07 வயதுச் சிறுமி கூட்டு வன்புணர்வு! கிளிநொச்சியில் சம்பவம் அச்சத்தில் மக்கள்.

363

கிளிநொச்சி  சிவபுரம் பகுதியில் 7 வயது சிறுமியொருவர் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) பாடசாலைக்குச் சென்ற சிறுமி, வீடு திரும்பியதும் சுகயீனமுற்ற நிலையில் காணப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறுமி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், சம்பவத்தின் பிரதான குற்றவாளியாக 12 வயது சிறுவன் ஒருவன் இனங்காணப்பட்டுள்ளார். ஏனையோர் தொடர்பான விசாரணைகளை, பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியும் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட சந்தேக நபரும் சிறுவர்களாக இருப்பதால், அவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு அதனடிப்படையில் விசாரணைகள் நடைபெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவம் நடந்து இரண்டே வாரங்களில் இவ்வாறானதொரு சம்பவம் நடைபெற்றுள்ளமை, மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தையடுத்து, கிளிநொச்சி கல்விப் பணிமனையினால் விசேட கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது, மாணவர்களின் செயற்பாடுகள், குறிப்பாக பாடசாலை செல்லும்போது மற்றும் பாடசாலை முடிந்து வீடு திரும்பும் போது மாணவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

SHARE