யுத்தகால அனுபவத்தைக் கொண்டு பட்டினியிலும், கொடூர நோயிலிருந்தும் விடுபடுவோம்

425

யுத்தகால அனுபவத்தைக் கொண்டு பட்டினியிலும், கொடூர நோயிலிருந்தும் விடுபடுவோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், மக்கள் அனைவரும் சமூகப் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது எதிர்நோக்கியுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு மக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், “இன்று உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்ற கொரோகா வைரஸ் இந்த உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கிறது.

இந்நிலையில் இலங்கையில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தாவடிப் பகுதியில் ஒரு நோயாளி இனங்காணப்பட்டுள்ள நிலையில் கிட்டத்தட்ட 1,700 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, வடக்கு மாகாண சுகாதார அமைச்சில் வைத்தியர்களுடனான சந்திப்பின்போது, எச்சரிக்கையின்றி விட்டால் இரண்டு நாட்களில் இருபது பேரைத் தாக்கும் என வைத்தியர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

உலகின் பெரிய நாடுகளே அச்சத்தில் உறைந்திருக்க, தமிழர்களாகிய நாமும் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும். 4 இலட்சத்திற்கும் மேலான மக்கள் இடம்பெயர்ந்திருந்த வேளை 70 ஆயிரம் மக்கள் இருப்பதாகக் கூறி அனுப்பப்பட்ட பொருட்களையே பகிர்ந்துண்டு உயிரைக்காத்தவர்கள் நாங்கள்.

அதைப்போன்று இருப்பவற்றைக்கொண்டு இல்லாதவர்களுக்கும் பகிர்ந்து பட்டினியில் இருந்தும் கொடூர நோயிலிருந்தும் எம்மை நாமே சுயமாகப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டார்.

SHARE