வவுனியா புளியங்குளம் திவிநெகும பயிற்சி நிலையத்தில் கடமையாற்றும் 17
ஊழியர்கள் நடுத்தெருவில் : தற்கொலை செய்துகொள்ளப்போவதாக தெரிவிப்பு
வவுனியா பரசங்குளம் புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள திவிநெகும
பயிற்சி நிலையத்தில் கடந்த 2011ஆண்டிலிருந்து 17பேர் தற்காலிகமாக
பணியாற்றி வருகின்றனர்.
தற்போது புதிய அரசாங்கம் திவிநெகும
செயற்திட்டத்தில் பணியாற்றுபவர்களை வேறு திணைக்களங்களுக்கு கைமாற்றும்
வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து முன்னெடுத்துச் செல்கின்றது
கடந்த மாதம் கொள்கை திட்டமிடல் பொருளாதார அலுவல்கள் அமைச்சின்
அலுவலகத்திலிருந்து அனுப்பியுள்ள கடிதத்தில் யாழ். பல்கலைக்கழக விவசாயபீடத்தின்
கிளிநொச்சி அறிவியல் நகரிலிருக்கும் பீடாதிபதி திருமதி.சிவச்சந்திரன்
அவர்களை விவசாய பீடத்திற்கு இக்கட்டிடத்தினை பொறுப்பேற்குமாறு அனுமதி
வழங்கப்பட்டுள்ளது.
அவர் இதுபற்றி கருத்துத் தெரிவிக்கும் போது, அசையும் அசையா சொத்துக்களை
மாத்திரம் தான் பொறுப்பேற்றுள்ளதாகவும இருந்தபோதும் இப்பணியாளர்கள்
தொடர்பாகவும் கவனம் எடுப்பதாகவும் 3மாத கால அவகாசம் கோரியபோதும் 17
பணியாளர்களும் இவரின் இக் கருத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும்
தெரிவித்தார்.
எனவே இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு நியமனம் வழங்கப்படாததையிட்டு
இப்பணியாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ள நிலையில் இவர்கள் எமது
செய்திசேவைக்கு கருத்து தெரிவிக்கையில்
இங்கு பணியாற்றும் ஊழியர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு உறவுகளை இழந்தவர்களாக
காணப்படுகின்றனர். கடந்த ஜந்து வருடங்களாக பணியாற்றி வரும் எமக்கு நிரந்தர
நியமனம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததுடன் சில தினங்களில்
போராட்டத்தில் இறங்கவுள்ளதாகவும் அப் போராட்டத்தில் நியாயம்
கிடைக்காதபட்சத்தில் குடும்பத்தின் வறுமை காரணமாக தற்கொலை செய்வதைத் தவிர வேறு
வழி இல்லை என்றும் கருத்துத் தெரிவித்தனர்.