மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தோண்டப்பட்ட இடத்தில் காணப்பட்டதாக கூறப்படும் கிணற்றை தோண்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மன்னார் நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) அனுமதி வழங்கியுள்ளது.
மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரனை இன்று (திங்கட்கிழமை) மன்னார் நீதிமன்றத்தில் மன்னார் நீதவான் அலெக்ஸ் ராஜா முன்னிலையில் இடம் பெற்ற போதே நீதவான் குறித்த அனுமதியை வழங்கியுள்ளார்.
மாந்தை திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தோண்டப்பட்ட இடத்திற்கு அருகில் கிணறு காணப்படுவதாகவும் அதனை தோண்ட நடவடிக்கை எடுக்குமாறும் கோரி காணாமல் போனவர்களின் உறவினர்கள் சார்பாக நீதிமன்றில் ஏற்கனவே வழக்குத்தால்கள் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த கிணற்றை பார்வையிட காணாமல் போனவர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் மன்னார் நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்த நிலையில் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த போதும் குறித்த பகுதியில் மழை நீர் தேங்கி நின்றமையினால் கிணற்றை பார்வையிட முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த பகுதியில் காணப்பட்ட கிணற்றை தோண்ட வேண்டும் என காணாமல் போனவர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் விண்ணப்பம் செய்தனர்.
இதன் போது இன்று விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் அலெக்ஸ்ராஜா குறித்த கிணற்றை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரையிலான 5 தினங்களுக்குள் தோண்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கினார்.
காணாமல் போனவர்கள் சார்பாக கொழும்பில் இருந்து வருகை தந்த சட்டத்தரணிகளான வி.புவிதரன், வி.எஸ்.நிரஞ்சன், கொழும்பு சட்டத்தரணிகள் சங்கம் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.இரட்ண வேல் மற்றும் மன்னார் சட்டத்தரணிகளான எம்.சபூர்தீன், பிரிமூஸ் சிறாய்வா, லோகு,எஸ்.வினோதன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த வழங்கு மீதான விசாரணைகள் மீண்டும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.