எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பிரதான கட்சிகள் மூன்று கூட்டமைப்புக்களில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக இம்முறை பொதுத் தேர்தல் மும்முனைப் போட்டியாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி சில கட்சிகளை இணைத்துக் கொண்டு ஓர் கூட்டணி அமைக்க உள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, தேசிய தொழிலாளர் காங்கிரஸ் ஆகியன ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட உள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புதிய கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளது.
ஜாதிக ஹெல உறுமய ஜனநாயகக் கட்சி ஜே.வி.பியிலிருந்து பிளவடைந்து சென்ற தரப்புக்கள், தமிழ் முஸ்லிம் தொழிற்சங்கள் இரண்டு ஆகியன இவ்வாறு சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகிச் சென்ற சில சிரேஸ்ட உறுப்பினர்களும் சுதந்திரக் கட்சியின் ஊடாக போட்டியிட விருப்பம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான தரப்பினர் கூட்டணி ஒன்றை அமைத்து போட்டியிடத் தீர்மானித்துள்ளனர்.
மஹஜன ஐக்கிய முன்னணி தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, ஸ்ரீலங்கா மஹஜன கட்சி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேச விடுதலை மக்கள் கட்சி, ஆகியன இவ்வாறு புதிய கூட்டணி ஒன்றை அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.