நாட்டின் முக்கிய பிரச்சினைகளை அனைத்துக் கட்சிகளுமாகக் கதைத்துத் தீர்வு காண்பதற்காக தேசிய நிறைவேற்றுச் சபை என்னும் அதியுயர் சபை ஒன்றை புதிய அரசு அமைத்திருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இரண்டு மாதங்களாகின்றன. அந்த சபையில் என்னென்ன முக்கியமான பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எட்டப்பட்டன என்று யாருக்காவது தெரியுமா?

391

 

நாட்டின் முக்கிய பிரச்சினைகளை அனைத்துக் கட்சிகளுமாகக் கதைத்துத் தீர்வு காண்பதற்காக தேசிய நிறைவேற்றுச் சபை என்னும் அதியுயர் சபை ஒன்றை புதிய அரசு அமைத்திருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

இரண்டு மாதங்களாகின்றன. அந்த சபையில் என்னென்ன முக்கியமான பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எட்டப்பட்டன என்று யாருக்காவது தெரியுமா?

550_content_Mahinda and my3 PHOTOS-5588e2 TNA-press TNA-press-meet

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை மாற்ற ஜனாதிபதி தலைமையிலான கட்சியாகிய சிறிலங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்புத் தெரிவித்ததும், தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கு ஆறு மாதங்களாவது தேவை, அதுவரை தேர்தல் நடத்தப்படக் கூடாது என்று அக்கட்சி கேட்டுக்கொண்டதுமே இதுவரை தெரியவந்த செய்திகளாக உள்ளன.

இத்தனைக்கும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகத்தான் இந்த அனைத்துக்கட்சி சபையை அமைக்கும்படி கோரியிருக்கிறோம் என்று ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியிருந்தது.

ஆனால், கூட்டமைப்புத் தலைவரும் அங்கத்துவம் வகிக்கும் அந்த சபையில் இனப்பிரச்சினை குறித்து எதுவும் பேசப்பட்டதாகத் தகவல் இல்லை. ஏன் பேசப்படவில்லை என்று தமிழ் மக்கள் சார்பாகக் குரல் தருவதாகக் கூறிக்கொள்ளும் யாரும் கேள்வி எழுப்பியதாகவும் இல்லை.

தேசிய நிறைவேற்றுச் சபை இரண்டாவது முறை கூடியபோதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்குச் செல்லாமல் புறக்கணித்ததாக கொழும்பு ஆங்கிலப் பத்திரிகைகள் எழுதியிருந்தன. ஏன் போகவில்லை என்று தமிழ் மக்களுக்காகக் குரலெழுப்பும் கடமையிலிருக்கும் புண்ணியாத்மாக்கள் யாரும் கேட்கவில்லை.

இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மைத்திரியுடனும் சந்திரிகாவுடனும் ரணிலுடனும் பேசி வாக்குறுதிகளைப் பெற்றிருக்கிறோம் என்று சொல்லி தமிழ் மக்களைத் தேர்ந்தெடுக்கச் சொன்ன புதிய அரசுடனும் இனப்பிரச்சினைத் தீர்வுக்குப் பேசிப் பிரயோசனமில்லை என்ற ஞானோதயத்தை உடனடியாகவே எப்படித் தமிழினம் அடைந்துவிடுகிறது?

தமிழ் மக்களுக்கு இந்த அவநம்பிக்கையை ஆழ ஊன்றிவிடுபவர்கள் யார்? சிங்கள அரசாங்கம் எதுவும் தமிழர்களுக்கு ஒன்றையும் தராது என்பதுதான் அடித்தெளிவு என்றால், தேர்தல்களின் போது சிங்களத் தலைவர்கள் பற்றிய நம்பிக்கைகளைத் தமிழ் மக்களுக்குச் சொல்லப்படுவது ஏன்?

உள்நாட்டுக்குள் இந்தப் பிரச்சினையைப் பேசித் தீர்க்க முடியாது என்று தேர்தல்களின் முடிவில் கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், சர்வதேசம் தலையிட்டுத்தான் தீர்க்க முடியும் என்ற மாயையில் தமிழ் மக்களை வைத்திருக்கின்றனர்.

இவர்கள் உள்ளே எதுவும் சரிவராது, வெளியே இருந்துதான் தீர்வு வரவேண்டும் என்று சொல்லிவிட்டுக் காத்திருக்கின்றனர். சர்வதேசமோ, சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்குப் பதிலாக உள்ளக விசாரணையில் நம்பிக்கை கொள்வதாகக் கூறுகின்றது.

உடனேயே இவர்கள், “மைத்திரியை ஆள வைத்து ஐ.நாவை நாம் இழந்தோம்” என்று ஒப்பாரியை ஆரம்பிக்க… கேள்வி எதுவும் கேட்காமல் சேர்ந்து அழத் தயாராகி விடுகிறது தமிழினம். அவ்வளவு சிங்கள இனவெறுப்பில் ஆழ்த்தப்பட்டிருக்கிறது இந்த ‘முன்தோன்றிய மூத்த குடி!’

ஐ.நா எங்களுக்கு எதைச் செய்து தந்திருக்கும் என்பதற்கு ஒருபோதும் விளக்கம் கேட்டிருக்காமலே, எதையோ இப்போதுதான் இழந்துவிட்டோம் போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டு, செத்தவீட்டு வாசலுக்கு வந்தவுடன் நெஞ்சிலடித்துக்கொண்டு

ஓடிவரும் உறவைப்போல அழுகை காட்டுகிறது இந்தச் சமூகம்!

என்னமாதிரியான ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்!

SHARE