யாழ் தடயவியல் பொலிஸ் பிரிவின் சார்ஜன் றொசான் சில தடயங்களை மன்றில் முன்வைத்து சாட்சியமளித்தார்.
2015.05.14 அன்று ஊர்காவற்றுறை தலைமை பொலிஸ் நிலையத்தில் இருந்து தொலைபேசி அழைப்புவந்தது.
10ம் வட்டாரம் ஆலயடி சந்தி புங்குடுதீவு என்ற முகவரியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் பரிசோதனைகளைச் செய்யுமாறும் எமக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சுமார் 8.30 மணியளவிலேயே எமக்கு அந்தத் தகவல் கிடைத்தது நானும் எனது மேலும் இரு உத்தியோகத்தர்களும் 61-7526 என்ற ஜீப் வண்டியில் ஸ்தலத்திற்குச் சென்றோம்.
அங்கு சென்ற நான் 9.30 முதல் 11.55 வரை சடலம் இருந்த இடத்தினில் பரிசோதனை செய்தேன் நான் அங்கு செல்லும்போது மழையுடன் கூடிய காலநிலை அங்கு காணப்பட்டது. குற்றம் இடம்பெற்ற இடத்தில் ஊர்காவற்றுறை தலைமைப் பொலிஸ் பரிசோதகரும் இருந்தார்.
18 வயதுடைய வித்தியா என்னும் பாடசலை மாணவியே வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிப்பதாக அவரே அப்போது அவ்விடத்தில் வைத்து என்னிடம் கூறினார்.
சடலமானது நான் செல்லும்போது கறுப்புநிலை பொலித்தீன் பையினால் மூடப்பட்டிருந்தது. அங்கு யாழ் சட்ட வைத்திய அதிகாரியும் பிரசன்னமாகியிருந்தார்.
நானும் என்னுடன் வந்த உத்தியோகத்தர்களும் சம்பவ இடத்தை முற்றாகப் பரிசோதித்தோம். சம்பவம் இடம்பெற்ற இடமானது புங்குடுதீவு ஆலையடி சந்தியிலிருந்து 400 மீற்றர் தூரத்தில் குமாரசாமிப் பிள்ளையார் கோவிலுக்கு திரும்பும் சந்தியில் இடது புறத்தில் காடுகளால் சூழப்பட்ட இடம் காணப்பட்டது.
பாதையின் இரு புறத்திலும் 150 மீற்றர் வரை பற்றைக்காடுகள் அடர்ந்து பாழடைந்திருந்தன. பாதையிலிருந்து 7 மீற்றர் தூரத்திலியே குற்றப்பிரதேசம் இருந்தது.
எனினும் பாதையில் இருந்து பார்த்தால் காடுகள் வளர்ந்திருந்தமையால் அந்த இடம் தெரியாது. நான் ஒற்றையடிப் பாதை ஊடாக குற்றம் இடம்பெற்ற இடத்திற்குச் சென்றேன் அந்த இடத்தில் பனைமரங்கள் காணப்பட்டன. அலரிமரங்களும் இருந்தன.
அந்த இடம் இருள் சூழ்ந்திருந்தது. அந்தப் பின்னணியிலேயே சடலம் நிர்வாணமாக காணப்பட்டது. (இதன்போது குறுக்கிட்ட நீதிவான் சடலம் காணப்பட்ட விதத்தை குறிப்பிடுவதைத் தவிர்த்து தடயத்தை சேகரித்ததை மட்டும் கூறுமாறு தெரிவித்தார்)
கையுறை ஒன்றுடன் நான் சட்ட வைத்திய அதிகாரியுடன் இணைந்து சடலத்தை பரிசோதனை செய்ய ஆரம்பித்தேன் அதன்போது அந்தப் பெண்ணின் இடது புற மார்பில் பெண் ஒருவரின் அல்லாத உரோமங்கள் இரண்டு இருந்தன அவ் இரண்டு உரோமங்களையும் வெவ்வேறாக இட்டு 135/2015 என பதிவு செய்து சாட்சியமாக மன்றிடம் சமர்ப்பிக்கிறேன்.
இவற்றை அரச இரசாயனப் பகுப்பாய்வுக்கு அனுப்பி டிஎன்ஏ பரிசோதனையுடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். என்றார்.
பொலிஸ் கான்ஸ்ரபிள் துசார சாட்சியம்
இதனையடுத்து யாழ் தடயவியல் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிளான 28 வயதுடைய துசார என்பவர் சாட்சியமளித்தார்.
இந்தக் குற்றம் தொடர்பில் சந்தேகநபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதன்படி குற்றம் இடம்பெற்ற இடத்தை சோதனை செய்யும் பணி ஊர்காவற்றுறை தலைமைப் பொலிஸ் நிலையம் ஊடாக எமக்கு வழங்கப்பட்டது.
அதன்படி தலைமைப் பொலிஸ் பரிசோதகர் வீரசூரியவின் ஆலோசனையின்படி குலேந்திரன் ஜனனி றொசான் ஆகிய எனது சக உத்தியோகத்தர்களுடன் 61-7526 என்ற ஜீப் வண்டியில் குற்றம் இடம்பெற்ற இடத்திற்குச் சென்றோம். றொசானே வண்டியைச் செலுத்தினார்.
அங்கு சென்றபோது சந்தேகநபர்கள் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைய வரையப்பட்ட வரைபடம் ஒன்று அப்போது விசாரணைகளை செய்துவந்த உப பொலிஸ் பரிசோதகர் ஹிரானினால் எமக்கு வழங்கப்பட்டது அந்தப் படத்திற்கு அமைவாக நாம் சோதனைகளை ஆரம்பித்தோம்.
நாம் அவ்வாறு பரிசோதனைகளை ஆரம்பிக்கும்போது குற்றம் இடம்பெற்று 5 நாட்கள் கடந்திருந்தன.
நாம் பரிசோதனைகளை ஆரம்பிக்கும்போது சீரற்ற காலநிலையே காணப்பட்டது. குற்றம் இடம்பெற்ற இடத்தில் ஒரு பாழடைந்த கட்டடமும் இருந்தது அந்தக் கட்டடத்திற்கு கூரை இருக்கவில்லை.
அந்த இடத்திலும் நாம் பரிசோதனைகளை நடத்தினோம் செங்கல்லால் கட்டப்பட்டிருந்த அந்தப் பாழடைந்த கட்டிடத்தில் இருந்து 400 மீற்றர் தூரத்தில் பூவரசம் மரங்கள் இரண்டு இருந்தன.
அந்தப் பகுதியிலும் நாம் சோதனை செய்தோம். எங்களுக்கு கிடைக்கப்பெற்ற வரைபடத்தின்படியே இந்த சோதனைகள் இடம்பெற்றன.
பாழடைந்த வீட்டின் அத்திபாரப் பகுதியில் உரோமங்கள் சிலதை நாம் அவதானித்தோம் அதனை இலக்கம் 1 என நான் அடையாளப்படுத்தினேன் இலக்கம் 1 இலிருந்து இடப்பக்கமாக மேலும பல ரோமங்கள் இருந்தன அதனை இலக்கம் 2 என அடையாளமிட்டேன்.
தொடர்ந்து சோனை செய்யபின் இலக்கம் 2க்கு இடப்புறத்தில் மேலும் உரோமங்களை நான் அவதானித்தேன் அதனை இலக்கம் 3 என அடையாளமிட்டோம்.
இலக்கம் 3 இலிருந்து இடது புறததிலிருந்த செங்கற்றகாளல் எழுப்பப்பட்டிருந்த சுவரில் சிலந்தி வலைகள் இருக்க அதனருகே மேலும் ஒரு உரோமம் இருந்தது.
அதனை இலக்கம் 4 என அடையாளமிட்டோம். அந்த தடயங்களை வெவ்வேறாக அடையாளப்படுத்தி இன்று உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
இந்தத் தடையங்களை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தி சந்தேகநபர்களினுடைய இரத்த மாதிரிகளுடன் ஒப்பிட்டு விசாரணை செய்ய முடியும் என யோசனை செய்கிறேன் என்றார்.
இதனையடுத்து வித்தியா கொலை தொடர்பிலான விசாரணைகளின் தற்போதைய நிலை குறித்து நீதிவான் குற்றப் புலனாய்வு பிரிவினரை வினவினார்.
சந்தேக நபர்களின் தொலைபேசி இலக்கங்கள் தற்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களது வாக்குமூலங்களில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் அவற்றின் உண்மைத் தன்மை தொடர்பிலும் தற்போது விசாரிப்பதாக புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிசந்த டி சில்வா நீதிவானிடம் தெரிவித்தார்.
இந்தப் பதிலையடுத்து சந்தேக நபர்கள் ஏதேனும் கூறவிரும்புகின்றனரா என நீதிவான் கேட்டபொழுது,
அவர்களில் ஒருவர் தனக்கும் இந்த மிலேச்சத்தனமான செயலுக்குமிடையே எவ்விதத் தொடர்பும் இல்லை எனவும் சம்பவ தினம் தான் கொழும்பில் இருந்தாகவும் குறிப்பிட்டார்.
இவ்வேளையில், அது தொடர்பில் தற்போது புலனாய்வுப் பிரிவின் விசாரணைகள் நடத்தி வரும் நிலையில் அவ்வாறு கொழும்பில் இருந்ததற்கான சாட்சியங்கள் இருப்பின் அதனை இவ்வழக்கு மேல் நீதிமன்றுக்கு மாற்றப்படும்போது அங்கு முன்வைக்க முடியும் எனவும் சந்தேக நபர்கள் அடுத்து வரும் தவணைகளில் சட்டத்தரணிகளை வைத்து தமது தரப்பு நியாயங்களை முன்வைக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து ஒன்பது சந்தேகநபர்களையும் எதிர்வரும் யூன் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான் லெனின் குமார் அன்றைய தினம் வித்தியாவின் மரண விசாரணைகள் இடம்பெறும் எனவும் அதில் அவரது தாயாரும் சகோதரரும் சாட்சியமளிக்க சமூகமளிக்கும்படியும் குறிப்பிட்டார்.
வழக்கு நிறைவுற்றதன் பின்னர் சந்தேக நபர்கள் மன்றில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் யாழ் சிறைச்சாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.