வவுனியா நகரினை அண்மித்துள்ள சதொச விற்பனை நிலையத்தில் அத்தியாவசிய பொருட்கள் சில பதுக்கல் மேற்கொண்டமையினையடுத்து பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் முறியடிக்கப்பட்டது.
ஒரு கிலோ கிராம் 65 ரூபாய்க்கு மீன் டின் 100 ரூபாவுக்கு அன்று (18.03) அதிகாலை 12.00 மணிமுதல் விற்பனை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்ட விசேட அறிவிப்பினையடுத்து நாடளாவிய ரீதியில் பொதுமக்களின் கொள்வனவு அதிகரித்துள்ளது.
அந்த வகையில் வவுனியா நகரினை அண்மித்துள்ள சதொச விற்னை நிலையத்தில் காசாளர் மேசையின் கீழ்பகுதியில் மீன் டின் இருந்த போதிலும் மீன் டின் முடிவடைந்துவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினருக்கு பொதுமகனொருவர் தகவல் வழங்கியதினையடுத்து சதொச விற்பனை நிலையத்திற்கு விரைந்த பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது களஞ்சிய அறையிலிருந்து ஒரு பெட்டி மீன் டின் கைப்பற்றியதுடன் காசாளர் மேசையின் கீழ் பகுதியில் இருந்த மீன் டின்களும் கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட மீன்டின்களை மக்களுக்கு விற்பனை செய்யுமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் சதொச உத்தியோகத்தர்களுக்கு உத்தரவு பிறப்பித்தமையினையடுத்து பொது மக்களுக்கு மீன் டின் வழங்கப்பட்டது.
எனினும் பதுக்கல் நடவடிக்கையினை மேற்கொண்ட சதொச உத்தியோகத்தர்கள் மீது பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் எவ்வித சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.