அரசியலமைப்புச் சட்டத்தின் 19வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதன் மூலம் நாட்டில் ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் ஸ்தாபிக்கும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைகின்றது.
நாடாளுமன்ற அதிகாரங்களை கவனத்தில் கொள்ளாது கட்சி மாறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை எடுத்து, மீண்டும் நாடாளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் சம்பந்தன் கூறினார்.
அத்துடன் நீதித்துறை சுதந்திரம்,, பொலிஸ் ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழு, கணக்காய்வு ஆணைக்குழு போன்றவை ஸ்தாபிக்கப்படுவதன் மூலம் சுதந்திரமான நிர்வாகம் உருவாகும் எனவும் சம்பந்தன் குறிப்பிட்டார்.