அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழும் பூந்தோட்ட அகதிமுகாம் மக்கள்
வவுனியா பூந்தோட்ட அகதிமுகாம் மக்கள் கடந்த 18 வருடங்களாக நலன்புரி நிலையத்திலேயே வசித்து வருகிறார்கள். அம்மக்களை குடியேற்றுமுகமாக நெடுங்கேணி சின்ன அடம்பனில் ராசபுரம் பகுதியை வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் நெடுங்கேணி பிரதேச செயலாளர் எஸ்.பரந்தாமன் அவர்களும் அந்தப்பகுதியை பார்வையிட்டனர்.
ராசபுரம் பகுதியை பார்வையிட்ட வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கருத்து தெரிவிக்கையில்,
1990 பின் இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்த மக்களும், 1995 இல் இந்தியாவிலிருந்தும் வந்த மக்களும் கடந்த 25 வருடங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளுமின்றி பூந்தோட்ட நலன்புரி நிலையத்தில் தற்காலிக முகாம்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
அந்த மக்களை மீள் குடியேற்றம் செய்வதற்கு வவுனியா அரசாங்க அதிபரால் மும்மொழியப்பட்ட திட்டத்தின் படி இந்தப் பிரதேசத்தில் 100 ஏக்கர் காடுகள் சுத்தம் செய்யப்பட்டு அவர்களுக்கு பிரித்துக்கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பூந்தோட்ட நலன்புரி முகாம் மக்கள் இணக்கம் தெரிவிக்கும் பட்சத்தில் வடக்குமாகாண சபை மத்திய புனர்வாழ்வு அமைச்சுடன் சேர்ந்து அவர்களை எல்லா வசதிகளுடனும் மீள் குடியேற்றுவதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படும்.
வடமாகாண சபையின் புனர்வாழ்வுக்கும் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் இந்த மீழ்குடியேற்றம் தொடர்பான நடவடிக்கைகளில் வடக்கு மாகாண சபை தன்னை முற்று முழுதாக ஈடுபடுத்திக்கொள்ளும்.
குடியேற்றப்படும் மக்களுக்கு சுயதொழில் வாய்ப்புகள் வருமானத்திற்கான காணித்துண்டுகள் வழங்கப்படுவதுடன் அவர்கள் பதிய வாழ்க்கையை ஆரம்பிக்க உறுதுணையாக இருப்போம் என தெரிவித்தார்