வவுனியா சிதம்பரபுரத்தில் அமைந்துள்ள நலன்புரி நிலைய காணிகளை அங்கு வாழும் மக்களுக்கு விரைவில் பிரித்து வழங்குவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்
சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்கள் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நேற்றைய தினம் (8.4) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந் நிலையில் இச் சம்பவம் தொடர்பாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்தே வட மாகாண முதலமைச்சர் எழுத்து மூலமாக இவ் உறுதிமொழியை நேற்று வழங்கியுள்ளார்.
முதலமைச்சர் வவுனியா மாவட்ட தமிழரசுக் கட்சியின் உறுப்பினரொருவர் மூலமாக சிதம்பரபுரம் மக்களின் தலைவர் பஞ்சலிங்கத்திடம் ஒப்படைத்துள்ள இக் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இவ் விடயம் தொடர்பாக கடந்த மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் நீங்கள் தற்போது வசிக்கும் காணிகள் உங்களுக்கே பிரித்து வழங்குவது என முடிவெடுக்கப்பட்டது.
இவ் விடயம் தொடர்பாக மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனுடனும் கலந்துரையாடப்பட்டது. இணைத்தலைவராக இருந்த ரிசாட் பதியுர்தீனுடனும் கலந்துரையாடப்பட்டது. விரைவில் உங்கள் காணிகள் உங்களுக்கு பிரித்து கொடுக்க ஆவண செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் சிதம்பரபுர மக்கள் காணி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
வவுனியா சிதம்பரபுர மக்கள் தங்களுக்கு காணி வழங்கக் கோரி இன்று (08-04-2015) காலை 10 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன் ஒன்று திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசங்களை எழுப்பியவாறு வவுனியா மாவட்ட செயலகம் வரைக்கும் ஊர்வலமாக சென்ற மக்களை மாவட்ட செயலகத்திற்குள் செல்ல விடாமல் பொலிசார் தடுத்து நிறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் 100 நாள் திட்டத்தில் தீர்வு தா அரசே எமக்கு காணி வேண்டும், ஆண்டு 20 கடந்த பின்பும் எமக்கு இடமில்லையே நாங்கள் மனிதர் இல்லையா? நாங்கள் இருளுக்குள் வாழ்கிறோம் எங்களுக்கு இருள் நீங்கி ஒளி பெற வேண்டும், எமக்கு ஒரு இருப்பிடம் தேவை அதை அமைப்பதற்கு காணி வேண்டும் போன்ற பதாதைகளை தாங்கியிருந்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களில் வவுனியா அரசாங்க அதிபரை சந்திக்க 5 பேரை மாத்திரம் அனுமதித்த பொலிசார் மாவட்ட செயலகத்திற்குள் செல்ல பத்திரிகையாளருக்கும் அனுமதி மறுத்திருந்தனர். வவுனியா அரசாங்க அதிபர் கே.எம்.பந்துலகரிச்சந்திர சந்தித்த மக்களில் ஒருவர் (தாண்டவராஜன் பஞ்சலிங்கம்) கருத்து தெரிவிக்கையில், வவுனியா அரசாங்க அதிபர் கே.எம்.பந்துலகரிச்சந்திர மீள்குடியேற்ற அமைச்சிலிருந்து தனக்கு அறிவுறுத்தல் தரப்படுமிடத்து தன்னால் காணிகளை வழங்கமுடியுமென கூறியதாக தெரிவித்தார்.