ரஷ்யாவில் மர்மமான முறையில் இறந்த இலங்கையர் குறித்து முழுமையான விசாரணை ஆரம்பம்

325
ரஷ்யாவில் மர்மமான முறையில் உயிரிழந்த ஆர்.கே.ஏ.டி. நோயேல் ரணவீரவின் மரணம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்தி நீதிமன்றத்தில் மீண்டும் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அத்தனல்ல பிரதான நீதவான் எம்.வை.எம். இரிஷாதீன், நிட்டம்புவ பொலிஸாருக்கு நேற்று உத்தரவிட்டுள்ளார்.

ரஷ்யாவில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றி வந்த 36 வயதான ரணவீர 9 மாதங்களுக்கு முன்னர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்த மரணம் குறித்த விசாரணை இதற்கு முன்னர் அத்தனகல்ல பதில் நீதவான் முன்னிலையில் நடைபெற்று வந்தது.

நோயேல் ரணவீர 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் திகதி ரஷ்ய நகர் ஒன்றில் உள்ள ஹொட்டலில் மர்மமான முறையில் இறந்தார்.

தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி ரணவீரவின் தாயான 71 வயதான ஜீ.ஏ. ஜெசப்பீன் நோனா, அவரது சட்டத்தரணி உபாலி குமாரசிங்க ஊடாக மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, வாதங்களை முன்வைத்த சட்டத்தரணி, நோயேல் ரணவீர, ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவின் ஹொட்டல் ஒன்றில் 202 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார்.

உதயங்க வீரதுங்க, 2008 ஆம் ஆண்டு ரஷ்யாவுக்கான இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, நோயேல் ரணவீர, உதயங்க வீரதுங்கவின் செயலாளராகவும் மொழிப்பெயர்ப்பாளராகவும் நியமிக்கப்பட்டதாக சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், நோயேல் ரணவீர ரஷ்யாவில் திடீரென இறந்து போனதாகவும் அவரது உடலை இலங்கை அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வீரதுங்க, ரணவீரவின் குடும்பத்தினருக்கு அறிவித்திருந்தார்.

மரணத்திற்கான காரணங்களை அறிய ரணவீரவின் குடும்பத்தினர் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் உதயங்க வீரதுங்க அந்த முயற்சிகளை முறியடித்துள்ளதுடன், 2014 ஜூன் மாதம் 18 ஆம் திகதி வெலிகடைமுல்லயில் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த மரணத்தின் பின்னணியில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உறவினரான உதயங்க வீரதுங்கவிற்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அத்தனகல்ல வெலிகடைமுல்ல பகுதியில் அடக்கம் செய்யப்பட்டிருந்த அவரது உடல் விசாரணைக்காக இன்று தோண்டி எடுக்கப்பட்டது.

SHARE