இந்த மக்கள் தீர்ப்பாயத்தில் இனப்படுகொலை தொடர்பான எனது கருத்துக்களையும் வாதங்களையும் முன்வைக்க வாய்ப்பு வழங்கியமைக்கு எனது மனமார்ந்த நன்றி. என்னுடைய வாதங்களின் மையப்பொருள், இனப்படுகொலை தொடர்பாகச் சமூகவியலாளர்களும் மானுடவியலாளர்களும் இப்போது எத்தகைய எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள்? இந்த எண்ணங்கள் எவ்வகையில் ஈழத் தமிழ் இனப்படுகொலையை ‘இனப்படுகொலை’ என வரையறை செய்ய உதவக்கூடும்? என்ற இரு கேள்விகளையும் ஒட்டியதாகவே அமைந்துள்ளது.
மூன்று வெவ்வேறான ஆனால் தமக்குள் இணக்கமான உறவுகளைக் கொண்டிருக்கும் தளங்களிலிருந்து என்னுடைய பார்வையையும் வாதங்களையும் முன்வைக் கிறேன். முதலாவது தளம்: ஊடகவியலாளர் என்பது. 1984 – 1987 வரை முழுநேரப் பத்திரிகையாளனாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான Saturday Review என்ற ஆங்கில வார இதழில் பணிபுரிந்தேன். அதற்குப் பிற்பாடு கொழும்பிலிருந்து வெளியாகிய ‘சரிநிகர்’ இதழில் பத்து ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன். இந்தக் காலகட்டங்களில் ஏராளமான படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், சித்திரவதை என்பன பற்றி அறிக்கையிட்டிருக்கிறேன். ஏராளமான சாட்சியங்களையும் திரட்டியிருக்கிறேன். பல படுகொலைகளுக்கும் குண்டு வீச்சுகளுக்கும் வேறு வகையான தாக்குதல்களுக்கும் நேரடியான சாட்சியாகவும் இருந்திருக்கிறேன். என்னுடைய இரண்டாவது தளம்: பல்கலைக்கழகம், ஆய்வு, கல்வித்துறை சார்ந்தது. இப்போது கனடாவின் வின்ஸர் பல்கலைக்கழகத்தில் சமூகவியல், மானுடவியல், குற்றவியல் துறையில் ஒரு பேராசிரியராக இருக்கிறேன். இனத்துவ முரண்பாடுகள், இனப்படுகொலை, புலம்பெயர்வு, உலகமயமாக்கம் என்பன எனது ஆய்வுத் துறைகள். மூன்றாவது தளம்: நான் ஒரு கவிஞர், நாடகாசிரியன் என்பது. என்னுடைய அனுபவங்களும் சிந்தனையும் எண்ணங்களும் ஆய்வுகளுமிந்த மூன்று தளங்களையும் இடைவெட்டியதாகவே அமைகின்றன.
1956 – 2009 காலகட்டப் பகுதியில் ஈழத்தமிழர்கள்மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள், படுகொலைகள், பேரழிவு என்பன தொடர்பாகக் கணிசமான அளவு ஆதாரங்கள் இந்தத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கபட்டுள்ளன. அவற்றோடு ஐநா அவையின் சிறப்பு அறிக்கை, அம்னெஸ்டி இண்டர் நாஷனல் தொடர்ச்சியாகத் தொடுத்து வெளியிட்டுள்ள அறிக்கைகள், Human Rights watch, International crisis group அறிக்கைகள், சனல்-4 ஆவணப்படங்கள், இனப்படுகொலையில் தப்பிப் பிழைத்தோரின் வாக்குமூலங்கள் எனப் பெருமளவு ஆதாரங்கள் தீர்ப்பாயம் முன்னே உள்ளன. இத்தகைய ஆதாரங்களின் துணையோடு எவ்வகையில் இந்த ஆதாரங்களைச் சமூகவியல் மானுடவியல் நோக்கில் நாங்கள் புரிந்துகொண்டு விளக்கம் தர முடியும் என்பது எனது அக்கறைகளுள் தலையாய ஒன்றாகும்.
இனப்படுகொலை (Genocide) என்பது மிகவும் சிக்கலான பேரதிர்ச்சி தரும் ஒரு நிகழ்வு. இதனை வெறுமனே அனைத்துலகச் சட்டங்கள் ( International Law) மூலம் மட்டுமே புரிந்துகொள்ள முயல்வதும் வரையறை செய்ய முற்படுவதும் சாத்தியமில்லை என்பது எனது வாதம் ஆகும். நடைமுறை, செயல்பாடு என்ற வகையில் இனப்படுகொலையாளரைக் குற்றக் கூண்டுக்குள் சிறைபடுத்துவதற்குச் சட்டங்களும் சட்டத்துறை சார்ந்த நுண்மையான நிபுணத்துவமும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனினும் இனப்படுகொலை என்பது என்ன என வரையறை செய்வதிலும் பல்வேறு பட்ட வடிவங்களில் இடம் பெறும் இனப்படுகொலைகளை இனங்கண்டுகொள்வதிலும் அனைத்துலகச் சட்டத்துறை போதுமானதல்ல. எமக்குச் சமூகவியல், மானுடவியல், மானுடப் பண்பியல் சார்ந்த அணுகுமுறைகளும் அவசியம்.
1948இல் உருவாக்கப்பட்ட இனப்படுகொலை தொடர்பான ஜெனிவா உடன்படிக்கை இன்றைய காலத்துக்கேற்ற வகையில் புதுமையும் மாற்றமும் பெறவில்லை. அனைத்துலகச் சட்டங்களும் அவற்றின் எண்ணக் கருக்களும் மெல்ல மெல்லப் பரிணாமம் பெற்று வருகின்றன என்பது உண்மை எனினும் உலக நிகழ்வுகளும் போரும் வன்முறையும் படுகொலைகளும் மிக விரைவாகப் பெருகிவிட்டன என்பதையும் நாம் கவனத்திலெடுக்க வேண்டும்.
எனவே ஹெலன் ஃபெயின் (1990) என்னும் அறிஞரின் கருத்துக்களை வழிமொழிந்து இனப்படுகொலை என்பதைப் பின்வருமாறு வரைவிலக்கணம் செய்ய விரும்புகிறேன்.
தொடர்ச்சியாகவும் திட்டமிடப்பட்ட முறையிலுமொரு மக்கள் கூட்டத்தை அல்லது இனக்குழுமத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் சமூக நிலை சார்ந்தும் உயிர்முறை சார்ந்தும் அழித்தொழிக்க முனைவது அல்லது அழித்தொழிப்பது இனப்படுகொலை ஆகும்.
இப்போது நடைமுறையிலிருக்கும் அனைத்துலகச் சட்டங்கள், அனைத்துலக நிறுவனங்கள், ஐக்கிய நாடுகள் அவை, அனைத்துலக நாணய நிதியம் போன்ற அமைப்புகள் அனைத்துமே “நாடு – அரசு” என்பதை மட்டுமே கருத்திலும் கவனத்திலும் நடைமுறையிலும் கொண்டவை. நாடுகள் இல்லாத எந்த தேசிய இனம்/ இனக்குழுமம்/ மக்கள் கூட்டத்துக்கு இத்தகைய அமைப்புகளில் பிரதிநிதித்துவமும் கிடையாது, அவை பற்றிய அக்கறையுமில்லை. நாடற்ற தேசியங்கள், இடமற்ற இனக்குழுமங்கள், பல நாடுகளுக்கிடையே சிக்குண்டு கிடக்கும் புவியியலில் சிதறிக் கிடக்கும் குர்தீஷ், காஷ்மீரி, தமிழர் போன்றவர்களுக்கு இப்போதுள்ள அனைத்துலக நிறுவன அமைப்புகளில் இடம் கிடையாது. நவீன இனப்படுகொலைகள் இத்தகைய மக்களை நோக்கித்தான் குறி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாகத் தன்னாட்சி அல்லது தனிநாடு அல்லது தமக்கெனச் சுய நிர்ணய உரிமையைக் கோரும் மக்களை நோக்கியே இனப்படுகொலை ஏவப்பட்டுள்ளது என்பதை நாங்கள் அவதானிக்க முடியும்.
இதற்கு எராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. அவற்றுள் சிலவற்றைக் குறிப்பிடுகிறேன்.
பிரேஸிலின் பூர்விகக் குடிகள் (1957 – 1968); திபெத் (1959இலிருந்து இன்றுவரை); பயாஃபரா போர், நைஜிரியா (1967 – 1970); பரகுவேயில் அச்சே பூர்விகக் குடிகள் (1968 – 1978); பங்களாதேஷ் / கிழக்குப் பாகிஸ்தான் (1971); குவாட்டமாலா (1968 – 1996); ஈழத் தமிழர்கள் (1983 – 2009).
படுகொலைகள் இனத்துவச் சுத்திகரிப்பு போன்ற சொற்கள் / சொல் தொடர்களின் பயன்பாட்டுக்கு இன்றைய அனைத்துலகச் சட்டப் பொறிமுறைகளில் எந்த வகையான பயன்பாடும் இல்லை. இத்தகைய அநியாயங்களுக்கும் இனப்படுகொலைகளுக்கும் பொறுப்பாக இருப்பவை நாடுகளும் அரசுகளும்தான். இந்த நாடுகளும் அரசுகளும் சேர்ந்துதான் அனைத்துலகச் சட்டங்களையும் நீதி முறைமைகளையும் உருவாக்கியிருக்கிறார்கள். எனவே இவர்களிடமிருந்து இனப்படுகொலையாளர்களிடமிருந்து எவ்வாறு முற்றான நீதியை எதிர்பார்க்க முடியும்? ஒன்றில் மறுப்பார்கள்; அல்லது மறைப்பார்கள். அதுதான் அவர்கள் செய்வது. அனைத்துலகச் சட்டப் பொறிமுறைகள், நீதி முறைமை என்பன ஆண்டுக் கணக்காக இழுபடக் கூடியவை. அன்றே தீர்ப்பு வழங்கும் வலுவற்றவை. இதனால் இனப்படுகொலையாளர்களும் இனப்படுகொலை புரிந்த அரசுகளும் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும் தடயங்களை ஒழிக்கவும் நிறைய வாய்ப்பு விரும்பியோ விரும்பாமலோ வழங்கப்படுகிறது என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இந்தப் பின்னணியில் இரண்டு புதிய கருத்துருவங்களை அல்லது எண்ணக் கருக்களை நான் முன்வைக்க விரும்புகிறேன். இவற்றைப் பற்றி இனப்படுகொலை தொடர்பாகத் தொடர்ச்சியான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் அலெக்சாந்தர் லபான் ஹிண்டன் (2002), இஸ்ரேல் சார்ணி (1994) போன்றோர் நிறையவே எழுதியுள்ளனர். முதலாவது “இனப்படுகொலைக்கான முன்னோடித் தயாரிப்பு” என்பது. இரண்டாவது, இனப்படுகொலையை உள்நோக்கமாகக் கொண்ட கூட்டுப் படுகொலைகள். இந்த இரண்டு வழிமுறைகளும் பின்னர் இனப்படுகொலைக்கு நேரடியாகவே இட்டுச் செல்கின்றன.
‘இனப்படுகொலைக்கான முன்னோடித் தயாரிப்பு’ என்பது ஆண்டுக் கணக்காக மெல்ல மெல்ல இடம் பெற்று வருவது; மாற்று இனத்தவர்களின் குடியேற்றம், வெறுப்பு ஏற்படக் கூடிய வகையில் ‘மற்றவர்’களைப் பற்றிக் கல்வியிலும் பாடப்புத்தகங்களிலும் வரலாற்றெழுதலிலும் சித்திரிப்பது, திட்டமிட்ட ஒதுக்குமுறை, பண்பாட்டு அழிப்பு என்பன இந்த வகையுள் அடங்கும். இலங்கை அரசு தொடர்ச்சியாகவும் திட்டமிட்டும் இத்தகைய நடவடிக்கைகளில் 1948இலிருந்தே ஈடுபட்டு வந்தமை தொடர்பான ஆவணங்கள் தீர்ப்பாயத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 1956, 1958, 1977, 1983 நடந்தேறிய ஈழத் தமிழருக்கு எதிரான ‘கலவரங்கள்’ இந்த வழிமுறையின் தர்க்கரீதியான விளைவுதான்.
இனப்படுகொலையை உள்நோக்கமாகக் கொண்ட கூட்டுப்படுகொலைகள் வெறுப்பின் அடிப்படையில் நிகழ்த்தப்படுபவை. விடுதலைப் போராளிகள் அரசப் படையினர்மீது தாக்குதல் தொடுத்தமைக்குப் பதிலடியாகப் பொதுமக்களை அழிப்பதும் ஊர்களை எரித்து அழிப்பதும் இலங்கையில் பரவலாக நிகழ்ந்தவை. ஜூன் 1956 – டிசம்பர் 2008 காலப்பகுதியில் இனப்படுகொலையை உள்நோக்கமாகக் கொண்ட 145 கூட்டுப் படுகொலைகள் ஈழத் தமிழர் வாழும் பகுதிகளில் இடம் பெற்றுள்ளன. தமிழ் மக்களுக்கெதிரான “கலவரங்களை”யும் போர் உச்சம் பெற்றிருந்த காலத்தில் இடம்பெற்ற கூட்டுப் படுகொலைகளையும் நான் இந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை. இந்தக் கூட்டுப் படுகொலைகளில் 41 படுகொலைகள் இடம் பெற்ற ஊர்களுக்கு நான் சென்று தப்பிப் பிழைத்தவர்களை நேர்காணல் செய்திருக்கிறேன். அல்லது அந்தப் படுகொலைகள் பற்றி ஊடகவியலாளனாக விவரமாக எழுதியிருக்கிறேன். அல்லது சில படுகொலைகளுக்குச் சாட்சியாகவும் இருந்திருக்கிறேன். இவை பற்றிய முழு விவரங்களையும் பட்டியலையும் தீர்ப்பாயத்திடம் வழங்கியிருக்கிறேன். இந்தக் கூட்டுப் படுகொலைகளில் 82 வயதுள்ள முதியவரிலிருந்து எட்டுமாதக் குழந்தைகள்வரை அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல சந்தர்ப்பங்களில் தமிழர்களைத் தனியாகப் பிரித்து அழைத்துச்சென்று இலங்கைப் படையினர் அவர்களைப் படுகொலை செய்துள்ளனர்.
இத்தகைய படுகொலைகள் பற்றிய எந்தத் தகவலும் இலங்கையின் சிங்கள, ஆங்கில மொழிப் பத்திரிகைகளில் வெளி வந்ததில்லை. அப்படி வெளியாகியிருந்தாலும் ”பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்” என்ற வழமையான இலங்கை அரசின் உத்தியோகப் பூர்வமான அறிக்கையே வெளியாகும். 1982இலிருந்து இன்றுவரை இலங்கையின் ஊடக நிலைமை பெருமளவுக்கு இதுதான்.
இனப்படுகொலை தொடர்பாகச் சில புதிய பார்வைகளை ருவாண்டாவில் டூட்ஸி மக்களின் இனப்படுகொலை தொடர்பாக நியமிக்கப்பட்ட அனைத்துலகத் தீர்ப்பாயம் (மிசிஜிஸி) எமக்கு வழங்கியிருக்கிறது. இந்தத் தீர்ப்பாயம் 1994இல் நிறுவப்பட்டது. பாலியல் வன்கொடுமைகளும் வன்புணர்வும் இனப்படுகொலைக்கான கருவிகள் எனவும் குறிப்பிட்ட சில சூழல்களில் அவை இனப்படுகொலைதான் எனவும் மிசிஜிஸி தீர்ப்பு வழங்கியுள்ளது. இது தொடர்பாக இந்தத் தீர்ப்பாயத்தின் மதியுரைஞரும் சமூகவியலாளரும் அனைத்துலகச் சட்டத்துறையில் புலமையாளருமான போல்.ஜே. மக்னெரெல்லா அவர்கள் எழுதியுள்ள பலசிறப்புக் கட்டுரைகளை நான் தீர்ப்பாயத்திடம் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.
ஈழ இனப்படுகொலையிலும் பாலியல் வன்கொடுமைகளும் வன்புணர்வும் ஏராளமாக நிகழ்ந்துள்ளன என்பதற்கான ஆதாரங்கள் இப்போது குவியத் துவங்கியுள்ளன. இவற்றுள் பல இந்தத் தீர்ப்பாயத்துக்கு வழங்கப்பட்டுள்ளன. நண்பர் கலம் மக்ரேயின் ஆவணப்படங்களில் காட்டப்பட்ட சில காட்சிகள் இத்தகைய ஆதாரங்களை ஒரு சிறு துளி மட்டுமே என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.
ஈழத்தமிழர்கள்மீது நடத்தப்பட்டது இனப்படுகொலையே என்பது எனது முடிவான கருத்தாகும்