“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இலஞ்ச ஊழல் தடுப்பு விசாரணைக் குழு அழைப்பாணை விடுத்திருந்தால், அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தினூடாக இடைக்கால தடையுத்தரவைப் பெறமுடியும்” எனச் சுட்டிக்காட்டிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிரணி உறுப்பினர்கள் கூறுவதுபோல் மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பாரிய பிரச்சினை எதுவும் இல்லை என்றும் கூறினார்.
அப்படியே பிரச்சினை இருந்தாலும் தான் தொலைபேசியூடாக அதுபற்றி கலந்துரையாடுவார் எனவும் பிரதமர் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று, எதிர்க்கட்சி உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட சர்ச்சைக்குப் பதிலளிக்கையிலேயே பிரதமர் இப்படி குறிப்பிட்டார். “வாக்குமூலம் பெறுவதற்காகவே மஹிந்த ராஜபக்ஷவை வருமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. அவர் வாக்குமூலம் வழங்கினால் சிலவேளை, அது திஸ்ஸவுக்குச் சாதகமாகக்கூட அமையலாம்.
சுதந்திரக் கட்சியிலுள்ள பிரச்சினைகளை சபையில் கதைப்பதில் பயன் இல்லை. அழைப்பாணை கிடைத்தது சிக்கல் என்றால், மஹிந்த ராஜபக்ஷ தனது சட்டதரணியூடாக அதற்கு எதிராக உயர்நீதிமன்றில் இடைக்கால தடையுத்தரவைப் பெறலாம். நிலைமை இவ்வாறிருக்கையில் எதிரணி உறுப்பினர்கள் ஏன் இங்கு சர்ச்சை எழுப்புகின்றனர் எனப் புரியவில்லை. மஹிந்த, கோட்டா ஆகியோருக்கு எதிராக சட்டரீதியாகவே நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்துக்குப் புறம்பான வகையில் எந்தவொரு நடவடிக்கையும் இடம்பெறாது”