இராணுவ புலனாய்வாளர்களால் தமிழர் தேசத்தில் சிதைக்கப்பட்ட கலாச்சராத்தின் வெளிப்பாடே வித்தியாவின் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக் கொலை.
20.05.2015 புதன்கிழமை புதுக்குடியிருப்பு நகர வர்த்தக சங்கம், புதக்குடியிருப்பு ஆட்டோ சங்கம் மற்றும் பாடசாலை மாணவர்களின் பங்களிப்புடன் நடாத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினரும், வைத்திய கலாநிதியுமான சி.சிவமோகன் கலந்து கொண்டு
உரையாற்றினார்.
அவர் கருத்து தெரிவிக்கையில் பொறுப்பற்ற பொலிஸ் நிர்வாகம், அனாவசிய தலையீடுகளை மேற்கொள்ளும் ராணுவம் மற்றும் புலனாய்வு என்ற போர்வையில் அங்கு இறக்கிவிடப்பட்ட சிங்கள இளைஞர்கள் என அனைத்தும் பேரினவாதத்தின் தமிழர் அடக்குமுறை அட்டவணையிலே செயல்பட்டனர். குற்றவாளிகள் தப்பிக் கொள்ளலாம் என்ற ஒரு நிலை வடபகுதியில் காணப்படுவது இன்று இப்படி ஒரு பாதகச் செயல் இடம்பெற காரணமாகியது.
கொடிய யுத்தத்தின் முடிவில் இசைப்பிரியா உட்பட எண்ணுக் கணக்கற்ற தமிழ்ப் பெண்கள் சிங்கள இராணுவ கயமுகர்களால் சிதைத்துக் கொல்லப்பட்டனர். அனைத்துக்கும் ஆதாரமாக வீடியோக்கள் சாட்சிகள் இருந்தும் ராஜபக்ஷ அரசு அதை ஒரு கணக்காககூட எடுத்துக் கொள்ளவில்லை. கொல்லப்பட்ட உடல்களின் மீதுகூட இறந்த உடல்களின் மார்பகங்களை வெட்டி சிதைத்து தமது பாலியல் இச்சைகளை தீர்த்துக்கொண்டனர். தொடர்ந்து செட்டிகுளத்தில் முட்கம்பி வேலிகளில் அடைக்கப்பட்டவர்கள் மீள் குடியேற்றமென்று நிம்மதியாக தங்களின் கிராமங்களுக்குள் மீள்குடியேறினர். அவர்களுடன் சேர்ந்து அநியாயத்திற்கு புலனாய்வாளர்களும் எமது கிராமங்களில் ஊடுருவிக் கொண்டனர். எமது இளைஞர்களை மதுப்பிரியர்களாக்கி சமூக விரோத செயல்களில் கேட்பாரின்றி அக்காலத்தில் ஈடுபடுத்திக் கொண்டனர். அவர்களின் நோக்கம் தமிழர்களின் கலாச்சாரத்தை சீரழித்து எமது சமுதாயத்தின் வளர்ச்சியை சீர்குலைப்பதாகவே இருந்தது. யுத்தத்தில் கணவன்மார்களை இழந்த ஆயிரக்கணக்கான பெண்கள் அவர்களால் குறிவைக்கப்பட்டனர். விசாரணை என்ற போர்வையில் தினசரி அவர்களின் வீடுகளுக்கு சென்ற புலனாய்வாளர்கள் அவர்களை மனோவியல் ரீதியில் கடும் தாக்கத்திற்கு உட்படுத்தினர். ஒட்டு மொத்தத்தில் அவர்களின் நோக்கம் எமது கலாச்சரா விழுமியங்களை சீர்குலைப்பதாகவே இருந்தது. அதன் விளைவே இன்று வித்தியாவின் மீதான கூட்டுப் பாலியல் வன்புணர்வுக் கொலையாகும்.