தற்பாதுகாப்பு நடவடிக்கையுமின்றி தோட்டத் தொழிலாளர்கள் நாளாந்த தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

422

மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் சில தோட்டங்களில் எவ்வித சுகாதார தற்பாதுகாப்பு நடவடிக்கையுமின்றி தோட்டத் தொழிலாளர்கள் நாளாந்த தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் முகக் கவசம் அணிந்திருக்கவில்லை என்பதுடன், கைகளைக் கழுவுதல் உட்பட தற்பாதுகாப்பு சுகாதார நடைமுறைகளைக் கூட பின்பற்றாமல் தொழிலில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சில தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு முகக் கவசங்களை வழங்கியிருந்தாலும் பெரும்பாலான நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என தலவாக்கலை, அக்கரப்பத்தனை, டயகம பகுதிகளிலுள்ள தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், தோட்ட நிர்வாகங்களால் எவ்வித வசதிகளும் செய்துகொடுக்கப்படவில்லை எனவும் பொலிஸ் ஊடரங்குச் சட்டம் அமுலில் இருக்கும் போதும் நாளாந்த தொழில் நடவடிக்கைகளுக்கு நிர்ப்பந்திக்கப்படுவதாக தொழிலாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கொழுந்து கொய்தல் மற்றும் இதர வேலைகளில் ஈடுபட்டவர்கள், வேலை முடிந்ததும் கைகளைக் கழுவாமல் உணவு உட்கொள்வதையும் காணமுடிந்தது.

இதன்போது, “சம்பள முற்பணம் கூட இன்னும் வழங்கப்படவில்லை. ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர்கூட பொருட்களை வாங்க முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டோம்.

கொழும்பு உட்பட வெளியிடங்களில் தொழில் புரிந்தவர்கள் கூட தற்போது வீடுகளுக்கு வந்துவிட்டதால் பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றோம். எனவே, அரசாங்கம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE