இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் புலி படத்தின் ஒளிப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியிருப்பது படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நடிகர் விஜய் நடித்து வரும் ‘புலி’ படம் சரித்திர பின்னணியில் உருவாகிவருகின்றது. இப்படத்தில், விஜய்யுடன் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மோத்வானி, ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகர் விஜய் அரசராகவும், குள்ள மனிதராகவும் இரண்டு வேடங்களில் நடிக்கின்றார் என இப்படம் பற்றி தினம் ஒரு செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. ஆனால் படக்குழு இதுப்பற்றி எதையும் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், தற்போது இணையதளங்களில் விஜய்யின் ‘புலி’ படத்திலிருந்து ஒரு ஒளிப்படம் வெளியாகியுள்ளது. அதில் விஜய், வேட்டைக்காரன் போன்று உடை அணிந்து நடந்து வருகிறார். இப்படியொரு ஒளிப்படம் வெளியாகியிருப்பது படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதுப்பற்றி இப்படத்தில் நடித்து வரும் வித்யூலேகா ராமன் கூறுகையில், புலி படத்தின் முதல்பார்வை தயாராகி வருகிறது. ஆறு மாதமாக பாதுகாத்து வந்த புலி படத்தின் ஒளிப்படங்கள், இப்போது கள்ளத்தனமாக வெளியாகியிருப்பது எரிச்சலாகவும், ஏமாற்றமாகவும் அனைவரையும் மன வருத்தத்தில் ஆழ்த்தியும் உள்ளது என்று கூறியுள்ளார்.