அமைக்கப்படவுள்ள அதேவேளை, ஏனைய வீடுகள் வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிர்மாணித்து கொடுக்கப்படும்.
கடந்த 2001 ஆம் ஆண்டு குஜராத்தில் நிலநடுக்கத்தினால் பாதிகப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தினை அவர்களே நிர்மாணித்தனர். இந்த நிலையில் இவ்வாறாதொரு முறைமை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமையானது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய மத்திய அரசாங்கம் தொடர்ந்தும் உதவிகளை வழங்கும். இதனை பாதிகப்பட்ட மக்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.